திங்கள், 27 ஜூலை, 2015

குஸைமா சம்பவமும் – புரிந்து கொள்ளப்படாத அடிப்படைகளும்.

குஸைமா சம்பவமும் – புரிந்து கொள்ளப்படாத அடிப்படைகளும்.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு கிராமவாசியிடம் குதிரையை விலைபேசி முடித்தார்கள். அந்தக் கிராமவாசி (அதற்கான கிரயத்தைப் பெறுவதற்காக) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பின் தொடர்ந்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விரைந்து நடக்க, அந்தக் கிராமவாசி மெதுவாக நடந்து வந்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விலைபேசி வாங்கியதை அறியாத மக்கள் அந்தக் கிராமவாசியிடம் கூடுதல் விலைக்கு கேட்கலானார்கள். அப்போது கிராமவாசி நபிகள் நாயகத்தை உரத்த சப்த்த்தில் அழைத்து நீங்கள் இதை வாங்குவதாக இருந்தால் வாங்கிக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் நான் மற்றவருக்கு விற்று விடுவேன் என்று கூறினார். உடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நின்றார்கள். நான் தான் உன்னிடம் விலை பேசி வாங்கி விட்டேனே என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்தக் கிராமவாசி அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் இதை உங்களுக்கு விற்கவில்லை என்றார். இல்லை நான் உன்னிடம் இதை விலைக்கு வாங்கி விட்டேன் என்று கூறினார்கள். அப்போது கிராமவாசி இதற்கு சாட்சியைக் கொண்டு வாருங்கள் என்று கூறினார். அப்போது குஸைமா என்ற நபித்தோழர் கிராமவாசியைப் பார்த்து நீ நபிகள் நாயகத்திடம் விற்றாய் என்று சாட்சி கூறுகிறேன் என்றார். பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குஸைமாவிடம் நீ எப்படி சாட்சி கூறினாய் என்று கேட்டார்கள். உங்கள் மீது உள்ள நம்பிக்கையால் சாட்சி கூறினேன் என்றார். அப்போது நபிகள் நாயகம் ஸல் அவர்கள் அவரது சாட்சியத்தை இருவரின் சாட்சியத்துக்கு சமமாக ஆக்கினார்கள்.

நூல்: அபூதாவூத் (3130), அஹ்மத் (20878)
நபியவர்களுக்காக கண்ணால் காணாத ஒன்றை கண்டதாக குஸைமா (ரலி) சாட்சி கூறினார் என்று வரும் ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டது, குர்ஆனுக்கு எதிரானது. இதனை ஏற்றுக் கொள்வது கூடாது என்று நாம் மக்களுக்கு மத்தியில் எடுத்து வைத்தோம்.
இதற்கு பதில் சொல்லப் போகிறோம் என்று கிளம்பியவர்கள் இஸ்லாத்தின் அடிப்படைகளை அறியாமல் உளறல்களையே பதிலாக பதிவு செய்வதைப் பார்க்கிறோம்.
உண்மையில் நபியை நாம் எவ்வாறு நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று நபி சொன்னார்களோ அதற்கு மாற்றமாக நாம் நம்பிக்கை கொண்டால் அதுவும் வழிகேடுதான்.
நாம் நபியை எவ்வாறு நம்பிக்கை கொள்ள வேண்டும் என்பதை நபி (ஸல்) அவர்கள் நமக்கு தெளிவாக போதித்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நிச்சயமாக நான் உங்களைப் போன்ற மனிதன்தான். யூகம் என்பது சரியாகவும் இருக்கும், தவறாகவும் இருக்கும். என்றாலும் அல்லாஹ் கூறினான் என்று நான் உங்களுக்குச் சொன்னால் அதில் நான் ஒரு போதும் பொய்யாகக் கூறவே மாட்டேன்.
இப்னு மாஜா (2461)
நான் எனது யூகத்தையே தெரிவித்தேன். யூகத்தை தெரிவித்ததைவைத்து என்மீது குற்றம் சாட்டாதீர்கள். ஆயினும், நான் உங்களிடம்அல்லாஹ்வைப் பற்றி ஏதேனும் சொன்னால் அதை நீங்கள் கடைப்பிடியுங்கள்.ஏனெனில், நான் வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ்வைப் பற்றி பொய்யுரைக்கமாட்டேன்'' என்று சொன்னார்கள்.
நூல்: முஸ்லிம் (4711)
"நான்ஒரு மனிதனே; உங்கள் மார்க்க விஷயத்தில் நான் உங்களுக்கு ஏதேனும் கட்டளையிட்டால் அதை நீங்கள் கடைப்பிடியுங்கள். (உலக விவகாரத்தில்) சொந்தக்கருத்தாக உங்களுக்கு நான் ஏதேனும் கட்டளையிட்டால் நானும் ஒரு மனிதனே'' என்றுசொன்னார்கள்.
(நூல்: முஸ்லிம் 4712)
நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான்; (சில நேரங்களில்) நீங்கள் மறந்துவிடுவதைப் போன்று நானும் மறந்துவிடு கின்றேன். அவ்வாறு நான் (எதையேனும்) மறந்துவிடும் போது எனக்கு (அதை) நினைவூட்டுங்கள்;
(புகாரி 401)
”நபியவர்கள் வஹியாக கூறும் விசயத்தில் ஒரு போதும் பொய்யாகக் கூறவே மாட்டார்கள்.
”நபியவர்கள் வஹியாக கூறும் விசயத்தில் ஒரு போதும் பொய்யாகக் கூறவே மாட்டார்கள்.
அதே நேரத்தில் நபி யூகமாக கூறும் விசயத்தில் அவர்களை அறியாமல் தவறாகவும் கூறுவார்கள்” . மனிதன் என்ற அடிப்படையில் இறைத்தூதருக்கும் தவறுகள் ஏற்படும்.
இதுதான் மேற்கண்ட நபி மொழிகள் நபியைப் பற்றி நாம் எவ்வாறு நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று நமக்கு போதிக்கும் அடிப்படை .
நபி யூகமாகச் சொன்னால் அது சரியாகவும் இருக்கலாம். தவறாகவும் இருக்கலாம்.
யூகம் என்றால் என்ன?
சந்தேகத்திற்கிடமில்லாமல் உறுதியான சாட்சிகளின் மூலம் நிரூபிக்கப்படாத அனைத்துமே யூகம்தான்.
சந்தேகத்திற்கிடமில்லாமல் உறுதியான சாட்சிகளின் மூலம் நிரூபிக்கப்படாத அனைத்துமே யூகம்தான்.

குஸைமா சம்பவத்தில் ”நீ எனக்கு விற்று விட்டாய்” என்று இறைத்தூதர் கூறியிருந்தாலும் அது நபியின் யூகம்தான். ஏனெனில் அந்த வார்த்தை இறைச் செய்தியின் மூலம் நபி கூறிய வார்த்தைகள் அல்ல.
மேலும் அவ்வாறு நபி கூறியதை கண்ணால் கண்ட சாட்சிகளும் கிடையாது.
நம் உயிரினும் மேலான இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மறதியின் காரணமாக தான் மறந்து செய்ததைக் கூட சரியாகச் செய்த்தாக எண்ணியுள்ளார்கள்.
ஒரு தடவை நான்கு ரக்அத் தொழுகையை இரண்டாக தொழுகை நடத்திவிடுகிறார்கள்.
அப்போது துல்யதைன் (ரலி) அவர்கள் எழுந்து
"தொழுகை(யின் ரக்அத் ஏதேனும்) குறைக்கப்பட்டுவிட்டதா, அல்லாஹ்வின் தூதரே! அல்லது தாங்கள்தாம் மறந்துவிட்டீர்களா?'' என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,
"இவற்றில் எதுவுமே நடக்கவில்லை''
என்று நபி கூறினார்கள்
(முஸ்லிம் 1001 ஹதீஸின் கருத்து)
மற்றொரு அறிவிப்பில் ”துல்யதைன்” அவர்கள் சுட்டிக்காட்டிய நேரத்தில்
”தொழுகை சுருக்கப்படவுமில்லை நான் மறக்கவுமில்லை”
என்ற நபி கூறியதாக வந்துள்ளது. (நஸாயீ 1213)
பிறகு மக்கள் ”நீங்கள் மறந்து விட்டீர்கள்” என்று கூறிய பிறகுதான் நபி ஏற்றுக் கொள்கிறார்கள்.
இங்கே நாம் சிந்திக்க வேண்டிய விசயம். உத்தம தூதர் (ஸல்) ஒரு போதும் பொய் கூற மாட்டார்கள். ஆனால் எல்லா மனிதர்களுக்கும் ஏற்படுகின்ற மறதி மற்றும் கவனக் குறைவினால் அவர்களும் தவறாகச் செய்வார்கள். தவறாகச் செய்து விட்டு சரியாகத்தான் செய்தேன் என்றும் கூறுவார்கள்.
மறதியினால் ஒருவருக்கு இவ்வாறு ஏற்பட்டால் அவர் பொய்யரும் கிடையாது? அல்லாஹ்விடத்தில் குற்றம் பிடிக்கப்படவும் மாட்டார்?
நபியவர்கள் நான்கை இரண்டாக தொழவைத்துவிட்டு நான்குதான் வைத்தேன் என்றார்கள். பார்த்த சாட்சிகள் தவறைச் சுட்டிக்காட்டியதினால் நபி ஏற்றுக் கொண்டார்கள். நபியவர்கள் உண்மையாளர் என்பதற்கு இது அற்புதச் சான்று
ஆனால் குஸைமா சம்பவத்தில் அந்தக் கிராமவாசியிடம் ”நீ எனக்கு விற்று விட்டாய்” என்று நபி கூறுகிறார். இது உண்மையில் நடந்தும் இருக்கலாம். அல்லது புரிந்து கொள்வதில் ஏற்பட்ட பிழையாகவும் இருக்கலாம்.
இதனைப் கண்களால் பார்த்த சாட்சி யாருமே கிடையாது.
இப்போது நபி கூறுவது உண்மைதான்? அவர்கள் மறதியினால் கூட பிழையாக கூறவே மாட்டார்கள் என்று யாராவது வாதிக்க இயலுமா?
அப்படி வாதிட்டால் அது குர்ஆன் , மற்றும் நபிவழியின் அடிப்படையில் சரியான நம்பிக்கையா? இணைவைப்பு நம்பிக்கையா?
குறிப்பிட்ட செய்தியில் ”நபியவர்களுக்கும் கிராமாவாசிக்கும் மத்தியில் நடந்த வார்த்தைப் பரிமாற்றங்களில் சுற்றியிருந்த நபித்தோழர்களும் ”நபி பொய் கூறமாட்டார்” என்று சொன்னார்களே தவிர ”கிராமவாசி நபிக்கு விற்று விட்டார்” என்று எந்த நபித்தோழருமே சாட்சி சொல்லவில்லை.
என்ன காரணம் ”காணாத ஒன்றைக் கண்டதாகக் கூறுவது பொய்சாட்சி. பொய்சாட்சி பாவங்களிளெல்லாம் மாபெரும் பாவம், நிரந்தர நரகத்திற்குரிய பாவம் என்பதை அனைத்து நபித்தோழர்களும் விளங்கியிருந்தார்கள். இதன் காரணமாகத்தான் ”நபி பொய் கூற மாட்டார் ” என்று கூறிய நபித்தோழர்கள் ”அதனை கண்ணால் கண்டதாக சாட்சி கூறவில்லை.
நபி (ஸல்) அவர்கள் மார்க்க விடயத்தில் அல்லாஹ்விடம் இருந்து பெற்றுக் கூறுவதினால் அதில் ஒரு போதும் பிழையே ஏற்படாது. ஆனால் உலக விடயத்தில் மனிதப் பலவீனங்கள் அவர்களிடமும் ஏற்படும். இதுதான் நபி போதித்த அடிப்படை
இந்த அடிப்படைக்கு மாற்றமாக உலக விடயத்திலும் நபியிடம் தவறே ஏற்படாது என்று வாதிப்பது நம்புவது நபி போதித்த அடிப்படைக்கு எதிரானதாகும்.
இந்த தவறான அடிப்படையைத்தான் குஸைமா தொடர்பான செய்தியை நியாயப்படுத்தும் அறைகுறைகள் பதிலாகக் கூறுகின்றனர்.
நபியவர்கள் கூறுவது உண்மைதான் என்று இவர்கள் நம்புகிறார்கள் என்பது மட்டுமே இவர்களின் பதிலாக உள்ளது.
ஆனால் நபியவர்கள் உண்மையை மட்டும் தான் கூறுவார்கள். ஒரு போதும் பொய்யே கூறமாட்டார்கள். என்றாலும் மனிதன் என்ற அடிப்படையில் நபியிடமும் பிழைகள் ஏற்படும். எனவே இந்தச் சம்பவத்தில் கண்ணால் கண்ட சாட்சிகள் இல்லாத காரணத்தினால் இறைவனைத் தவிர உண்மை நிலையை யாரும் அறியமுடியாது. எனவே உண்மையை முடிவு செய்யும் அதிகாரத்தை நாம் கையில் எடுப்பது கூடாது என்கிறோம்.
நபியவர்கள் குதிரையை தனதாக்கிக் கொள்வதற்காக குஸைமாவின் சாட்சியை இரண்டு சாட்சியாக ஆக்கவில்லை. மாறாக தான் உண்மையாளர் என்று நிரூபிப்பதற்காகவே அப்படிச் செய்தார்கள் என்றும் வாதிக்கின்றனர்.
கொடுக்கல் வாங்கல் பிரச்சினைகளில் சாட்சி என்பதே ஒரு பொருள் யாருக்கு என்று தீர்மானிப்பதற்குத்தான்.
எது எப்படி என்றாலும் கண்ணால் காணாத ஒன்றை சாட்சியாகக் கூறலாமா?
கண்ணில் காணாத ஒன்றை கண்ணால் கண்டதாக சாட்சி கூறுவது அழித்தொழிக்கும் பெரும்பாவங்களில் ஒன்றாகும்.
அபூபக்ரா நுஃபைஉ பின் ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெரும்பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என்று மூன்று முறை கேட்டார்கள். நாங்கள், ஆம், அல்லாஹ்வின் தூதரே! (அறிவியுங்கள்) என்று கூறினோம். நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வுக்கு இணை வைப்பதும், பெற்றோரைப் புண்படுத்துவதும் என்று சொல்லிவிட்டு சாய்ந்து கொண்டிருந்த அவர்கள் எழுந்து அமர்ந்து, அறிந்து கொள்ளுங்கள்: பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்தான்); பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்தான்) என்று கூறினார்கள். இதை அவர்கள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். (இதைக் கண்ட) நான் அவர்கள் நிறுத்திக்கொள்ளக் கூடாதா? என்றேன் (
(புகாரி (5976)
அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெரும்பாவங்கள் தொடர்பாகக் குறிப்பிட் டார்கள்' அல்லது அவர்களிடம் பெரும் பாவங்கள் பற்றிக் கேட்கப்பட்டது'. அப்போது நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வுக்கு இணைவைப்பது, கொலை செய்வது, பெற்றோரைப் புண்படுத்துவது ஆகியன (பெரும்பாவங்களாகும்) என்று கூறிவிட்டு, பெரும்பாவங்களிலேயே மிகப் பெரும் பாவத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என்று கேட்டார்கள். பொய் பேசுவது' அல்லது பொய் சாட்சியம்' (மிகப் பெரும் பாவமாகும்) என்று சொன்னார்கள்
(புகாரி 5977)
அபூஉமாமா அல்ஹாரிஸீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "யார் (பொய்ச்) சத்தியம் செய்து ஒரு முஸ்லிமின் உரிமையை அபகரித்துக்கொள்கிறாரோ அவருக்கு அல்லாஹ் நரகத்தைக் கட்டாயமாக்கி விட்டான்; சொர்க்கத்தை அவருக்குத் தடை செய்துவிட்டான்'' என்று கூறினார்கள்.
அப்போது ஒரு மனிதர், "அது ஒரு சிறிய பொருளாய் இருந்தாலுமா, அல்லாஹ்வின் தூதரே?'' என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மிஸ்வாக் மரத்தின் ஒரு குச்சியாக அது இருந்தாலும் சரியே!'' என்று பதிலளித்தார்கள்
முஸ்லிம் (5977)
பொய்சாட்சி மூலம் பிறர் பொருளை தனதாக்குவது மிகப் பெரும் பாவம் என்றுரைத்த இறைத்தூதர் அந்த பொய்சாட்சியை கூறியவரின் சாட்சியை இரண்டு சாட்சிகளுக்கு நிகராக ஆக்குவார்களா? இவ்வளவு பெரும் பாவத்தை ஒரு நபித்தோழர் செய்வாரா?
இறைத்தூதர் காட்டிய இறைச்செய்திக்கு மாற்றமாக இறைத்தூதர் நடந்தார் என்று நபிமீது இட்டுக்கட்டி இந்தச் செய்தியை நியாயப்படுத்தப்போகிறீர்களா?
அல்லது நபியையும், நபித்தோழரையும் இழிவு படுத்தும் இந்தச் செய்தி இட்டுக்கப்பட்டது என்றுரைத்து ஈமானைப் பாதுகாத்துக் கொள்ளப் போகிறீர்களா?
அல்லாஹ் போதுமானவன்.




Abdul naser misc


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக