வெள்ளி, 22 ஜனவரி, 2016

சூனியத்தை நம்புவது இணைவைத்தலே

சூனியத்தை நம்புவது இணைவைத்தலே.


சூனியத்தால் பாதிப்பு ஏற்படும் என நம்புவது 
இணைவைத்தலே!

சூனியத்தால் பாதிப்பு ஏற்படும் என்று நம்புவது அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் குற்றமாக அமைந்துள்ளது.

அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கக் கூடாது என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம்.

இரண்டு கடவுள்களில் அல்லாஹ்வும் ஒருவன் என்றோ, மூன்று கடவுள்களில் அல்லாஹ்வும் ஒருவன் என்றோ நம்புவது தான் இணை கற்பித்தல் என்று சிலர் நினைக்கின்றனர். இதுவும் இணைகற்பித்தல் தான் என்றாலும் இணைகற்பித்தல் இதை விட விரிவான அர்த்தம் கொண்டதாகும்.

அல்லாஹ்வுக்கு ஏராளமாக பண்புகள் உள்ளன. அந்தப் பண்புகளில் ஏதாவது ஒரு பண்பு அல்லாஹ்வுக்கு இருப்பது போல் ஒரு மனிதனுக்கு உள்ளது என்று ஒருவன் நம்பினால் அந்தப் பண்பு விஷயத்தில் அல்லாஹ்வைப் போல் அந்த மனிதனைக் கருதியவர்களாக ஆகிவிடுவான். அதாவது அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தவனாகி விடுவான்.
இதைப் பின்வரும் வசனங்களில் இருந்து நாம் அறிந்து கொள்ள இயலும்.

அவன் நமக்கு உதாரணம் கூறுகிறான். அவனை (நாம்) படைத்திருப்பதை மறந்து விட்டான். "எலும்புகள் மக்கிய நிலையில் அதை உயிர்ப்பிப்பவன் யார்?'' என்று கேட்கிறான்.
திருக்குர்ஆன் 36:78

அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்.
திருக்குர்ஆன் 42:11

அவனுக்கு நிகராக யாருமில்லை.
திருக்குர்ஆன் 112:4

அல்லாஹ்வைப் போல் கேட்பவன் இல்லை. அவனைப் போல் பார்ப்பவன் இல்லை. அவனைப் போல் செயல்படுபவன் இல்லை என்பது இதன் கருத்தாகும்.
அல்லாஹ் ஒரு மனிதனின் காலை முறிக்க நினைக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். பெரிய அரிவாளை எடுத்து வந்து அந்த மனிதனின் காலை அல்லாஹ் வெட்ட மாட்டான். அந்த மனிதனைத் தொடாமலே எந்தக் கருவியையும் பயன்படுத்தாமலே முறிந்து போ என்பான். அது முறிந்து விடும்.
ஆனால் ஒரு மனிதன் இன்னொரு மனிதனின் காலை முறிக்க நினைத்தால் அரிவாளையோ, உருட்டுக்கட்டையையோ எடுத்து வந்து காலைத் தாக்கியே முறிக்க முடியும்.

அல்லாஹ் ஒருவனை மன நோயாளியாக ஆக்க நினைத்தால் மன நோயாளியாக ஆகு என்பான். உடனே அந்த மனிதன் மன நோயாளியாக ஆகிவிடுவான். ஆனால் ஒரு மனிதன் இன்னொரு மனிதனை மன நோயாளியாக ஆக்க நினைத்தால் அதற்குரிய மாத்திரைகளை அல்லது மருந்தை அவனுக்குள் செலுத்தி, அல்லது மூளை சிதையும் அளவுக்கு தலையில் தாக்கியே மன நோயாளியாக ஆக்க முடியும்.
இந்த விஷயத்தில் அல்லாஹ்வுக்கும், மனிதனுக்கும் உள்ள வித்தியாசம் பளிச்சென்று தெரிகிறது.

அவன் எதைச் செய்ய நாடுகிறானோ ஆகு என்பான்; உடனே ஆகிவிடும் என்று அல்லாஹ் திருக்குர்ஆனில் 2:117, 3:47, 3:59, 6:73, 16:40, 19:35, 36:82, 40:68, ஆகிய வசனங்களில் தெளிவுபடக் கூறுகிறான்.

ஆகு என்று சொல்லி ஆக்கும் வல்லமை அல்லாஹ்வுக்கு மட்டுமே உண்டு. ஆனால் சூனியத்தால் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்று நம்புவோர் சூனியக்காரனை எந்த இடத்தில் வைக்கிறார்கள்?
சூனியக்காரன் உருட்டுக்கட்டையால் காலை முறிப்பான் என்று நம்புவதில்லை. அல்லாஹ்வைப் போல் ஆகு என்று கட்டளையிட்டு பாதிப்பை ஏற்படுத்துவான் என்று தான் நம்புகிறார்கள்.

சூனியக்காரன் எந்த மருந்தையும் செலுத்தாமல் ஆகு எனக் கூறி ஒருவனைப் பைத்தியமாக ஆக்க வல்லவன் என்று நம்புகிறார்கள்.

ஒரு மனிதன் இன்னொரு மனிதனைக் கவலைப்படுத்த, காயப்படுத்த உலகில் எந்த வழிமுறைகள் உள்ளனவோ அவற்றில் எதையும் பயன்படுத்தாமல் மந்திர சக்தியின் மூலமாக ஒருவன் மற்றவனுக்குப் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்று நம்புகின்றனர்.

உதாரணமாக ஒரு மனிதன் இன்னொரு மனிதனைக் கத்தியால் குத்தலாம். அல்லது இருவருமே கத்தியால் குத்திக் கொள்ளலாம். இதனால் ஒருவருக்கோ அல்லது இருவருக்குமோ பாதிப்பு ஏற்படும்.
இது போன்று ஒருவருக்கொருவர் பாதிப்புகளை ஏற்படுத்தலாம்..

ஒருவர் இன்னொருவரைத் திட்டுகின்றார்; அல்லது அவதூறு சொல்கின்றார் என்றால், யாரைத் திட்டுகின்றாரோ அல்லது அவதூறு சொல்கின்றாரோ அவரைக் கவலையடையச் செய்யலாம்.

இது போன்ற வழிகளில் ஒரு மனிதன் இன்னொரு மனிதன் மீது பாதிப்பை ஏற்படுத்தலாம். இதைச் செய்வதற்காக தனியாக கற்றுத்தேறும் அவசியம் இல்லை. யாருக்கு எதிராக யாரும் இதைச் செய்ய முடியும்.

உலகத்தில் மனிதர்கள் சக மனிதர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்துவதற்கு அல்லாஹ் எந்த வழிமுறையை ஏற்படுத்தியுள்ளானோ அந்த வழிமுறைகள் தவிர மற்ற அனைத்து வழிமுறைகளும் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவை.

பாதிப்பு ஏற்படுத்தப்பட வேண்டிய நபரைத் தொடாமல், அருகில் வராமல், அவரைப் பார்க்காமல் எங்கோ ஓரிடத்தில் இருந்து கொண்டு அவருக்குப் பாதிப்பை ஏற்படுத்துவார் என்று நம்புகின்றனர்.

யாருக்குப் பாதிப்பை ஏற்படுத்த வேண்டுமோ அவரின் சட்டை, வியர்வை, காலடி மண், தலைமுடி இது போன்றவற்றை வைத்துக் கொண்டு அதனை பொம்மை போல் செய்து பாதிப்பு ஏற்படுத்த வேண்டியவரின் பெயரை அந்தப் பொம்மைக்கு வைத்து அந்த பொம்மையின் வயிற்றில் குத்தினால் அவரது வயிற்றுக்கு பாதிப்பு ஏற்படும். அந்தப் பொம்மையின் கண்ணைக் குத்தினால் இவரின் கண்ணுக்கு பாதிப்பு ஏற்படும். இது தான் சூனியம் என்று மக்கள் நம்புகின்றனர். உடலுக்கு மட்டுமின்றி மனதிலும் பாதிப்பை ஏற்படுத்த சூனியக்காரனால் இயலும் என்று நம்புகின்றனர்.

ஒருவருக்குப் பாதிப்பை ஏற்படுத்த எந்த வழிமுறைகளை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளானோ அவற்றில் எந்த ஒன்றையும் சூனியக்காரன் செய்ய மாட்டான்.
சூனியத்தால் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்று நம்பக் கூடியவர்கள் சூனியக்காரன் அல்லாஹ்வைப் போல் செயல்படும் திறன் படைத்தவன் என்று தான் நம்புகிறார்கள்.

சூனியக்காரன் தனது சுயமான ஆற்றலால் இப்படிச் செய்யவில்லை. அல்லாஹ் அவனுக்கு அந்த ஆற்றலைக் கொடுத்துள்ளதால் தான் அப்படிச் செய்ய முடிகிறது. இது எப்படி இணைவைத்தலாகும்? என்று விதண்டாவாதம் செய்கின்றனர்.

நாங்களும் தவ்ஹீத்வாதிகள் தான் என்று சொல்லிக் கொள்ளும் கூட்டத்தினரும் இதே பதிலைச் சொல்லி இணைவைப்பை நியாயப்படுத்தப் பார்க்கின்றனர்.
இந்த வாதத்தைப் பார்க்கும் போது இவர்கள் ஏகத்துவத்தின் அரிச்சுவடியைக் கூட படிக்கவில்லை என்பது தெளிவாகிறது.

எல்லா படைப்பினங்களின் செயல்பாடுகளும் அல்லாஹ் கொடுத்த அடிப்படையில் நடப்பவைதான்.
நாம் பேசுகிறோம்; பார்க்கிறோம்; கேட்கிறோம்; உண்ணுகிறோம்; பருகுகிறோம்; ஓடுகிறோம்; ஆடுகிறோம்; இல்லறத்தில் ஈடுபடுகிறோம் என்றால் அவை அனைத்துமே நாமாக உருவாக்கிக் கொண்டதல்ல. அல்லாஹ் கொடுத்த அடிப்படையில் தான் இவற்றை நாம் செய்ய முடிகிறது.

ஆனால் அல்லாஹ் மனிதனுக்கு ஏராளமான ஆற்றலைக் கொடுத்து இருந்தாலும் ஒருக்காலும் தனக்கு இருப்பது போன்ற ஆற்றலை யாருக்கும் கொடுக்க மாட்டான். எனக்கு இணை இல்லை என்று அல்லாஹ் சொல்வதில் இது அடங்கியுள்ளது.

"சந்ததியை ஏற்படுத்திக் கொள்ளாத அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஆட்சியில் அவனுக்குப் பங்காளி இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்லை'' என்று (முஹம்மதே!) கூறுவீராக! அவனை அதிகம் பெருமைப்படுத்துவீராக!
திருக்குர்ஆன் 17:111

அவனுக்கே வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் உள்ளது. அவன் பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அதிகாரத்தில் அவனுக்கு எந்தப் பங்காளியும் இல்லை. அவன் ஒவ்வொரு பொருளையும் படைத்தான். அதைத் திட்டமிட்டு அமைத்தான்.
திருக்குர்ஆன் 25:2

தனக்கே உரித்தான எந்தத் தன்மையையும் யாருக்கும் அல்லாஹ் கொடுக்க மாட்டான் என்பதை அழகான உதாரணத்தின் மூலம் அல்லாஹ் மேலும் விளக்குவதைப் பாருங்கள்!

உங்களில் ஒருவரை விட மற்றவரை செல்வத்தில் அல்லாஹ் சிறப்பித்திருக்கிறான். (செல்வத்தால்) சிறப்பிக்கப்பட்டோர் தமது செல்வத்தைத் தமது அடிமைகளிடம் கொடுத்து, தங்களுக்குச் சமமாக அவர்களை ஆக்குவதில்லை. அல்லாஹ்வின் அருட்கொடையையா இவர்கள் நிராகரிக்கிறார்கள்?
திருக்குர்ஆன் 16:71

அல்லாஹ் மனிதர்களுக்கு எந்த அளவு ஆற்றலை அளிப்பான் என்று இங்கே அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். அதாவது தனக்கே உரித்தான எந்தத் தன்மையையும் அல்லாஹ் யாருக்கும் கொடுக்கவே மாட்டான் என்பதுதான் அந்த அடிப்படை.
இந்த அடிப்படையை விளங்கிக் கொண்ட யாரும் தன்னைப் போன்று செயல்படும் ஆற்றலை அல்லாஹ் சூனியக்காரனுக்கு வழங்குவான் என்று சொல்லவே மாட்டார்.

இந்த மனிதன் குழந்தையைக் கொடுப்பான்; ஆனால் அவனாகக் கொடுப்பதில்லை. அல்லாஹ் கொடுத்த ஆற்றல் மூலம் இதைச் செய்கிறான் என்று சொல்லி விட்டால் அது இணைவைத்தல் இல்லை என்று ஆகிவிடுமா? என்பதை இவர்கள் சிந்திக்க வேண்டும்.
ஒருவன் சூரியனை வணங்குகிறான். சூரியனுக்கு சுயமான ஆற்றல் இல்லை. ஆனால் அல்லாஹ் சூரியனுக்கு அந்த ஆற்றலை வழங்கியுள்ளான் என்று சேர்த்துக் கொண்டால் அது இணை வைத்தல் இல்லை என்று ஆகிவிடுமா?

மக்காவில் வாழ்ந்த காஃபிர்களும் அல்லாஹ்வை நம்பினார்கள். அத்துடன் வேறு சிலரையும் வணங்கி வந்தனர்.

இவ்வாறு மற்றவர்களை வணங்கும் போது அவர்களெல்லாம் கடவுள்கள் என்ற நம்பிக்கையோ, அவர்களுக்கு அனைத்து ஆற்றலும் உண்டு என்ற நம்பிக்கையோ அவர்களிடம் இருக்கவில்லை.
எனவே இது இணைகற்பித்தலில் சேராது என்று வாதிட்டு அவர்களும் இதே நியாயத்தைத் தான் சொன்னார்கள். அல்லாஹ் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

மேலும் சூனியக்காரனுக்கு எந்த ஆற்றலும் இல்லை என்று திருக்குர் ஆன் தெளிவாகச் சொல்கிறது.
அவர்கள் செய்திருப்பது சூனியக்காரனின் சூழ்ச்சி. (போட்டிக்கு) வரும் போது சூனியக்காரன் வெற்றி பெற மாட்டான்''
(அல்குர்ஆன் 20 : 69)

"நீங்கள் கொண்டு வந்திருப்பது சூனியமாகும். அல்லாஹ் அதை ஒழிப்பான். குழப்பவாதிகளின் செயலை அல்லாஹ் மேலோங்கச் செய்வதில்லை''
(அல்குர்ஆன் 10 : 81. 82)

மழையைப் பொழிவிக்கும் அதிகாரம்

அல்லாஹ்விற்குரியது. இந்த ஆற்றல் நட்சத்திரத்திற்கு இருப்பதாக நம்பும் நட்சத்திர ஜோசியத்தை சூனியக்கலை என்றும், அவ்வாறு நம்புபவர்கள் காஃபிர்கள் என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : யார் நட்சத்திர ஜோசியத்தைக் கற்றுக் கொள்கிறாரோ அவர் அதன் மூலம் சூனியத்தின் ஒரு பகுதியைத் தவிர வேறெதையும் கற்றுக் கொள்ள மாட்டார். (கற்பதை) அதிகப்படுத்துபவன் (சூனியத்தை கற்பதை) அதிகப்படுத்திக் கொள்கிறான்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : நஸாயீ (2000)

ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹுதைபியா எனுமிடத்தில் எங்களுக்கு சுப்ஹுத் தொழுகை தொழுவித்தார்கள். அன்றிரவு மழை பெய்திருந்தது. தொழுது முடித்ததும் மக்களை நோக்கி நேராகத் திரும்பி, "உங்கள் இறைவன் என்ன கூறினான் என்பதை நீங்கள் அறிவீர்களா?'' என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்'' என்று கூறினர். அப்போது "என்னை நம்பக் கூடியவர்களும் (என்னை) மறுக்கக் கூடியவர்களுமாக என் அடியார்கள் (இரு பிரிவினராக) உள்ளனர். "அல்லாஹ்வின் தயவாலும் அவன் கருணையாலும்தான் நமக்கு மழை பொழிந்தது' எனக் கூறியவர்கள் என்னை நம்பி இராசிபலனை மறுத்தவர்களாவர். இன்ன இன்ன ராசிபலனால் (எங்களுக்கு மழை பொழிந்தது) எனக் கூறியவர்கள் என்னை மறுத்து, ராசிபலனை நம்பியவர்களாவர்' என இறைவன் கூறினான்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : புகாரி 1038

இராசிபலன் என்பது சூனியக்கலை ஆகும். அது ஒரு ஏமாற்று வித்தையாகும். அதனால் நன்மையோ தீமையோ ஏற்படும் என்று நம்புவது இணைவைத்தலாகும் என்பதை மேற்கண்ட நபிமொழிகளிலிருந்து நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : விதியை மறுப்பவன், நிரந்தரமாக மது அருந்துபவன், சூனியத்தை உண்மை என்று நம்புபவன், (பெற்றோருக்கு) மாறு செய்பவன் ஆகியோர் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள்.
அறிவிப்பவர் : அபுத்தர்தா (ரலி) நூல் : அஹ்மது (26212)

எனவே சூனியத்தினால் பாதிப்பு ஏற்படும் என்று நம்புவது இணைவைப்புக் கொள்கையாகும். இது போன்ற இணைவைப்புக் கொள்கையிலிருந்து அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக.


https://www.facebook.com/thakbeermulakkam/videos/1742268776002203/

வியாழன், 7 ஜனவரி, 2016

கேள்வி கேட்பது குற்றமா?

கேள்வி கேட்பது குற்றமா?
தொடர் 1
எம். முஹம்மது சலீம், MISc, மங்கலம்.
இஸ்லாம் என்பது அறிவுப்பூர்வமான மார்க்கம். ஏன்? எதற்கு? எப்படி? என்று சிந்தித்து தெளிவு பெறுவதை ஊக்குவிக்கும் சித்தாந்தம். இத்தகைய சிறப்பான கொள்கையில் இருக்கும் சிலரோ, மார்க்கம் குறித்து கேள்வி கேட்பதை எதிர்க்கிறார்கள், தடுக்கிறார்கள். திருமறையை, நபிமொழியைப் படித்து சந்தேகத்தை கேட்கும் தன்மை வழிகேட்டில் விட்டுவிடும் என்று பாமர மக்களை பயமுறுத்துகிறார்கள்.
தங்களுடைய கருத்துக்கு ஆதாரம் என்று சில செய்திகளை எடுத்துக் காட்டுகிறார்கள். அந்தச் செய்திகள் பற்றிய விளக்கத்திற்கு முன்பாக, மார்க்கம் தொடர்பான கேள்விகளைத் தொடுப்பதற்கு ஏதேனும் தடை இருக்கிறதா என்பது பற்றி சுருக்கமாகக் காண்போம்.
கேள்வி ஞானத்தை ஊக்குவிக்கும் இஸ்லாம்
அல்லாஹ் ஒருவன் மட்டுமே அனைத்தையும் அறிந்தவன். எல்லாம் தெரிந்த மனிதர் யாருமில்லை. அனைவருக்கும் அனைத்து விசயங்களும் தெரியாது. சிலருக்குத் தெரியாமல் இருப்பதை சிலர் தெரிந்து வைத்திருப்பார்கள். நமக்குத் தெரியாத செய்திகளை பிறரிடம் கேட்டு தெரிந்து கொள்வதில் எந்தவொரு தவறும் இல்லை. முக்கியமான விசயங்களை தெரிந்தவர்களிடம் கேள்வி கேட்டு தெரிந்து கொள்வது என்பது பாராட்டுதலுக்குரிய பண்பு.
இந்த வகையில், ஒருவர் மார்க்கம் பற்றிய சந்தேகங்களை மற்றவர்களிடம் கேள்வி கேட்டு கற்றுக் கொள்வதை இஸ்லாம் ஒருபோதும் எதிர்க்கவில்லை. மாறாக, இதற்கு அனுமதி கொடுத்து ஆர்வமூட்டும் வகையில் திருக்குர்ஆன் வசனங்கள் அமைந்து இருக்கின்றன. அறிந்து கொள்ள சிலவற்றை மட்டும் காண்போம்.
(முஹம்மதே!) உமக்கு முன் ஆண்களையே தூதர்களாக அனுப்பினோம். அவர்களுக்குத் தெளிவான சான்றுகளுடனும், ஏடுகளுடனும் நமது தூதுச் செய்தியை அறிவித்தோம். நீங்கள் அறியாதிருந்தால் அறிவுடையோரிடம் கேளுங்கள்! மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.
(திருக்குர் ஆன் 16:43, 44)
(முஹம்மதே!) உமக்கு முன் ஆண்களையே தூதர்களாக அனுப்பினோம். அவர்களுக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். நீங்கள் அறியாதிருந்தால் அறிவுடையோரிடம் கேளுங்கள்!
(திருக்குர் ஆன் 21:7)
எத்தனை தெளிவான சான்றுகளை அவர்களுக்கு வழங்கியிருந்தோம் என இஸ்ராயீலின் மக்களிடம் கேட்பீராக! அல்லாஹ்வின் அருட்கொடை தன்னிடம் வந்த பின்பு மாற்றி விடுபவனைத் தண்டிப்பதில் அல்லாஹ் கடுமையானவன்.
(திருக்குர் ஆன் 2: 211)
கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வசனங்கள்
இன்றைய காலத்தைப் போலவே, நபிகளார் காலத்திலும் இஸ்லாத்தை எடுத்துச் சொல்லும்போது அன்றைய மக்கள் ஏராளமான எதிர்க் கேள்விகளைக் கேட்டார்கள். அவர்களின் அறியாமை நிறைந்த வாதங்களுக்கு விளக்கம் கொடுக்கும் வகையில் அதிகமான வசனங்கள் அருளப்பட்டு இருப்பதை அருள்மறையில் காண முடிகிறது. இதோ பாருங்கள்:
பூமியை இரண்டு நாட்களில் படைத்தவனையா மறுக்கிறீர்கள்? மேலும் அவனுக்கு நிகரானவர்களைக் கற்பனை செய்கிறீர்கள். அவனே அகிலத்தின் அதிபதியாவான்'' என்று கூறுவீராக! நான்கு நாட்களில் அதன் மேலே முளைகளை ஏற்படுத்தினான். அதில் பாக்கியம் செய்தான். அதன் உணவுகளை அதில் நிர்ணயம் செய்தான். கேள்வி கேட்போருக்குச் சரியான விடை இதுவே.
(திருக்குர் ஆன் 41:9,10)
தகுதிகள் உடைய அல்லாஹ்விடமிருந்து (ஏக இறைவனை) மறுப்போருக்கு நிகழக் கூடிய வேதனை குறித்துக் கேள்வி கேட்பவன் கேட்கிறான். அதை (வேதனையை) தடுப்பவன் யாருமில்லை.
(திருக்குர் ஆன் 70:1-3)
பிறைகளைப் பற்றி (முஹம்மதே!) உம்மிடம் கேட்கின்றனர். "அவை மக்களுக்கும், (குறிப்பாக) ஹஜ்ஜுக்கும் காலம் காட்டிகள்'' எனக் கூறுவீராக! வீடுகளுக்குள் அதன், பின் வழியாக வருவது நன்மை அன்று. (இறைவனை) அஞ்சுவதே நன்மை. எனவே வீடுகளுக்கு வாசல்கள் வழியாகவே செல்லுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள். இதனால் வெற்றி பெறுவீர்கள்.
(திருக்குர் ஆன் 2:189)
கேள்விக்குப் பிறகு இறங்கிய இறைச்செய்தி
இஸ்லாத்திற்கு எதிராக வாதங்களை வைத்தவர்களுக்கு பல்வேறு வசனங்களின் மூலம் அல்லாஹ் பதிலடி கொடுத்தான். இதுபோன்று, நபியவர்களிடம் வந்து மக்கள் கேள்வி எழுப்பிய போது அவர்களுக்குப் பதில் சொல்வதற்கு அல்லாஹ்விடம் இருந்து இறைச் செய்தி அருளப்பட்டது. கேள்வி கேட்டதையும், கேட்டவர்களையும் கண்டிக்காமல் வஹீ மூலம் விளக்கம் கொடுக்கப்பட்டதை கவனிப்போருக்கு கேள்வி கேட்பது குற்றமில்லை என்பதை விளங்கிக் கொள்ள முடியும்.
ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் மிம்பரில் அமர்ந்தார்கள். நாங்களும் அவர்களைச் சுற்றி அமர்ந்தோம். அப்போது அவர்கள் "என் வாழ்விற்குப் பின், உங்களுக்கிடையே உலகவளங்களும் அதன் கவர்ச்சிப் பொருட்களும் தாராளமாகத் திறந்து விடப்படுவதைப் பற்றியே நான் அஞ்சுகிறேன்'' எனக் கூறினார்கள்.  ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! (செல்வம் என்ற) நன்மை தீமையை உருவாக்குமா?'' எனக் கேட்டதும் நபி(ஸல்) அவர்கள் மௌனமாகி விட்டார்கள். உடனே அந்த நபரிடம், " என்ன ஆனது உமது நிலைமை? நீர் நபி(ஸல்) அவர்களிடம் பேசுகிறீர்; ஆனால் நபி(ஸல்) அவர்களோ உம்மிடம் பேசாமலிருக்கிறார்களே!'' எனக் கேட்கப்பட்டது.
நாங்கள் நபி(ஸல்)  அவர்களுக்கு வஹீ அருளப்படுகிறது எனக் கருதினோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் வியர்வையைத் துடைத்துவிட்டு, "கேள்வி கேட்டவர் எங்கே?'' என அவரைப் பாராட்டுவது போன்று கேட்டார்கள். பிறகு, "நன்மையானது தீமையை உருவாக்காதுதான்; நிச்சயமாக, நீர்நிலைகளின் கரைகளில் விளைகின்ற தாவரங்களில் சில, (தம் நச்சுத் தன்மையால் அவற்றை மேய்கின்ற) கால்நடைகளைக் கொன்று விடுகின்றன; அல்லது மரணத்தின் விளிம்புக்கே (அவற்றைக்) கொண்டு போகின்றன; பசுமையான (நல்ல வகைத்) தாவரங்களைத் தின்பவற்றைத் தவிர! அவற்றைக் கால்நடைகள் வயிறு புடைக்கத் தின்று சூரிய ஒளியை முன்னோக்குகின்றன. மேலும் சாணம் போட்டு, சிறுநீர் கழித்து, மீண்டும் மேய்கின்றன. (இது போலவே உலகிலுள்ள) இந்தச் செல்வம் பசுமையானதும் இனிமையானதும் ஆகும்.
எனவே ஒரு முஸ்லிம், தன் செல்வத்திலிருந்து ஏழைகளுக்கும் அநாதைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் கொடுத்துக் கொண்டிருக்கும் வரை அது அவனுக்குச் சிறந்த தோழனாகும். யார் முறையின்றி அதை எடுத்துக் கொள்கின்றானோ, அவன் உண்டும் வயிறு நிரம்பாதவனைப் போன்றவனாவான். மேலும் மறுமை நாளில் அந்தச் செல்வம் அவனுக்கு எதிராக சாட்சியம் சொல்லும்'' எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்: புகாரி (1465)
நபி (ஸல்) அவர்கள் ஜிஇர்ரானா எனுமிடத்தில் இருக்கும்போது வாசனை திரவியத்தின் அடையாளமோ அல்லது மஞ்சள் நிறமோ இருந்த சட்டை அணிந்திருந்த ஒருவர் அவர்களிடம் வந்து, "உம்ராவில் நான் என்ன செய்ய வேண்டும் எனக் கட்டளையிடுகிறீர்கள்?' எனக் கேட்டார். அப்போது அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ அறிவித்தான். எனவே நபி (ஸல்) அவர்கள் போர்வையால் மூடப்பட்டார்கள். நான் நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ வருவதைப் பார்க்க வேண்டும் என ஆவல் கொண்டிருந்தேன். உமர் (ரலி), "நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வஹீ அருளும்போது அவர்களைப் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறாயா?' எனக் கேட்டார். நான் "ஆம்' என்றேன். உடனே அவர் நபி (ஸல்) அவர்கள்) மூடப்பட்டிருந்த ஆடையின் ஒரு புறத்தை நீக்கியதும் நான் நபி (ஸல்) அவர்களை உற்று நோக்கினேன். அப்போது ஒட்டகத்தின் குறட்டை போன்ற சப்தம் அவர்களிடமிருந்து வந்ததாக நான் எண்ணுகின்றேன். பிறகு (வஹீயின்) அந்நிலை அவர்களை விட்டு நீங்கி விட்டபொழுது, அவர்கள், "உம்ராவைப் பற்றிக் கேள்வி கேட்டவர் எங்கே?'' எனக் கேட்டுவிட்டு (அவரிடம்), "உமது இச்சட்டையைக் கழற்றி வாசனை திரவியத்தின் அடையாளத்தைக் கழுவிவிட்டு, மஞ்சள் நிறத்தையும் அகற்றிவிடும்! மேலும் நீர் ஹஜ்ஜில் செய்வதைப் போன்று உம்ராவிலும் செய்வீராக!'' எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: யஅலா பின் உமய்யா (ரலி)
நூல்: புகாரி (1789)
நான் மதீனாவில் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு வேளாண் பூமியில் இருந்தேன். நபி (ஸல்) அவர்கள் பேரீச்ச மட்டை ஒன்றின் மீது (கையை) ஊன்றியபடி நின்றிருந்தார்கள். பிறகு நபி  (ஸல்) அவர்கள் யூதர்கள் சிலரைக் கடந்து சென்றார்கள். அவர்களில் ஒருவர், "இவரிடம் உயிரைப் பற்றிக் கேளுங்கள்'' என்று சொன்னார். மற்றொருவர், "நீங்கள் அவரிடம் கேட்காதீர்கள்; ஏனெனில் நீங்கள் விரும்பாத பதிலை அவர் உங்களுக்குத் சொல்லிவிடக் கூடாது'' என்று சொன்னார்.
பின்னர் அவர்கள் (அனைவரும் சேர்ந்து) நபி (ஸல்) அவர்களிடம் எழுந்து சென்று, "அபுல் காசிமே! உயிரைப் பற்றி எங்களுக்குத் தெரிவியுங்கள்!'' என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள் சிறிது நேரம் எழுந்து நின்று கூர்ந்து பார்த்தார்கள். உடனே நான், "அவர்களுக்கு வஹீ (வேதஅறிவிப்பு) அறிவிக்கப்படுகின்றது என்று புரிந்து கொண்டேன். ஆகவே, வஹீ வருவதற்கு வசதியாக நான் அவர்களைவிட்டு சற்றுப் பின்தள்ளி நின்றேன். பிறகு, நபி (ஸல்) அவர்கள் (தமக்கு அருளப்பெற்ற) "நபியே! உயிரைப் பற்றி உங்களிடம் அவர்கள் வினவுகின்றார்கள். உயிர் என்பது என் இறைவனின் கட்டளையால் உருவானது என்று கூறுங்கள்'' எனும் (17:85ஆவது) இறைவசனத்தை ஓதிக் காட்டினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)
நூல்: புகாரி (7297)
கேள்விகளுக்கு பதிலளித்த நபிகளார்
சத்தியத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அநேகமான கேள்விகளை எழுப்பினார்கள். அதேசமயம், முஸ்லிம்களும் பல்வேறு கேள்விகளைக் கேட்டார்கள். ஆண்களைப் போன்று பெண்களும் வினா மூலம் மார்க்கத்தை சரிவர புரிந்து கொண்டார்கள்.
மார்க்கம் தொடர்பாக தங்களிடம் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதில் இல்லை என்பதால் கேள்வி கேட்கக் கூடாது என்று சொல்லி சிலர் தப்பிக்க நினைக்கிறார்கள். நபிகளாரிடம் நபித்தோழர்களும் பொதுமக்களும் மார்க்கம் குறித்து பல்வேறு சந்தேகங்களைக் கேட்டார்கள். அவர்களை அதட்டாமல் அகற்றாமல் அவர்களுக்கு அழகிய முறையில் நபிகளார் பதில் கொடுத்தார்கள் என்பதற்கு எண்ணற்ற நபிமொழிகள் சாட்சிகளாக இருக்கின்றன. இதற்கு ஆதாரமாக சில செய்திகளை இப்போது காண்போம்.
என் தோழர்கள் (நன்மை தரும் செயல்களைப் பற்றி அதிகமாகக் கேள்விகள் கேட்டு நபி (ஸல்) அவர்களிடமிருந்து) நன்மையைக் கற்றுக் கொண்டார்கள். நான் (தவிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் நபி (ஸல்) அவர்களிடம் திரும்பத் திரும்பக் கேட்டு இனி வரவிருக்கும்) தீமையைப் பற்றித் தெரிந்து  கொண்டேன்.
அறிவிப்பவர்: ஹுதைஃபா பின் யமான் (ரலி)
நூல்: புகாரி (3607)
ஒரு கூட்டத்தார் நபி (ஸல்) அவர்களிடம், "(கிராமத்திலிருந்து) சிலர் எங்களிடம் இறைச்சி கொண்டு வருகிறார்கள். (அதை அறுக்கும்போது) அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டதா, இல்லையா என்று எங்களுக்குத் தெரியாது. (இந்த நிலையில் நாங்கள் அதை உண்ணலாமா?)'' என்று கேட்டனர். நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் அதன் மீது அல்லாஹ்வின் பெயர் சொல்லி அதை உண்ணுங்கள்'' என்று பதில் சொன்னார்கள். கேள்வி கேட்ட கூட்டத்தார் இறை மறுப்பை அப்போதுதான் கைவிட்டுப் புதிதாக இஸ்லாத்தைத் தழுவியிருந்தார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி (5507)
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் (தனிப்பட்ட) கோபத்தினால் போரிடுகின்றார். (மற்றொருவர்) இன மாச்சர்யத்தினால் போரிடுகின்றார். இவற்றில் அல்லாஹ்வின் பாதையில் செய்யப்படும் போர் எது?' என்று கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், அவரை நோக்கித் தம் தலையை உயர்த்தி, "எவர் அல்லாஹ்வின் வாக்கே மேலோங்கியதாய் இருக்க வேண்டும் என்பதற்காகவே போரிடுகின்றாரோ அவர்தாம் வலிவும் மாண்பும் மிக்க அல்லாஹ்வின் பாதையில் போரிடுபவர் ஆவார்'' என்று பதிலளித்தார்கள். கேள்வி கேட்டவர் நின்று கொண்டிருந்ததால்தான் நபி (ஸல்) அவர்கள் தம் தலையை உயர்த்திப் பார்த்தார்கள்.
அறிவிப்பவர்: அபூ மூசா (ரலி)
நூல் : புகாரி (123)
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து, "என் தாயார் ஹஜ் செய்வதற்காக நேர்ச்சை செய்திருந்தார். ஆனால், ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்குள் அவர் இறந்துவிட்டார். நான் அவர் சார்பாக ஹஜ் செய்யலாமா?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "ஆம்; அவர் சார்பாக ஹஜ் செய்'' (எனக் கூறிவிட்டு) "உன் தாயார் மீது கடன் இருந்தால் நீ அதை (அவர் சார்பாக) நிறைவேற்றுவாய் அல்லவா?'' என்று கேட்டார்கள். அந்தப் பெண், "ஆம் (நிறைவேற்றுவேன்)'' என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், "அப்படியென்றால் (நேர்ச்சையின் மூலம்) அல்லாஹ்வுக்குச் செலுத்த வேண்டியதை நிறைவேற்றுங்கள். ஏனெனில், வாக்கு நிறைவேற்றப்பட அல்லாஹ்வே மிகவும் அருகதையுடையவன்'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி (7315)
ஓர் அவையில் நபி (ஸல்) அவர்கள் மக்களிடம் (மார்க்க விஷயமாகப்) பேசிக்கொண்டிருக்கும் போது அவர்களிடம் கிராமவாசி ஒருவர் வந்து,  "மறுமை நாள் எப்போது?'' எனக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் (அவருக்கு பதிலளிக்காமல்) தமது பேச்சைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். அப்போது (அங்கிருந்த) மக்களில் சிலர், "நபி (ஸல்) அவர்கள் அந்த மனிதர் கூறியதைச் செவியுற்றார்கள்; ஆயினும் அவர் கேட்ட கேள்வியை நபி (ஸல்) அவர்கள் விரும்பவில்லை' என்று கூறினர். மற்ற சிலர், "நபியவர்கள் அந்த மனிதர் கூறியதைச் செவியுறவில்லை' என்றனர். நபி (ஸல்) அவர்கள் தமது பேச்சை முடித்துவிட்டு, "மறுமை நாளைப் பற்றி (என்னிடம் கேள்வி) கேட்டவர் எங்கே?'' என்று கேட்டார்கள். உடனே அவர் "அல்லாஹ்வின் தூதரே! இதோ நான்தான்' என்றார். நபி (ஸல்) அவர்கள், "அமானிதம் (அடைக்கலம்) பாழ்படுத்தப்பட்டால் நீர் மறுமை நாளை எதிர்பாரும்!'' என்று சொன்னார்கள். அதற்கவர், "அது எவ்வாறு பாழ்படுத்தப்படும்?'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அதிகாரங்கள் தகுதியற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டால் நீர் மறுமை நாளை எதிர்பாரும்!'' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (59)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "விடைபெறும்' ஹஜ்ஜின்போது மினாவில் நின்று கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களிடம் மக்கள் கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தனர். அப்போது ஒருவர் நபி (ஸல்)  அவர்களிடம் வந்து "நான் (சட்டம்) தெரியாமல் குர்பானி (பலி) கொடுப்பதற்கு முன்னால் என் தலைமுடியை மழித்துவிட்டேன்'' என்றார். அதற்கு அல்லாஹ்வின்   தூதர் (ஸல்) அவர்கள், "பரவாயில்லை; இப்போது குர்பானி கொடுத்துக் கொள்வீராக!'' என்றார்கள்.
மற்றொருவர் வந்து "நான் தெரியாமல் கல் எறிவற்கு முன்பே குர்பானி கொடுத்து விட்டேன்'' என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "பரவாயில்லை; இப்போது கல் எறிந்து கொள்வீராக!'' என்றார்கள். (அன்றைய தினம்) (பிற்படுத்திச் செய்யப்பட வேண்டிய) சில கிரியைகள் முற்படுத்திச் செய்யப்பட்டு விட்டதாகவும் (முற்படுத்திச் செய்யப்பட வேண்டிய) சில கிரியைகள் பிற்படுத்திச் செய்யப்பட்டுவிட்டதாகவும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போதெல்லாம் "பரவாயில்லை; (விடுபட்டதைச்) செய்யுங்கள்!' என்றே சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்: புகாரி (83) (84)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு கிராமவாசி வந்து, "(வெள்ளை நிறத்தவனான எனக்கு) என் மனைவி கறுப்பான மகனைப் பெற்றெடுத்தாள்; அவனை நான் (என் மனத்தில்) ஏற்க மறுத்துவிட்டேன்'' என்று சொன்னார். அதற்கு அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உன்னிடம் ஒட்டகங்கள் உள்ளனவா?'' என்று கேட்டார்கள். அந்தக் கிராமவாசி, "ஆம்'' என்று பதிலளித்தார்.
நபி (ஸல்) அவர்கள் "அவற்றின் நிறம் என்ன?'' என்று கேட்டார்கள். அவர், "சிவப்பு'' என்று சொன்னார். "அவற்றில் சாம்பல் நிற ஒட்டகங்களும் உள்ளனவா?'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க, அவர் "(ஆம்) அவற்றில் சாம்பல் நிற ஒட்டகங்கள் இருக்கவே செய்கின்றன'' என்று பதிலளித்தார். "(தாயிடம் இல்லாத) அந்த (சாம்பல்) நிறம் அவற்றுக்கு மட்டும் எவ்வாறு வந்ததென நீ கருதுகிறாய்?'' என்று கேட்டார்கள். அந்தக் கிராமவாசி, "ஆண் ஒட்டகத்தின் பரம்பரை காரணமாக வந்திருக்கலாம், அல்லாஹ்வின் தூதரே!'' என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள் "(உன்னுடைய) இந்த மகனும் உன் பரம்பரையிலுள்ள (மூதாதையரின்) நிறத்தைக் கொண்டிருக்கக் கூடும்'' என்று கூறி, அவன் தன்னுடையவன் அல்லன் என்று மறுக்க அந்தக் கிராமவாசியை நபி (ஸல்) அவர்கள் அனுமதிக்கவில்லை.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (7314)
கேள்வி ஞானம் நேர்வழி தரும்
அல்லாஹ்வின் தூதரிடம் அனைத்து விசயங்களைப் பற்றியும் மக்கள் கேட்டு தெரிந்து கொண்டார்கள். படைத்தவன் - படைப்பினங்கள், தனிமனிதன் - சமூகம், ஆண்கள் - பெண்கள், இம்மை - மறுமை, நம்பிக்கையாளர்கள் - மறுப்பாளர்கள், நேர்வழி - வழிகேடு, நன்மை - தீமை என்று எல்லா விதமான கோணங்களிலும் வினாக்களை எழுப்பி மார்க்கத்தைக் கற்றுக் கொண்டார்கள். இப்படி எதையும் சீர்தூக்கி ஆராய்ந்து, கேள்வி கேட்டு தெளிந்து பின்பற்றுவது என்பது நம்மை நேர்வழிக்கு அழைத்துச் செல்லும். தீய காரியங்களை விட்டு விலகுவதற்கு வழிகாட்டும். மார்க்கம் தொடர்பாக கேள்வி கேட்டு உண்மையைத் தெரிந்து தங்களைத் திருந்திக் கொள்பவர்கள் எல்லாக் காலத்திலும் இருக்கிறார்கள். ஷிர்க், பித்அத்தான காரியங்களில் இருந்து கொண்டு தவ்ஹீதை எதிர்த்து கேள்வி கேட்ட பலர் இன்று அதன் காப்பாளர்களாக இருப்பதைப் பார்க்கிறோம். இந்தக் கருத்தை உறுதிப்படுத்தும் நிகழ்வொன்றைப் பார்ப்போம்.
நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் அமர்ந்திருந்தபோது ஒட்டகத்தில் ஒரு மனிதர் வந்து பள்ளி(யின் வளாகத்தி)ல் ஒட்டகத்தைப் படுக்கவைத்து அத(ன் முன்னங்காலி)னை மடக்கிக் கட்டினார். பிறகு மக்களிடம் "உங்களில் முஹம்மது அவர்கள் யார்?' என்று கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் மக்களிடையே சாய்ந்து அமர்ந்திருந்தார்கள். "இதோ சாய்ந்து அமர்ந்திருக்கும் இந்த வெள்ளைநிற மனிதர்தாம்' என்று நாங்கள் சொன்னோம்.
உடனே அம்மனிதர் நபி (ஸல்) அவர்களை "அப்துல் முத்தலிபின் (மகனின்) புதல்வரே!' என்றழைத்தார். அதற்கு நபியவர்கள் "என்ன விஷயம்?'' என்று கேட்டார்கள். அப்போது அம்மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் "நான் உங்களிடம் சில கேள்விகள் கேட்கப் போகிறேன். சில கடினமான கேள்விகளையும் நான் கேட்கப் போகிறேன். அதற்கு நீங்கள் என் மீது கோபப்பட்டுவிடக் கூடாது'' என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "உம் மனதில் பட்டதைக் கேளும்!'' என்றார்கள்.
உடனே அம்மனிதர் "உம்முடைய, உம் முன்னோருடைய இரட்சகன் மீது ஆணையாகக் கேட்கிறேன்; அல்லாஹ்தான் உம்மை மனித இனம் முழுவதற்கும் தூதராக அனுப்பினானா?' என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "ஆம், அல்லாஹ் சாட்சியாக!'' என்றார்கள். அடுத்து அவர் "அல்லாஹ்வின் பொருட்டால் உம்மிடம் நான் கேட்கிறேன்; அல்லாஹ்தான் இரவிலும் பகலிலுமாக (நாளொன்றுக்கு) ஐவேளைத் தொழுகைகளைத் தொழுது வரவேண்டுமென்று உமக்கு(ம் மக்களுக்கும்) கட்டளையிட்டிருக்கின்றானா?'' என்று கேட்டார். அதற்கும் நபி (ஸல்) அவர்கள் "ஆம், அல்லாஹ் சாட்சியாக'' என்றார்கள். அவர் "அல்லாஹ்வின் பொருட்டால் உம்மிடம் நான் கேட்கிறேன்; அல்லாஹ்தான் ஒவ்வொரு ஆண்டிலும் (குறிப்பிட்ட) இந்த மாதத்தில் நோன்பு நோற்க வேண்டும் என்று உமக்குக் கட்டளையிட்டிருக்கிறானா?'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "ஆம், அல்லாஹ் சாட்சியாக!' என்றார்கள். அவர், "அல்லாஹ்வின் பொருட்டால் உம்மிடம் நான் கேட்கிறேன்: அல்லாஹ்தான் எங்கள் செல்வர்களிடமிருந்து இந்த (ஸகாத் எனும்) தர்மத்தைப் பெற்று எங்கள் வறியோரிடையே விநியோகிக்குமாறு உமக்குக் கட்டளையிட்டிருக்கின்றானா?'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "ஆம், அல்லாஹ் சாட்சியாக!' என்றார்கள்.
(இவற்றைக் கேட்டுவிட்டு) அம்மனிதர் "நீங்கள் (இறைவனிடமிருந்து) கொண்டு வந்தவற்றை நான் நம்பி ஏற்கின்றேன்'' என்று கூறிவிட்டு "நான், எனது கூட்டத்தார்களில் இங்கு வராமல் இருப்பவர்களின் தூதுவனாவேன்; நான்தான் பனூ சஅத் பின் பக்ர் குலத்தாரின் சகோதரன் ளிமாம் பின் ஸஅலபா'' என்றும் கூறினார்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல் : புகாரி (63)
மார்க்கம் பற்றி கேள்வி கேட்பது குற்றமா?
மார்க்கம் என்று எந்தவொரு செய்தியைச் சொன்னாலும் ஆதாரம் கேட்டு அது குறித்து சிந்தித்து முடிவெடுக்கும் சிறந்த நிலைக்கு மக்கள் வந்திருக்கிறார்கள். இச்சூழ்நிலையில் சிலர், மக்களின் ஆய்வுச் சிந்தனையை மழுங்கடிக்க முனைகிறார்கள். மார்க்கம் பற்றிய கேள்விகளைக் கேட்கக் கூடாது; அந்தப் பண்பு நம்மைச் சீரழித்து விடும் என்று சில செய்திகளை முன்வைக்கிறார்கள். அதன் உண்மைத் தன்மையை இப்போது பார்ப்போம்.
வாதம் 1:
மார்க்கத்தைப் போதிப்பவர்களிடம் எந்தவொரு எதிர்க் கேள்வியும் கேட்கக் கூடாது என்று சொல்பவர்கள் 5:101 வசனத்தை ஆதாரமாக எடுத்துக் காட்டுகிறார்கள்.
விளக்கம் 1:
மார்க்கம் தொடர்பாக கேள்வி கேட்பது தவறு என்ற கருத்தில் மேற்கண்ட இறைவசனம் அமையவில்லை. மாறாக, இறைவனிடம் இருந்து இறைத்தூதருக்கு இறைச் செய்தி அருளப்படும் நேரங்களில் கேள்வி கேட்பதைத்தான் குறிக்கிறது. மேலும் அதற்காக காரணமும் அதிலே தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. அந்தக் காரணத்திற்கு வலுசேர்க்கும் வகையில் நபிமொழியும் இருக்கிறது.
நம்பிக்கை கொண்டோரே! சில விஷயங்களைப் பற்றி கேள்வி எழுப்பாதீர்கள்! அவை உங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டால் உங்களுக்குத் தீங்கு தரும். குர்ஆன் அருளப்படும் நேரத்தில் அவை பற்றி நீங்கள் கேள்வி கேட்டால் அவை உங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டு விடும். அவற்றை அல்லாஹ் மன்னித்தான். அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத் தன்மையுள்ளவன். உங்களுக்கு முன் சென்ற சமுதாயத்தினர் இவ்வாறு கேள்வி கேட்டனர். பின்னர் அவர்கள், அவற்றை மறுப்போராக ஆகி விட்டனர்.
(திருக்குர் ஆன் 5:101, 102)
சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விளையாட்டாகக் கேள்வி கேட்பது வழக்கம். இவ்வாறாக ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், "என் தந்தை யார்?'' என்று கேட்டார். தமது ஒட்டகம் காணாமற்போய் விட்ட  இன்னொருவர் "என் ஒட்டகம் எங்கே?'' என்று கேட்டார். அப்போதுதான் அல்லாஹ், அவர்கள் விஷயத்தில் இந்த வசனத்தை அருளினான்:
இறைநம்பிக்கை கொண்டவர்களே! சில விஷயங்களைப் பற்றி (துருவித் துருவிக்) கேட்காதீர்கள். (ஏனெனில்,) அவை உங்களிடம் வெளிப்படுத்தப்பட்டால் அவை உங்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தும். குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் அவற்றைப் பற்றி நீங்கள் வினவினால் அப்போது அவை உங்களுக்கு வெளிப்படையாகக் கூறப்பட்டுவிடும். நீங்கள் (இதுவரை விளையாட்டுத் தனமாக) வினவியவற்றை அல்லாஹ் மன்னித்து விட்டான். அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனாகவும் சகிப்புத் தன்மையுடையவனாகவும் இருக்கின்றான்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி (92) (4622) (7295)
என்னுடைய தந்தை யார்? என்றுகூட சில நபர்கள் இறைத் தூதர் (ஸல்) அவர்களிடம் சகட்டு மேனிக்கு கேள்வியைக் கேட்டனர். இது மாதிரியான போன்ற கேள்விகள் கேட்கப்படும்போது, தம் தந்தை என இவர் யாரை நினைக்கிறாரோ அவர் அல்லாதவர் ஒருவேளை தந்தையாக இருந்து விட்டால் வீணான மனச் சங்கடத்தை கவலையை அவர் சந்திக்க வேண்டி இருக்கும். எனவேதான் இறைத்தூதரிடம் சில விஷயங்கள் குறித்து கேள்வி கேட்கக் கூடாது என மார்க்கத்தில் தடை விதிக்கப்பட்டது.


கேள்வி கேட்பது குற்றமா?
மூஸா (அலை) அவர்களிடம் கேட்க தடைசெய்யப்பட்டது எது?
தொடர் 2
எம். முஹம்மது சலீம், MISc, மங்கலம்.
வாதம் 2:
இதற்கு முன் மூஸாவிடம் (கேள்வி) கேட்கப்பட்டது போல் உங்கள் தூதரிடம் கேட்க விரும்புகிறீர்களா? நம்பிக்கையை (இறை) மறுப்பாக மாற்றுபவர் நேர் வழியை விட்டு விலகி விட்டார்.
(திருக்குர் ஆன் 2:108)
மேலிருக்கும் வசனத்தை காட்டி கேள்வி கேட்கக் கூடாது என்று வாதம் வைக்கிறார்கள். இது குறித்து ஏற்கனவே விரிவான விளக்கமான பதில் கொடுக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், ஜமாஅத்தின் மூத்த அறிஞர் சகோ. பீ.ஜே அவர்கள் இந்த வசனத்திற்கு குர்ஆன் விளக்கவுரை பகுதியில் கொடுத்திருக்கும் பதிலை இங்கு காண்போம்.
மூஸாவிடம் கேட்கப்பட்டது என்ன? :
மூஸா நபியிடம் அவரது சமுதாயத்தினர் கேட்டது போல் நீங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்காதீர்கள் என்று2:108 வசனத்தில் கூறப்பட்டுள்ளது. மூஸா நபியிடம் அவரது சமுதாயத்தினர் கேட்டது என்ன என்பதைத் திருக்குர்ஆனில் தேடிப் பார்க்கும் போது, இறைவன் கண்டிக்கின்ற பாரதூரமான நான்கு விஷயங்களை அவர்கள் மூஸா நபியிடம் கேட்டுள்ளனர் என்பதை அறிய முடிகின்றது.
அந்த நான்கு விஷயங்களையுமே இவ்வசனம் குறிக்கும் என்று புரிந்து கொள்வது தான் முழுமையான விளக்கமாக அமையும்.
1. மூஸா நபியவர்களையும் அவர்களது சமுதாயத்தையும் கடலில் மூழ்காமல் இறைவன் காப்பாற்றிக் கரை சேர்த்தான். இதன் பின்னர் சிலைகளை வழிபடும் ஒரு கூட்டத்தினரை மூஸாவின் சமுதாயத்தினர் கண்டார்கள்.
"மூஸாவே! இவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பது போல் எங்களுக்கும் பல கடவுள்களை ஏற்படுத்துவீராக'' என்று கேட்டனர்.
(திருக்குர்ஆன் 7:138)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு மரத்தைக் கடந்து சென்றனர். அம்மரம் இணை கற்பிக்கும் மக்களுக்கு உரியது. "தாத்து அன்வாத்' என்று அழைக்கப்படும் அம்மரத்தில் இணை கற்பிப்பவர்கள் தமது ஆயுதங்களைத் தொங்கவிடுவார்கள். இதைக் கண்ட சில நபித்தோழர்கள், "அல்லாஹ்வின் தூதரே! இவர்களுக்கு "தாத்து அன்வாத்' எனும் புனித மரம் இருப்பது போல் எங்களுக்கும் புனித மரம் ஒன்றை ஏற்படுத்துங்கள்'' என்று கேட்டனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "அல்லாஹ் தூயவன். "அவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பது போல் எங்களுக்கும் பல கடவுள்களை ஏற்படுத்துவீராக' என்று மூஸா நபியின் சமுதாயத்தினர் கேட்டது போல் இந்தக் கேள்வியும் அமைந்துள்ளது. எனது உயிர் எவன் கைவசம் உள்ளதோ, அவன் மேல் ஆணையாக, உங்களுக்கு முன் சென்றோரின் வழிமுறையை நீங்கள் அப்படியே பின்பற்றுவீர்கள்'' என்று கூறினார்கள்.
(நூல்: திர்மிதீ 2106)
இஸ்லாத்தில் நல்லவை அனைத்துமே இருக்கும் போது, இஸ்லாம் அல்லாத மதங்களின் சடங்குகள் இஸ்லாத்திலும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படக் கூடாது என்ற கருத்தை இவ்வசனம் தாங்கி நிற்கின்றது. கந்தூரி விழாக்கள், பஞ்சா, சந்தனக்கூடு,மீலாது விழா, புத்தாண்டு கொண்டாடுதல், தாலி, பால் கிதாபு, இறந்தோருக்கு 3, 7, 40 நாட்களில் சடங்குகள் செய்தல்,ஷைகுமார்களின் காலில் விழுதல் போன்றவற்றைச் செய்பவர்கள், மூஸா நபியிடம் பல கடவுள்களைக் கேட்ட இஸ்ரவேலர்களுக்கு ஒப்பானவர்கள் என்பதை இவ்வசனத்தைச் சிந்தித்தால் விளங்கலாம்.
2. மூஸா நபியின் சமுதாயத்தினர் இறைவனின் ஆற்றலையும், வல்லமையையும் கண்கூடாகக் கண்ட பின்னர் "அல்லாஹ்வை எங்கள் கண்முன்னே காட்டுவீராக!'' என்று மூஸாவிடம் கேட்டார்கள். உடனே பெரும் சப்தம் ஏற்பட்டு மூர்ச்சையானார்கள்.
(திருக்குர்ஆன் 4:153)
மனிதர்கள் இவ்வுலகில் இறைவனைக் காண முடியாது என்று இறைவன் அறிவித்திருக்கும்போது, அதை மாற்றியமைக்குமாறு இறைவனிடம் கேட்பது இறைவனுக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தக் கூடியதாகும்.
எதைத் தனது முடிவாக இறைவன் அறிவித்திருக்கிறானோ அதை மாற்றுமாறு கோரக் கூடாது என்பதையும் இவ்வசனம் உள்ளடக்கியுள்ளது.
3. இறைவன் எந்தச் சட்டத்தைப் போடுவதாக இருந்தாலும் தேவையான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி சட்டம் இயற்றுவான் என்று நம்ப வேண்டும். அதில் குடைந்து, குடைந்து கேள்வி கேட்டால் அது நமக்குத்தான் சிரமத்தை ஏற்படுத்தும்.
இது போன்ற கேள்விகளையும் மூஸா நபியின் சமுதாயத்தினர், மூஸாவிடம் கேட்டுள்ளனர்.
மூஸா நபியின் காலத்தில் ஒருவர் கொல்லப்பட்டார். கொலையாளியைக் கண்டுபிடிக்க ஒரு மாட்டை அறுத்து அதன் ஒரு பகுதியால் இறந்தவர் மீது அடியுங்கள்; இறந்தவர் உயிர் பெற்று தன்னைக் கொன்றவரை அடையாளம் காட்டுவார் என்று இறைவன் கட்டளையிட்டான்.
ஒரு மாட்டை அறுங்கள் என்று அல்லாஹ் கூறியவுடன் ஏதாவது ஒரு மாட்டை அவர்கள் அறுத்திருக்கலாம். எத்தகைய மாட்டை அவர்கள் அறுத்திருந்தாலும் இறைக் கட்டளையைச் செயல்படுத்தியவர்களாக ஆகியிருப்பார்கள். ஆனால், மாட்டின் வயது என்ன? நிறம் என்ன? தன்மை என்ன என்று தேவையற்ற பல கேள்விகளைக் கேட்டு தமக்குத் தாமே சிரமத்தை ஏற்படுத்திக் கொண்டனர்.
(பார்க்க: திருக்குர்ஆன் 2:67-71)
4.வஹீ அருளப்படும் காலகட்டத்தில் இறைத்தூதரிடம் கூடுதல் விளக்கம் கேட்கக் கூடாது என்ற கருத்தையும் இவ்வசனம் உள்ளடக்கி நிற்கின்றது.
திருக்குர்ஆன் 5:101, 102 வசனங்களில் இது தெளிவாகவும் குறிப்பிடப்படுகின்றது.
"எதை நான் தெளிவுபடுத்தாமல் விட்டு விட்டேனோ அந்த விஷயத்தில் என்னை விட்டு விடுங்கள். உங்களுக்கு முன் சென்றவர்கள் தமது நபிமார்களிடம் அதிகம் கேள்வி கேட்டதாலும், நபிமார்களுடன் கருத்து வேறுபாடு கொண்டதாலும்தான் அழிந்து போயினர்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
(நூல்: புகாரி 7288)
"தடை செய்யப்படாத ஒன்றைப் பற்றி ஒருவர் கேள்வி கேட்டு அக்கேள்வி யின் காரணமாக அது தடை செய்யப்பட்டது என்றால் அந்த மனிதர்தான் முஸ்லிம்களிலேயே மிகப் பெரிய குற்றவாளி'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
(நூல்: புகாரி 7289)
மூஸா நபியிடம் இஸ்ரவேலர்கள் கேட்டது போல் நபிகள் நாயகத்திடம் கேட்கக் கூடாது என்பது மேற்கண்ட நான்கு விஷயங்களையும் உள்ளடக்கும்.
நபிமார்களிடம் இவ்வாறு கேள்வி கேட்கக் கூடாது என்ற கருத்தைத்தான் இவ்வசனம் கூறுகின்றது.
தங்களிடம் யாரும் கேள்வி கேட்கக் கூடாது; தாங்கள் கூறுவதைக் கண் மூடி நம்ப வேண்டும் என்பதற்கு இவ்வசனத்தைப் போலி அறிஞர்கள் ஆதாரமாக்க முயல்கின்றனர். நபிமார்களிடம் கேள்வி கேட்டால் அதற்கு அவர்கள் அளிக்கும் பதிலைப் பொருத்து அது ஹலாலாகவோ, ஹராமாகவோ ஆகிவிடும். ஆனால் நபிமார்கள் அல்லாத மற்றவர்களுக்கு இந்த நிலை இல்லாததால் அவர்களிடம் கேள்வி கேட்கக்கூடாது என்பதற்கு இந்த வசனத்தை ஆதாரமாகக் காட்ட முடியாது.
நபிகள் நாயகம் (ஸல்) காலத்திற்குப் பின் எந்த அறிஞரிடம் கேள்வி கேட்டாலும் அதன் காரணமாக ஹலாலான எதுவும் ஹராம் ஆகாது. ஹராமான எதுவும் ஹலால் ஆகி விடாது. எனவே மார்க்க அறிஞர்கள், தம்மிடம் கேள்வி கேட்கக் கூடாது என்பதற்கு இவ்வசனத்தைக் கேடயமாகப் பயன்படுத்தக்கூடாது.
கேள்வியின் நோக்கமும் விதமும்
மார்க்கம் தொடர்பாக கேள்வி கேட்பதற்கு எந்தவொரு தடையும் இல்லை. இஸ்லாம் கேள்வி கேட்பதை அனுமதித்து இருக்கிறது. அதேசமயம், எப்படி வேண்டுமானாலும் கேள்வியைக் கேட்டுக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. எதிலும் வரம்பு மீறக் கூடாது என்று சொல்லும் மார்க்கம், கேள்வி கேட்பதிலும் சில கட்டுப்பாடுகளை வரையறையை வைத்துள்ளது.கேட்கப்படும் கேள்விகள் அவசியமானதாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருக்க வேண்டும். மார்க்கம் தொடர்பாக தமக்குள்ளும் சரி,பிறர் மத்தியிலும் சரி தேவையில்லாமலும் அறிவற்ற முறையிலும் கேள்விகளைக் கேட்கும் பழக்கம் நம்மிடம் இருக்கவே கூடாது.
மக்கள் (பல புதிரான விஷயங்கள் குறித்து) ஒருவரையொருவர் கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பார்கள். இறுதியில், "அனைத்துப் பொருட்களையும் படைத்தவன் அல்லாஹ்; இது (சரிதான்). அல்லாஹ்வைப் படைத்தவன் யார்?'' என்றுகூடக் கேட்பார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி) நூல்: புகாரி (7296)
முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களின் எழுத்தரான வர்ராத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: முஆவியா (ரலி) அவர்கள் முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களுக்கு (ஒரு கடிதம்) எழுதியிருந்தார்கள். அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து தாங்கள் செவியேற்ற ஹதீஸ் ஒன்றை எனக்கு எழுதியனுப்புங்கள்'' என்று குறிப்பிட்டிருந்தார்கள். அப்போது முஃகீரா (ரலி) அவர்கள் (பின்வருமாறு) எழுதினார்கள்: நபி (ஸல்) அவர்கள் தொழுது முடித்தவுடன், "வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. அவன் தனித்தவன்; அவனுக்கு நிகரானோர் எவருமில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது. எல்லாப் புகழும் அவனுக்கே சொந்தம். அவன் அனைத்தின் மீதும் ஆற்றல் உள்ளவன்'' என்று கூறுவார்கள்.
மேலும், நபி (ஸல்) அவர்கள்,  (இவ்வாறு) சொல்லப்பட்டது; (இவ்வாறு) அவர் சொன்னார் என்று (ஊர்ஜிதமில்லாதவற்றை, அல்லது தேவைக்கதிகமாகப்) பேசுவது, அதிகமாகக் (கேள்வி அல்லது யாசகம்) கேட்பது,செல்வத்தை வீணாக்குவது, (அடுத்தவருக்குத் தரவேண்டியதைத்) தர மறுப்பது, (அடுத்தவருக்கு உரியதைத்) தருமாறு கோருவது, அன்னையரைப் புண்படுத்துவது, பெண் சிசுக்களை உயிருடன் புதைப்பது ஆகியவற்றுக்குத் தடை விதித்து வந்தார்கள்.
நூல்: புகாரி (2408) (6473)
திருக்குர்ஆனை, நபிமொழிகளைப் படித்தால் நமக்குப் புரியாது; மக்களின் கேள்விகளைத் தொகுத்து விளக்கம் கொடுத்திருக்கும் இமாம்களைப் பின்பற்றுங்கள் என்று ஒருபுறம் சொல்கிறார்கள். இன்னொரு புறம், மார்க்கம் தொடர்பாக யாரிடமும் கேள்விகளை கேட்கக் கூடாது என்கிறார்கள். இவர்கள் இப்படி முரண்பட்டுப் பேசுவதற்கும் காரணம் இல்லாமல் இல்லை.
கடந்த காலங்களைப் போன்று மார்க்கத்தில் இல்லாத பொல்லாத செய்திகளை எல்லாம் சொல்லி இவர்களால் மக்களை ஏமாற்ற முடிவதில்லை. இப்போது பெரும்பாலான மக்கள் எந்தவொரு செயலுக்கும் சரியான ஆதாரம் இருக்கிறதா? என்று சிந்தித்து செயல்பட ஆரம்பித்து விட்டார்கள். இந்த நிலை மலர தவ்ஹீத்வாதிகளை அல்லாஹ் காரணமாக ஆக்கியிருக்கிறான் என்றால் அது மிகையல்ல, (அல்ஹம்துலில்லாஹ்). எனவே, சத்திய மார்க்கத்தை கண்மூடித்தனமாக அணுகாமல், சீரிய முறையில் சிந்தித்து தூய முறையில் பின்பற்றுவோமாக.

முரண்படும் ஹதீஸ்களும் முரணில்லா விளக்கமும்

முரண்படும் ஹதீஸ்களும் முரணில்லா விளக்கமும்
தொடர் 1
அப்துல் கரீம் MISc
குர்ஆனுக்கு முரண்படும் செய்திகளை நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக ஏற்கக் கூடாது என்று நாம் கூறிவருகிறோம்.
இதன் கருத்து ஹதீஸ்கள் குர்ஆனுக்கு மேலோட்டமாக முரண்படுவதைப் போன்று தோன்றிவிட்டாலே அந்தச் செய்திகளை எல்லாம் மறுத்து விடவேண்டும் என்பதல்ல. அவ்வாறு நாம் கூறவில்லை.
மாறாக குறிப்பிட்ட குர்ஆன் வசனத்திற்கும், ஹதீஸிற்கும் இடையில் முரண்பாட்டை களையும் விதமாக ஏதும் விளக்கம் அளிக்க இயலுமா? என முடிந்த வரை ஆய்வு செய்ய வேண்டும்.
அது தொடர்பான அனைத்து விவரங்களையும் திரட்டி முழுமையான ஆய்வு பார்வையை அந்த ஹதீஸ்களில் செலுத்திட வேண்டும்.
முரண்பாட்டை களையும் விதத்தில் தெளிவான விளக்கத்தை யாரும் அளித்திருப்பார்களேயானால் அதையும் பரிசீலிக்க வேண்டும்.
இப்படி முரண்பாட்டை நீக்குவதற்கு என்னென்ன வழிமுறைகள் உள்ளனவோ அந்த வழிகள் அனைத்தையும் பயன்படுத்திய பின்னரும் இதற்கு எந்த விளக்கமும் அளிக்க முடியாது என்பது தெளிவாகத் தெரிய வரும்போது மாத்திரமே குர்ஆனுக்கு முரண்படும் அந்தச் செய்தியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்க மாட்டார்கள் என்று முடிவெடுக்க வேண்டும்.
இதுபோன்ற நேரத்தில் இப்படி முடிவெடுப்பதே நமது ஈமானிய சிந்தனைக்கு உகந்ததாகவும், பாதுகாப்பானதாகவும் அமையும்.
இதுதான் நமது கொள்கை நிலையாகும். நமது நிலைப்பாடு இதுவாக இருக்க, ஒரு சிலர் வேண்டும் என்றே நம்மீது தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்திட முனைகின்றனர்.
முரண்படுவதைப் போன்று தோன்றிவிட்டாலே மறுக்கும் ஆயுதத்தை கையிலெடுத்து விடுகிறார்கள் என்பதுதான் இவர்கள் நம்மீது பதிய முயற்சிக்கும் புதிய முத்திரையாகும்.
இது முழுக்க முழுக்க உண்மைக்குப் புறம்பான போலி முத்திரை. ஏனெனில் மேலோட்டமாக குர்ஆனுக்கு முரண்படுவதைப் போன்று தோற்றமளிக்கும் எண்ணற்ற ஹதீஸ்களை சரியான விளக்கம் அளித்து இணக்கம் காணவே செய்கிறோம். அந்த ஹதீஸ்களை எல்லாம் சரியான விளக்கத்தோடு மக்களிடையே இவர்களை விட பன்மடங்கு வீரியத்துடன் பிரச்சாரம் செய்யவே செய்கிறோம்.
(இதனடிப்படையில் நாமே ஹதீஸ் காப்பாளர்கள். நம்மை விமர்சிப்பவர்கள் தங்களை ஹதீஸ் காப்பாளர்களாகப் பிதற்றிக் கொள்வதில் ஊசி முனையளவும் உண்மையில்லை என்பது வேறு விஷயம்.)
சரி. நீங்கள் சொல்வதைப் போன்று எத்தனை ஹதீஸ்களை முரண்பாட்டை களைந்து விளக்கம் கொடுத்துள்ளீர்கள்?
விளக்கம் கொடுத்து இணக்கம் காணும் ஹதீஸ்களின் பட்டியலைத் தர இயலுமா? என்றால் மிக அதிகமாகவே நம்மால் குறிப்பிட இயலும்.
அவற்றை அறியத்தருவது தான் இக்கட்டுரையின் முதற்கண் நோக்கமும் கூட என்றாலும் அதற்கு முன் முன்னோட்டமாக சில விஷயங்களை அறிந்து கொள்வது நலம்.
குர்ஆன் வசனத்திற்கு ஒரு ஹதீஸ் முரண்படுவதைப் போன்று தோற்றம் அளிக்க என்ன காரணம்? முரண்பாடு என்று எதனைக் குறிப்பிடுவது? என்பன போன்ற அடிப்படை தகவலை அறிந்து கொண்டால் இது தொடர்பான நம் அறிவை விசாலப்படுத்திக் கொள்ள அது உதவும்.
இனி விஷயத்திற்கு வருவோம். துவக்கமாக முரண்பாடு தோன்ற என்னென்ன காரணங்கள் உள்ளன என்பதை சில உதாரணங்களுடன் காண்போம்.
முரண்பாடு தோன்ற முதலாவது காரணம்
குர்ஆன், ஹதீஸ் என இரு மார்க்க ஆதாரங்களில் ஒன்று பொதுவான வாசக அமைப்பிலும் மற்றொன்று குறிப்பான வாசக அமைப்பிலும் வரும்.
இந்நேரத்தில் ஒன்றுக்கொன்று முரணாகத் தோன்றும்.
அதாவது பொதுவாகச் சொல்லப்பட்டதற்கு எதிராக குறிப்பாக சொல்லப்பட்டது முரண்படுவதைப் போன்று தோற்றமளிக்கும்.
அதேபோல  சில நேரத்தில் சட்டம் சொல்லும் வாசக அமைப்பு பொதுவாக வரும். ஆனால் அங்கே வாசக அமைப்பு கவனிக்கப்படாமல் யாருக்கு சொல்லப்பட்டது என்று குறிப்பிட்ட சில நபர்கள் மட்டுமே கவனத்தில் கொள்ளப்படுவார்கள்.
இதை பகுத்துப் பார்க்காத தருணங்களிலும்  முரண்பாடு எட்டிப்பார்க்கும்.
கருத்தை மட்டும் கவனிப்பதாலே முரண்பாடு போல் தோற்றமளிக்கும் இந்த நிலை ஏற்படுகிறது. நுணுக்கமாக அணுகினால் உண்மையில் இவ்வித ஆதாரங்களுக்கிடையில் எந்த முரண்பாடும் இல்லை என்பதை அறியலாம்.
இதை வார்த்தையாக சொல்லிக் கொண்டு வந்தால் ஒன்றும் புரியாததை போல இருக்கும். எனவே பின்வரும் வசனத்தையும் அதையடுத்த விளக்கத்தையும் ஆழ்ந்து படியுங்கள்.
ஒரு குற்றத்திற்கு இருவுலக தண்டனையா?
கொல்லப்படுவது, அல்லது சிலுவையில் அறையப்படுவது, அல்லது மாறுகால், மாறுகை வெட்டப்படுவது, அல்லது நாடு கடத்தப்படுவது ஆகியவையே அல்லாஹ்வுடனும், அவனது தூதருடனும் போர் செய்து பூமியில் குழப்பம் செய்ய முயற்சிப்போருக்குரிய தண்டனை. இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும். அவர்களுக்கு மறுமையில் கடும் வேதனை உள்ளது. 
அல்குர்ஆன் 5 33
அல்லாஹ்வுடனும், அவனுடைய தூதருடனும் போர் புரிபவர்களுக்கு கொல்லப்படுதல், சிலுவையில் அறையப்படுதல் போன்ற உலக ரீதியான தண்டனைகள் வழங்கப்படும். அத்துடன் முடிந்து போகாமல் மறுமையிலும் அவர்களுக்குத் தண்டனை உண்டு என்று இவ்வசனத்தில் சொல்லப்படுகிறது.
இவ்வசனத்தைப் பொதுவாக நோக்கும்போது ஒருவனுக்கு தான் செய்த குற்றத்திற்காக உலகத்தில் தண்டனை வழங்கப்பட்டால் அது அவனுக்கு போதுமானதாக அமையாது, மாறாக அவன் மறுமையிலும் தண்டிக்கப்படுவான் என்கிறது. உலகத்தில் குற்றத்திற்குரிய தண்டனை பெறுவதால் மறுமையின் தண்டனையிலிருந்து தப்ப இயலாது எனும் கருத்து இவ்வசனத்தில் வெளிப்படுகிறது.
ஆனால் பின்வரும் நபிமொழியை வாசித்தால் மேற்கண்ட குர்ஆன் வசனம் கூறும் கருத்திற்கு முரணான கருத்து அதில் சொல்லப்பட்டதை உணரலாம்.
'அல்லாஹ்விற்கு இணையாக எதனையும் கருதுவதில்லை; திருடுவதில்லை; விபச்சாரம் செய்வதில்லை; உங்கள் குழந்தைகளைக் கொல்வதில்லை; நிகழ்காலத்திலும் வருங்காலத்திலும் (யார் மீதும்) அவதூறு கூறுவதில்லை; எந்த நல்ல காரியத்திலும் (எனக்கு) மாறு செய்வதில்லை என்று என்னிடம் ஒப்பந்தம் செய்யுங்கள். உங்களில், (அவற்றை) நிறைவேற்றுகிறவரின் நற்கூலி அல்லாஹ்விடம் உள்ளது. மேற்கூறப்பட்ட (குற்றங்களில்) எதையாவது ஒருவர் செய்து, (அதற்காக) இவ்வுலகில் தண்டிக்கப்பட்டால் அது அவருக்குப் பரிகாரமாகி விடும். மேற்கூறப்பட்டவற்றில் எதையாவது ஒருவர் செய்து, பின்னர் அல்லாஹ் அதனை (யாருக்கும் தெரியாமல்) மறைத்துவிட்டால் அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் இருக்கிறார். அவன் நாடினால் அவரை மன்னிப்பான்; அவன் நாடினால் அவரைத் தண்டிப்பான்' இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தம்மைச் சுற்றித் தோழர்களில் ஒரு குழு அமர்ந்திருக்கும்போது கூறினார்கள்.
அறிவிப்பவர் உபாதா பின் ஸாமித்  (ரலி),
நூல் : புகாரி 18
ஒரு குற்றத்திற்காக உலகில் தண்டிக்கப்பட்டு விட்டால் அதுவே அக்குற்றத்திற்குரிய பரிகாரமாக ஆகி விடும் என்று இந்நபிமொழியில் சொல்லப்பட்டுள்ளது.
குற்றத்திற்குரிய பரிகாரமாக ஆகி விடும் என்றால் மறுமையில் தண்டனை இல்லை என்பதுதான் அதன் அர்த்தம்.
இதனடிப்படையில் முதலில் பார்த்த வசனத்திற்கு முரணாக இந்த ஹதீஸ் தென்படுகிறது.
உலகில் தண்டனை வழங்கப்பட்டால் அது பரிகாரமாகாது, மாறாக மறுமையிலும் தண்டனை கிடைக்கும் என்று குர்ஆன் கூறுகிறது.
உலகில் தண்டனை வழங்கப்பட்டால் அதுவே பரிகாரமாகி விடும் என்று நபிமொழி கூறுகிறது.
இப்படி ஒன்றுக்கொன்று முரண்பாடாக தோற்றமளிக்க நாம் மேலே சொன்ன தவறான அணுகுமுறையே காரணம்.
அதாவது எது பொதுவாகச் சொல்லப்பட்டது? எது குறிப்பாகச் சொல்லப்பட்டது? என்பதைப் பகுத்து அறியாமல் குறிப்பாக சொல்லப்பட்டதை பொதுவாக்குவதே இம்முரண்பாட்டிற்கான காரணியாகும்.
முதலில் குர்ஆன் வசனத்தை எடுத்துக் கொள்ளுங்கள்
குர்ஆன் வசனம் என்ன சொல்கிறது?
அவர்களுக்கு மறுமையில் கடும் வேதனை உள்ளது. 
(அல்குர்ஆன் 5 : 33)
அல்லாஹ், ரசூலுடன் எதிர்த்து போர் செய்பவர்களுக்கு உலகத்திலும் தண்டனை உண்டு, மறுமையிலும் தண்டனை உண்டு என்று இவ்வசனம் சொல்கிறது.
இதை வைத்துக் கொண்டு செய்த குற்றத்திற்காக உலகத்தில் தண்டனை வழங்கப்பட்டாலும் அது பரிகாரமாக அமைவதில்லை. மாறாக மறுமையிலும் தண்டனை உண்டு என்று பொது சட்டம் எடுத்து அதை அனைவருக்கும் பொருத்தியதே இதற்கான காரணமாகும்.
ஏனெனில் இவ்வசனம் அல்லாஹ், ரசூலை எதிர்த்து போர் செய்யும் இறை மறுப்பாளர்களைப் பற்றி பேசுகிறது.
அல்லாஹ்வுடனும், அவனது தூதருடனும் போர் செய்து பூமியில் குழப்பம் செய்ய முயற்சிப்போருக்குரிய தண்டனை
(அல்குர்ஆன் 5 : 33)
இவ்வசனத்தின் துவக்கத்தில் அல்லாஹ் ரசூலுடன் போர் செய்பவர்களின் தண்டனை என்று துவங்குகிறது.
காபிர்களே அல்லாஹ் ரசூலுடன் போர் செய்ய முன்வருவார்கள். எனவே இவ்வசனம் இறை மறுப்பாளர்களை பற்றி குறிப்பிடுகிறது என்பது தெளிவு.
இறை மறுப்பாளர்கள் இவ்வுலகத்தில் தண்டனை பெற்றாலும் அவர்களிடம் இணை வைப்பு இருக்கிற காரணத்தினால் மறுமையில் தண்டனை பெறுவதிலிருந்து தப்ப இயலாது. எந்தக் குற்றத்திற்காக அவர்கள் உலகில் தண்டிக்கப்பட்டாலும் குஃப்ர் இருக்கிற காரணத்தினால் மறுமையிலும் அவர்கள் தண்டனையை அனுபவிக்கவே செய்வார்கள்.
எனவேதான் அல்லாஹ் இத்தகைய காபிர்களுக்கு மறுமையிலும் பெரும் வேதனை உள்ளது என்று கூறுகிறான்.
ஆனால் உபாதா ரலி அறிவிக்கும் நபிமொழியோ முஸ்லிம்களைப் பற்றி விவரிக்கின்றது.
ஹதீஸின் துவக்கம் கூட ஷிர்க் வைக்க மாட்டோம் என்று என்னிடத்தில் பைஅத் செய்யுங்கள் என்றே துவங்குகிறது.
'அல்லாஹ்விற்கு இணையாக எதனையும் கருதுவதில்லை; திருடுவதில்லை; விபச்சாரம் செய்வதில்லை; உங்கள் குழந்தைகளைக் கொல்வதில்லை; நிகழ்காலத்திலும் வருங்காலத்திலும் (யார் மீதும்) அவதூறு கூறுவதில்லை; எந்த நல்ல காரியத்திலும் (எனக்கு) மாறு செய்வதில்லை என்று என்னிடம் ஒப்பந்தம் செய்யுங்கள்.
அறிவிப்பவர் உபாதா பின் ஸாமித் (ரலி),
நூல் : புகாரி 18
நபிகள் நாயகத்திடம் இவ்விதமாக பைஅத் செய்பவர் சர்வ நிச்சயம் முஸ்லிமாகவே இருப்பார் என்பதில் துளியும் சந்தேகமில்லை.
அத்தகைய முஸ்லிம் ஒருவர் ஒரு குற்றத்தைச் செய்து அதற்காக இவ்வுலத்தில் தண்டனையையும் பெற்று விடுவாரேயானால், அத்தண்டனை அவரது குற்றத்திற்குரிய பரிகாரமாக அமைந்து விடும் என்று நபிகள் நாயகம் முஸ்லிம்களின் நிலையைப் பற்றி இதில் தெரிவிக்கின்றார்கள்.
சுருக்கமாகச் சொல்வதெனில் ஒரு குற்றத்திற்காக உலகத்தில் தண்டனை பெற்றால் அதுவே பரிகாரமாக அமைந்து விடும் என்பது முஸ்லிம்களுக்கானது. இறை மறுப்பாளர்களுக்கானது அல்ல.
உலகத்தில் வழங்கப்படும் தண்டனையோடு சேர்த்து மறுமையிலும் பெரும் வேதனை உண்டு என்று அல்லாஹ் சொல்வது இறை மறுப்பாளர்களுக்கானது. முஸ்லிம்களுக்கானது அல்ல.
இப்படி காஃபிர்களுக்கு சொல்லப்பட்டதை அனைத்து மக்களுக்குமான பொது சட்டம் என்றும் முஸ்லிம்களுக்கு சொல்லப்பட்டதை காபிர்கள் உட்பட அனைவருக்கும் உரியது எனவும் தவறாகப் புரிந்து கொள்வதே இந்தத் தற்காலிக முரண்பாட்டிற்கான காரணமாகும்.
எது குறிப்பாக சொல்லப்பட்டது? எது பொதுவாகச் சொல்லப்பட்டது? என்பதைப் பிரித்து அறியும்போது மேற்கண்ட குர்ஆன் வசனத்திற்கும் நபிமொழிக்கும் மத்தியில் எவ்வித முரண்பாடும் இல்லை என்பதை விளங்கலாம்.
இதே பாணியில் இன்னும் பல உதாரணங்களைச் சொல்ல இயலும் என்றாலும் முரண்பாடு தோன்ற இது முதற்காரணம் என்பதை விளங்கிக் கொள்ள இவ்வுதாரணம் ஒன்றே போதுமானது.
இரண்டாம் காரணம்
குர்ஆன், ஹதீஸிற்கு இடையில் மேலோட்டமாக முரண்பாடுபோல் காட்சியளிக்க மற்றுமொரு காரணம் என்னவெனில் இரு ஆதாரங்களில் ஒன்று பொதுவானதாகவும், மற்றொரு ஆதாரம் நிபந்தனையுடன் சொல்லப்பட்டதாகவும் அமையப் பெற்றிருக்கும்.
பொதுவாகச் சொல்லப்பட்டதை - நிபந்தனையுடன் சொல்லப்பட்டதுடன் ஒப்பு நோக்கி ஒன்றுக்கொன்று முரணாக இருப்பதாக எண்ணிக் கொள்வோம்.
இதுவும் தெளிவான முரண்பாடு அல்ல.
பொதுவாக சொல்லப்பட்ட அந்த ஆதாரத்தைப் பொதுவாக எடுக்காமல்  மற்றொரு ஆதாரத்தில் சொல்லப்பட்ட நிபந்தனையை எடுத்து அதில் பொருத்தி எடுத்துக் கொள்வோமேயானால், மெலிதாக எட்டிப்பார்த்த முரண்பாடு முழுமையாய் மறைந்து போவதைப் பார்க்கலாம்.
இவ்வித முரண்பாடு எப்படித் தோன்றி, மறைகிறது என்பதையும் உதாரணங்களின் மூலம் அணுகுவோம்.
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காகத் தயாராகும்போது உங்கள் முகங்களையும், மூட்டுக்கள் வரை உங்கள் கைகளையும், கரண்டை வரை உங்கள் கால்களையும் கழுவிக் கொள்ளுங்கள்!
(அல்குர்ஆன் 5 : 6)
தொழுகைக்காக தயாராகும் அனைத்து முஃமின்களும் உழு செய்ய வேண்டும் என்று பொதுவாக இவ்வசனம் கட்டளையிடுகிறது.
அதாவது ஒவ்வொரு முறை தொழுகைக்குத் தயாராகும் போதெல்லாம் உழு செய்ய வேண்டும் எனும் கருத்து இதனுள் அடங்கியுள்ளது.
ஆனால் பின்வரும் நபிமொழியை மோலோட்டமாக அணுகும் போது மேற்கண்ட வசனத்திற்கு முரண்போல் தோன்றும்.
நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி தினத்தன்று ஒரு முறை செய்த உளூவினால் பல நேரத் தொழுகைகளைத் தொழுதார்கள். அப்போது (கால்களைக் கழுவாமல் ஈரக் கையால்) காலுறைகள் மீது தடவி (மஸ்ஹு செய்து) கொண்டார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், முன்னெப்போதும் செய்யாத ஒன்றை இன்றைக்குத் தாங்கள் செய்கிறீர்களே? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், செய்ய வேண்டுமென்றுதான் செய்தேன், உமரே! என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது
அறிவிப்பவர் : புரைதா ரலி,
நூல் : முஸ்லிம் 466
இந்த நபிமொழியில் பல தொழுகைகளை நபிகள் நாயகம் ஒரு உழுவில் தொழுதுள்ளார்கள் என்பதை அறிகிறோம்.
ஒரு தொழுகைக்குத் தயாராகும்போது நபிகள் நாயகம் உழு செய்துள்ளார்கள். ஏனைய தொழுகைக்கு தயாராகும்போது உழு செய்யவில்லை. முந்தைய உழுவைக் கொண்டே தொழுதுள்ளார்கள் என்பது இதன் பொருள்.
இதன்படி பார்க்கும்போது தொழுகைக்குத் தயாராகும்போது உழு செய்ய வேண்டும் என்ற குர்ஆன் வசனம் கூறும் கட்டளைக்கு மாற்றமாக நபியவர்களின் இந்தச் செயல் அமைந்துள்ளது.
குர்ஆன் வசனத்திற்கு முரணாக இந்த ஹதீஸ் உள்ளது போன்று வெளிப்படையில் தோன்றுகிறது.
தொழுகைக்குத் தயாராகும்போது உழு செய்ய வேண்டும் என்ற குர்ஆன் வசனம் கூறும் பொதுக் கட்டளைக்கு  முரணாக பின்வரும் நபிமொழியும் அமைந்துள்ளதை உணரலாம்.
'கைபர் போர் நடந்த வருடம் நபி (ஸல்) அவர்களுடன் கைபருக்குச் சென்றோம். 'ஸஹ்பா' எனும் இடத்தை அடைந்ததும் நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு (அஸர்) தொழுகை நடத்தினார்கள். தொழுது முடித்ததும் (பயண) உணவைக் கொண்டு வரும்படி கூறினார்கள். அப்போது மாவைத் தவிர வேறு எதுவும் கொண்டு வரப்படவில்லை. நாங்கள் சாப்பிட்டோம்; குடித்தோம். பின்னர் மக்ரிப் தொழுகைக்காகச் சென்றார்கள். அப்போது வாயை (மட்டும்) கொப்பளித்து, உளூச் செய்யாமலேயே எங்களுக்கு மக்ரிப் தொழுகை நடத்தினார்கள்"
அறிவிப்பவர் ஸுவைத் இப்னு நுஃமான்(ரலி),
நூல் : புகாரி 215
(இப்படி பல செய்திகள் உள்ளது. உதாரணத்திற்கு இரு செய்திகளை பதிந்துள்ளோம்.)
ஆக தொழுகைக்குத் தயாராகும்போது உழு செய்ய வேண்டும் என்று குர்ஆன் கட்டளையிடுகிறது.
ஆனால் நபிகள் நாயகமோ தொழுகைக்குத் தயாராகும் போது உழு செய்யவில்லை. (முந்தைய உழுவைக் கொண்டே தொழுதுள்ளார்கள்.) உழு இருந்தாலும் இந்தத் தொழுகைக்கு தயாராகும்போது உழு செய்யவில்லை எனும் கருத்தில் முரண்பாடு போல் உருவகம் ஏற்படுகிறது.
உண்மையில் இதுவும் தெளிவான முரண்பாடு அல்ல.
ஏனெனில் தொழுகைக்குத் தயாராகும்போது உழு செய்ய வேண்டும் என்று பொதுவாக சட்டம் சொன்ன குர்ஆன் வசனத்தில் என்ன நிபந்தனை சேர்க்கப்பட வேண்டும் என்பது இந்நபிமொழிகளில் சொல்லப்பட்டுள்ளது.
உழு இல்லாமல் இருக்கும் நிலையில் என்பது தான் இந்த நபிமொழிகளில் சொல்லப்பட்டிருக்கும் நிபந்தனையாகும்.
நிபந்தனை சொல்லப்படாமல் பொதுச் சட்டம் கூறும் வசனத்தை (அல்குர்ஆன் 5 6) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே நமக்கு எடுத்துரைத்தார்கள்.
நபிகள் நாயகம் அதற்குரிய செயல் விளக்கமாக ஒரு உழுவில் பல தொழுகைகளைத் தொழுதுள்ளார்கள் என்றால் இதன் மூலம் நமக்கு பொதுச்சட்டத்தில் சேர்க்க வேண்டிய ஒரு நிபந்தனையை விளக்கித் தருகிறார்கள்.
உழு இல்லாமல் இருக்கும் நிலையில் தொழுகைக்கு தயாராகும் போதுதான் உழு செய்து கொள்ள வேண்டும்.
உழு இருக்கும் நிலையில் தொழுகைக்குத் தயாராகும் போது உழு செய்யத் தேவையில்லை.
தொழுகைக்கு தயாராகும் போது உழு செய்ய  வேண்டும் என்று அவ்வசனம் குறிப்பிடுவது உழு இல்லாமல் இருக்கும்போதுதான் எனும் நிபந்தனையை தம் செயல் மூலம் நமக்கு விளக்கித் தருகிறார்கள்.
எனவே பொதுவாக சட்டம் சொன்ன குர்ஆன் வசனத்தில் ஹதீஸ்களில் சொல்லப்பட்டிருக்கும் இந்த நிபந்தனையைப் பொருத்திப் பார்க்கும்போது இரண்டுக்கும் இடையில் எந்த முரண்பாடும் இல்லாமல் போகிறது
இதே விஷயத்தை பின்வரும் விவகாரத்திலும் பார்க்கலாம்.
பாலூட்டிய அன்னையர்கள் திருமணம் முடிக்க தடை செய்யப்பட்டவர்கள் என்று குர்ஆன் கூறுகிறது.
(பார்க்க, அல்குர்ஆன் 4 : 23)
இவ்வசனம் பொதுவாகவே உள்ளது. எத்தனை முறை பாலூட்டியிருக்க வேண்டும் என்று எந்தத் தகவலும் இல்லை.
இந்த வசனத்தின்படி ஒரு முறை, ஒரு மிடறு அருந்தினால் கூட அப்பெண்மணி அவரது வாரிசுகள் திருமணம் முடிக்கத் தடை என்று கருத்து வரும். ஏனெனில் வசனத்தில் இத்தனை முறை என்றோ - இந்த அளவு என்றோ - இத்தனை வயதில் என்றோ எந்த நிபந்தனையும் சொல்லப்படவில்லை.
ஆனால் நபிமொழிகளில் பார்க்கும்போது இவ்வசனத்தில் சொல்லப்பட்ட சட்டத்திற்கான நிபந்தனைகள் கூறப்பட்டுள்ளது.
குறைந்த பட்சம் மூன்று தடவைகள் பாலருந்த வேண்டும்.
வயிறு நிரம்ப அருந்த வேண்டும்.
இரண்டு வயதிற்குள் பாலருந்தியிருக்க வேண்டும் என்று ஹதீஸ்களில் நிபந்தனைகளை நபியவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் என் வீட்டில் இருந்தபோது, ஒரு கிராமவாசி வந்தார். அவர் நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ஏற்கெனவே ஒரு மனைவி இருக்கும் நிலையில் நான் மற்றொரு பெண்ணை மணந்துகொண்டேன். என்னுடைய முதல் மனைவி, "நான் உம்முடைய புதிய மனைவிக்கு ஒரு தடவையோ அல்லது இரு தடவைகளோ பாலூட்டியிருக்கிறேன். (எனவே, இந்தத் திருமணம் செல்லாது) என்று கூறுகிறார்'' எனத் தெரிவித்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஒரு தடவையோ இரு தடவைகளோ மட்டும் (உறிஞ்சிக் குடிக்கும் வகையில்) பாலூட்டுவதால் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவு ஏற்பட்டுவிடாது'' என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அறிவிப்பவர் உம்முல் ஃபள்ல் (ரலி),
நூல் : முஸ்லிம் 2870
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மார்பகத்தின் வழியாக (குழந்தையின்) வயிறை நிரப்பும் அளவிற்குப் பால் புகட்டுவதினாலே பால்குடி உறவு ஏற்படும். இன்னும் (இவ்வாறு) பால் புகட்டுவது பால் குடிகாலம் 2 வருடம் முடிவடைவதற்கு) முன்னால் இருக்க வேண்டும்.
அறிவிப்பவர் : உம்மு சலமா (ரலி)
நூல் : திர்மிதி (1072)
குர்ஆனில் சொல்லப்பட்ட பொதுச்சட்டத்தை அப்படியே அணுகாமல் நபிமொழிகளில் சொல்லப்பட்டிருக்கும் நிபந்தனைகளுடன் பொருத்தி அணுக வேண்டும் என்பதற்கு இது ஓர் சிறந்த எடுத்துக் காட்டு.
இந்த விஷயத்தை அப்படி அணுகவில்லையென்றால் என்னவாகும்?
பாலருந்தி விட்டால் திருமணம் முடிக்க ஹராம் என்று திருக்குர்ஆன் பொதுவாகச் சொல்கிறது.
ஆனால் ஹதீஸோ இரண்டு முறை பாலருந்தினாலும் ஹராம் என்பது ஏற்படாது என்று குர்ஆனுக்கு முரணாக சட்டம் கூறுகிறது என்று முரண் கற்பிக்க ஆரம்பித்து விடுவோம்.
எனவே குர்ஆனுக்கும் ஹதீஸிற்கும் மத்தியில் முரண்போன்ற பிம்பம் ஏற்பட பொதுவாக சொல்லப்பட்ட ஒரு ஆதாரத்தை நிபந்தனையுடன் சொல்லப்பட்டுள்ள ஆதாரத்துடன் இணைத்து புரியாமல் இருப்பதும் ஒரு காரணம் என்பதை இதன் மூலம் விளங்கி கொள்ள வேண்டும்.

.....................................................................................................................................................................................................................
முரண்படும் ஹதீஸ்களும் முரணில்லா விளக்கமும்
முரண்படக் காரணம் என்ன?
தொடர் 2
அப்துல் கரீம், MISc
அறிவிப்பாளர்கள் செய்யும் தவறு  - மூன்றாம் காரணம்
குர்ஆன், ஹதீஸ்களுக்கு மத்தியில் முரண்படும் படியான போலித்தோற்றம் ஏன் தோன்றுகிறது என்பதற்கான காரணங்களை பார்த்துவருகிறோம். சென்ற தொடரில் இரு காரணங்களை அதற்குரிய உதாரணங்களுடன் விரிவாகக் கண்டோம். இனி அடுத்தடுத்த காரணங்களைக் காண்போம்.
அறிவிப்பாளரின் தவறால் முரண்பாடாகத் தோன்றும்
சில தருணங்களில் ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளர்கள் செய்கிற தவறும் முரண்பாடுகளைத் தோற்றுவித்து விடும்.
ஒரு அறிவிப்பாளர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லாத வார்த்தையை தவறுதலாக நபியின் சொல்லாக அறிவித்து விடுவார். 
இன்னும் சில நேரத்தில் அந்த மொத்த செய்தியையே நபிகள் நாயகம் (ஸல்) கூறியிருக்க மாட்டார்கள். ஆனால் அறிவிப்பாளரின் தவறினால்அது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டிருக்கும்.
அவ்வாறு சொல்லப்பட்ட வாசகம் மற்றும் செய்தி குர்ஆனோடு மோதும் வகையில் மல்லுக்கட்டி கொண்டு நிற்பது மட்டுமின்றி நமக்கும் பெரிய சிக்கலை ஏற்படுத்தி விடும்.
இது போன்ற செய்திகளைச் சற்று கூடுதல் கவனத்துடன் ஆய்வு செய்து, சிக்கலை ஏற்படுத்தும் அச்சொல் யாருடையது என்பதைக் கண்டுபிடித்து விட்டால் அப்போது உதயமான முரண்பாடு அடுத்த வினாடியில் அஸ்தமனமாகிவிடும்.
இதற்கு உதாரணமாகப் பின்வரும் ஹதீஸைக் குறிப்பிடலாம்.
ஒருவர் பாவத்தை மற்றவர் சுமப்பாரா?
ஒருவர் செய்த பாவத்தை இன்னொருவர் சுமக்க மாட்டார் என்று குர்ஆன் பல இடங்களில் தெளிவுபடச் சொல்கிறது.
"அல்லாஹ் அல்லாதவர்களையா இறைவனாகக் கருதுவேன்? அவனே அனைத்துப் பொருட்களின் இறைவன். (பாவம் செய்யும்) எவரும் தமக்கு எதிராகவே சம்பாதிக்கிறார். ஒருவன் மற்றவனின் சுமையைச் சுமக்க மாட்டான். பின்னர் உங்கள் இறைவனிடமே உங்கள் மீளுதல் உள்ளது. நீங்கள் முரண்பட்டது பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான்'' என்றும் கூறுவீராக!
அல்குர்ஆன் 6 164
அவர்கள், சென்றுவிட்ட சமுதாயம். அவர்கள் செய்தது அவர்களுக்கு. நீங்கள் செய்தது உங்களுக்கு. அவர்கள் செய்தது குறித்து நீங்கள் விசாரிக்கப்பட மாட்டீர்கள்.
அல்குர்ஆன் 2 134
மேலும் பார்க்க அல்குர்ஆன் 17 15, 35 18, 39 7
குர்ஆன் கூறும் இந்த அடிப்படை சித்தாந்தத்திற்கு மாற்றமாக, முரணாக சில ஹதீஸ்களின் சொற்பிரயோகங்கள் உள்ளதை பின்வரும் செய்தியின் வாயிலாக அறியலாம்.
 (என் தந்தை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் இறந்தபோது அவர்களுக்காக (என் சகோதரி) ஹஃப்ஸா (ரலி) அழுதார். அப்போது நான்"அருமை மகளே! பொறுமையாக இரு! "இறந்தவருக்காக அவருடைய குடும்பத்தார் அழுவதால் அவர் வேதனை செய்யப்படுகிறார்' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நீர் அறியவில்லையா?'' என்று கேட்டேன்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) நூல் : முஸ்லிம் 1687
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறந்தவருக்காக ஒப்பாரி வைத்து அழுவதால் மண்ணறையில் (கப்று) அவர் வேதனை செய்யப்படுவார்.
அறிவிப்பவர் : உமர் (ரலி), நூல் : முஸ்லிம் 1688.
ஒருவர் செய்த பாவத்திற்கு இன்னொருவர் தண்டிக்கப்பட மாட்டார் என்று குர்ஆன் கூறுகிறது.
ஆனால் குடும்பத்தார் அழுவதால் இறந்தவர் வேதனை செய்யப்படுவார், அதாவது குடும்பத்தார் செய்த பாவத்திற்காக? சம்பந்தமே இல்லாத இறந்தவர் தண்டிக்கப்படுவார் என்று நபிகள் நாயகம் சொன்னதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தெளிவான முரண்பாடாகும்.
ஆழ்ந்த சிந்தனையோடு இதை அணுகவில்லையென்றால் குர்ஆனை விளக்குவதற்காக வந்த நபிகள் நாயகம் (ஸல்) ஏன் குர்ஆனுக்கு முரணாக இவ்வாறு சொன்னார்கள் என்று நாம் இடியாப்ப சிக்கலில் சிக்கி, முரண்பாட்டிலேயே உழன்று கொண்டிருப்போம்.
இந்த முரண்பாடு தோன்றியதற்கு அடிப்படைக் காரணம், நபிகளார் சொல்லாததை நபியின் சொல்லாக அறிவிப்பாளர் தவறுதலாக அறிவித்ததேயாகும்.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் தெளிவாக விளக்குகிறார்கள்.
"குடும்பத்தினர் (ஒப்பாரி வைத்து) அழுவதால் மண்ணறையில் (இருக்கும் அவர்களின் உறவினரான) இறந்தவர் வேதனைசெய்யப்படுகின்றார்'' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், "(நபி -ஸல்- அவர்கள் அப்படிச் சொல்லவில்லை.) "இறந்தவர் (தன் வாழ்நாளில் புரிந்த) சிறிய, பெரிய பாவங்களின் காரணத்தால் வேதனை செய்யப்படுகிறார். அவருடைய குடும்பத்தினரோ, இப்போது அவருக்காக அழுது கொண்டிருக்கின்றனர்' என்றுதான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் :  உர்வா பின் ஸுபைர் (ரஹ்), நூல் : புகாரி 3978
அதாவது குடும்பத்தார் அழுவதால் இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார் என்பது நபியின் வார்த்தை அல்ல.
பாவத்தின் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார். அவரது குடும்பத்தார்களோ அழுது கொண்டிருக்கிறார்கள் என்று தான் நபிகள்நாயகம் (ஸல்) கூறினார்கள்.
இந்த வாசகத்தை மாற்றியமைத்து குடும்பத்தார் அழுவதால் இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார் என்று அறிவிப்பாளர் தவறுதலாகக் கூறிவிட்டார்.
தவறாக அறிவிக்கப்பட்ட அந்த வார்த்தைதான் குர்ஆனோடு முரண்பட்டு நிற்கின்றது. நபியின் கூற்று முரண்பட்டு நிற்கவில்லை.
அறிவிப்பாளரால் தவறுதலாக அறிவிக்கப்பட்ட அந்த வார்த்தையை நபியின் வார்த்தை என்று எடுத்துக் கொள்வதால் குர்ஆனுக்கு முரணாக நபியின் சொல் அமைந்துவிட்டதுபோல தோற்றம்  ஏற்பட்டு விடுகிறது.
ஆக இங்கே தீராத முரண்பாடு தோன்றுவதற்கு அறிவிப்பாளர்கள் அறியாமல் செய்த தவறே பிரதான காரணமாக அங்கம் வகிக்கின்றது என்பதைப் புரியலாம்.
அது அறிவிப்பாளரிடமிருந்து ஏற்பட்ட தவறு என்பது புலப்படும் போது முரண்பாடு இல்லாமல் போய் விடுகிறது.
அறிவிப்பாளரின் தவறினாலும் முரண்பாடுகள் முளைக்கின்றன என்பதற்கு உதாரணமாக பின்வரும் நபிமொழியையயும் குறிப்பிடலாம்.
சகுனம் உண்டா?
நன்மை, தீமை எல்லாமே ஏற்கனவே இறைவன் விதித்த விதிப்படியே நடைபெறுகின்றது. அல்லாஹ் ஏற்படுத்திய விதியில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை.
இக்கருத்து பல குர்ஆன் வசனங்களில் சொல்லப்பட்டுள்ளது.
உம்மையும், உம்முடன் இருப்போரையும் கெட்ட சகுனமாகக் கருதுகிறோம் என்று அவர்கள் கூறினர். உங்கள் கெட்ட சகுனம் அல்லாஹ்விடமே உள்ளது. மாறாக நீங்கள் சோதிக்கப்படும் கூட்டமாக உள்ளீர்கள் என்று அவர் கூறினார்.
அல்குர்ஆன் 27:47
"அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர எங்களுக்கு வேறு எதுவும் ஏற்படாது. அவன் எங்கள் அதிபதி. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்'' என்று கூறுவீராக!
அல்குர்ஆன் 9 51
இந்த பூமியிலோ, உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது.இது அல்லாஹ்வுக்கு எளிதானது.
அல்குர்ஆன் 57 22
இந்தக் குர்ஆன் வசனங்களோடு மோதும் வகையில் பின்வரும் செய்தி அமைந்துள்ளது.
"அபசகுனம் என்பது குதிரை, பெண், வீடு ஆகிய மூன்று விஷயங்களில் மட்டுமே. என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), நூல் : புகாரி 2858
சகுனம் பார்க்கக் கூடாது, எல்லாமே இறைவிதிப்படி நடக்கின்றது என்று குர்ஆனும், இல்லையில்லை,  சிலவற்றில் சகுனம் பார்க்கலாம் என்று நபிமொழியும்  ஒன்றுக் கொன்று முரண்படான கருத்தை போதிக்கின்றது.
(குறிப்பு சகுனம் பார்த்தல் இணை வைத்தலாகும் என்று நபிகளாரே கூறிவிட்டபடியால், இணை வைப்பில் விதிவிலக்கு இருக்காது என்பதை கவனத்தில் கொள்க.)
இத்தகைய முரண்பாட்டிற்கும் அறிவிப்பாளர்களின் புறத்திலிருந்து ஏற்பட்ட தவறே காரணமாகும்.
ஹதீஸ் அறிவிப்பாளர் நபியின் சொல்லை சரியாக அறிவிக்காததும் நபி சொல்லாததை தவறுதலாக நபியின் சொல்லாக அறிவித்ததுமே இதற்குக் காரணம் என்பதை அன்னை ஆயிஷா (ரலி) அவர்களும் விளக்கியுள்ளார்கள்.
இரண்டு மனிதர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்து சகுனம் என்பது பெண், கால்நடை, வீடு ஆகியவற்றில் மட்டும்தான் இருக்கிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா அறிவித்துக் கொண்டிருக்கிறார் என்று கூறினார்கள். உடனே அவர்கள் மேலும் கீழூம் பார்த்துவிட்டு அபுல்காசிமிற்கு (நபி (ஸல்) அவர்களுக்கு) இந்தக் குர்ஆனை அருளியவன் மீது சத்தியமாக இப்படி நபி (ஸல்) அவர்கள் சொல்லவில்லை. மாறாக அறியாமைக் கால மக்கள் சகுனம் என்பது பெண் கால்நடை, வீடு ஆகியவற்றில் உண்டு எனக் கூறி வந்தார்கள் என்றுதான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று சொல்லிவிட்டு இந்த பூமியிலோ, உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது (57:22) என்ற வசனத்தை ஓதினார்கள்.
 அறிவிப்பவர் : அபூஹஸ்ஸான் (ரஹ்), நூல் : அஹ்மத் (24894)
குறிப்பிட்ட மூன்றிலும் சகுனம் உண்டு என நபியின் சொல்லாக அறிவிக்கப்பட்டது முற்றிலும் அறிவிப்பாளர்களின் புறத்திலிருந்து ஏற்பட்டதவறு என்றும் அறியாமைக் காலத்தில் இந்த மூன்றிலும் மக்கள் சகுனம் பார்த்து வந்தார்கள் என்பதைத்தான் நபியவர்கள் கூறினார்கள் என்றும் அன்னை ஆயிஷா விளக்கமளிக்கின்றார்கள்.
 மூன்றில் சகுனம் உண்டு என்று நபியின் சொல்லாக அறிவிக்கப்பட்டது முற்றிலும் அறிவிப்பாளர்களின் தவறே என்பதை அனைத்து அறிஞர்களும் ஒப்புக் கொள்கிறார்கள்.
இப்படி அறிவிப்பாளர்கள் செய்யும் அறியாப் பிழையும் குர்ஆனோடு சில ஹதீஸ் முரண்படுவதைப் போன்று தோற்றமளிக்க  முக்கிய காரணமாகும்.
சொல்லப்போனால் அதிகமான ஹதீஸ்களுக்கிடையில் பொய்யான முரண்பாடு தோன்ற இந்த வகை காரணமே அதிகமானது என்பதையும் இந்நேரத்தில் பதிவு செய்து கொள்கிறோம். அறிவிப்பாளர்களின் பிழைகள் கண்டுணரப்படும்போது இந்த வகை முரண்பாடுகள் இயல்பாக கழன்று போகும்.
மாறுபட்ட சூழல் - நான்காம் காரணம்
முரண்பாடு தோன்ற இன்னொரு காரணம் செய்தி சொல்லப்பட்ட சூழலை நாம் அறியாமல் இருப்பதாகும்.
இரண்டு வெவ்வேறு, காலச் சூழ்நிலையில் சொல்லப்பட்ட இரண்டு செய்திகளை ஒரே சூழலில் சொல்லப்பட்டதைப் போன்று பொதுவாக ஒப்பு நோக்கிப் பார்ப்பது, தெளிவற்ற முரண்பாடு தோன்ற காரணமாக உள்ளது.
ஒரு பொருளுக்கு ஒரு சூழ்நிலையில் ஒரு சட்டமும், வேறு ஒரு சூழ்நிலையில் அதற்கு மாற்றமான சட்டமும் சொல்லப்பட்டிருக்கும்.
இரு சூழ்நிலைகளில் சொல்லப்பட்ட இரு சட்டங்களை ஒரே சூழ்நிலையில் சொல்லப்பட்ட இரு சட்டங்களைப் போன்று பார்த்தால் முரண்பாடாகத்தான் தெரியும். இரண்டையும் பிரித்து அணுகும் போது முரண்பாடு அற்றுப் போவதை கண்கூடாகக் காணலாம்.
குர்பானி இறைச்சியை சேமிக்கக் கூடாதா?
பின்வரும் நபிமொழிகள் மூன்று நாள்களுக்கு மேல் குர்பானி இறைச்சிகளை சேமித்து வைக்கக் கூடாது என்று தடை செய்கிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யாரும் தமது குர்பானி இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேல் உண்ண வேண்டாம்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி), நூல் : முஸ்லிம் 3984
நான் (கலீஃபா) அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களுடன் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டேன். அவர்கள் உரை நிகழ்த்துவதற்குமுன்பே பெருநாள் தொழுகை தொழுவித்தார்கள். (தமது உரையில்) "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நாம் நமது குர்பானிஇறைச்சிகளை மூன்று நாட்களுக்கு மேல் (சேமித்துவைத்து) உண்பதற்குத் தடை விதித்தார்கள்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஉபைத் சஅத் பின் உபைத் (ரஹ்),
நூல் : முஸ்லிம் 3982
மேற்கண்ட நபிமொழிக்கு முரணாக இறைச்சியை அதிக நாள்கள் சேமித்து வைக்க நபிகள் நாயகம் அனுமதி வழங்கியதாக மற்றொரு செய்தி கூறுகிறது.
நாங்கள் குர்பானிப் பிராணிகளின் இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேல் சேமித்து வைக்காமல் இருந்து வந்தோம். பின்னர் அதை (மூன்று நாட்களுக்கு மேல்) பயண உணவாக எடுத்துச் சென்று, அதை உண்ணுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல்:  முஸ்லிம் 3989
மேலோட்டமாக இந்த இரு செய்திகளையும் இணைத்துப் பார்க்கும்போது இரண்டுக்கும் இடையில் முரண் இருப்பதைப் போன்று எண்ணத்தோன்றும்.
ஆனால் உண்மை நிலை என்னவெனில், இரண்டு சட்டங்களும் இரு வேறு சூழ்நிலைகளில் சொல்லப்பட்டதாகும்.
ஏழை மக்கள் பசி பட்டினியுடன் கிடந்த காலச்சூழ்நிலையில் இறைச்சியை மூன்று நாள்களுக்கு மேல் சேமித்து உண்ணக் கூடாது என்று நபியவர்கள் தடுத்தார்கள். அப்போதுதான் அந்த இறைச்சிகள் மூலம் ஏழைகள் பயன் அடைவார்கள் என்பதற்காக இப்படியொரு ஏற்பாடு.
பசி, பட்டினி காலம் இல்லாமற்போய், வறுமை பெருமளவு ஒழிக்கப்பட்ட போது இனி குர்பானி இறைச்சிக்கு அத்தகைய எந்த வரையறையும் சட்டமும் இல்லை, எத்தனை நாள்கள் வேண்டுமானாலும் சேமித்து வைத்து சாப்பிடலாம் என்ற பொது சலுகையை வழங்கி விட்டார்கள்.
இந்த விளக்கம் நம்முடைய சொந்த விளக்கம் அன்று.
ஹதீஸ்களில் நபிகள் நாயகமே இதைத் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் உங்களை அடக்கத் தலங்களைச் சந்திக்க வேண்டாமென்று தடை விதித்திருந்தேன். இனி நீங்கள் அவற்றைச் சந்தியுங்கள். குர்பானிஇறைச்சியை மூன்று நாட்களுக்கு மேல் சேமித்துவைக்க வேண்டாமென உங்களுக்குத் தடை விதித்திருந்தேன். இனி நீங்கள் விரும்பும் நாட்கள்வரை சேமித்துவையுங்கள். பழச்சாறு மதுபானங்கள் ஊற்றிவைக்கப் பயன்படும் பாத்திரங்களைப் பயன்படுத்த வேண்டாமென்று உங்களுக்குத் தடை விதித்திருந்தேன். இனி நீங்கள் எல்லாப் பாத்திரங்களிலும் பருகலாம். ஆனால், போதையூட்டுகின்ற வற்றை அருந்தாதீர்கள்.
அறிவிப்பவர் : புரைதா (ரலி), நூல் : முஸ்லிம் 1778
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் ஈதுல் அல்ஹா பெருநாள் சமயத்தில் கிராமப்புற ஏழை மக்களில் சிலர் (மதீனாவுக்கு)வந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்), "(குர்பானி இறைச்சிகளை) மூன்று நாட்களுக்கு மட்டுமே சேமித்துவையுங்கள். பிறகு எஞ்சியதை தர்மம் செய்யுங்கள்'' என்று கூறினார்கள். அதன் பின் (அடுத்த ஆண்டு) ஆனபோது மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! மக்கள் தங்களது குர்பானிப் பிராணியி(ன் தோலி)லிருந்து தோல் பை தயாரித்துக் கொள்கின்றனர். அவற்றின் இறைச்சியிலிருந்து கொழுப்பை உருக்கி எடுத்துக்கொள்கின்றனர்'' என்று கூறினர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அதனால் என்ன?'' என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "குர்பானிப் பிராணியின் இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேலாக உண்ண வேண்டாம் எனத் தாங்கள் தடை செய்தீர்களே?'' என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள், "(நம்மை நாடி) வந்திருந்த (ஏழை) மக்களுக்காகவே (மூன்று நாட்களுக்கு மேலாகக் குர்பானி இறைச்சியை உண்ணவேண்டாமென) உங்களைத் தடுத்தேன். இனி, நீங்கள் குர்பானி இறைச்சியை உண்ணுங்கள். சேமித்து வையுங்கள். தான தர்மமும் செய்யுங்கள்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : முஸ்லிம் 3986
குர்பானி இறைச்சியை சேமித்து வைக்கக் கூடாது என்பதும், சேமித்து வைக்கலாம் என்பதும் இரு வேறு மாறுபட்ட சூழ்நிலைகளில் சொல்லப்பட்ட செய்திகளாகும். இரு சூழ்நிலைகளில் சொல்லப்பட்டதைப் பிரித்தறியாமல் ஒரே சூழ்நிலையில் சொல்லப்பட்டதைப் போன்று அணுகுவோமேயானால் அப்போது மங்கலான முரண்பாடு தோன்றுவதைத் தவிர்க்க இயலாது என்பதற்கு இது ஓர் எடுத்துக் காட்டாகும்.
இதற்கு மற்றொரு உதாரணமாகப் பின்வரும் செய்தியையும் குறிப்பிடலாம்.
நபிமார்களுக்கு மத்தியில் ஏற்றத்தாழ்வு கற்பிக்கலாமா?
நபிமார்களில் சிலரை விட சிலரை அல்லாஹ் சிறப்பித்திருப்பதாகவும், ஒரு நபிக்கு இல்லாத சிறப்புகள், உயர் அந்தஸ்துகள் சில நபிமார்களுக்கு தான் வழங்கியிருப்பதாகவும் அல்லாஹ் பின்வரும் வசனங்களில் குறிப்பிடுகிறான்.
இத்தூதர்களில், சிலரை விடச் சிலரைச் சிறப்பித்திருக்கிறோம். அவர்களில் சிலரிடம் அல்லாஹ் பேசியுள்ளான். அவர்களில் சிலருக்கு, பல தகுதிகளை அவன் உயர்த்தியிருக்கிறான். மர்யமுடைய மகன் ஈஸாவுக்குத் தெளிவான சான்றுகளை வழங்கினோம். ரூஹுல் குதுஸ் மூலம் அவரை வலுப்படுத்தினோம்.
அல்குர்ஆன் 2 253
வானங்களிலும், பூமியிலும் உள்ளவர்களை உமது இறைவன் நன்கு அறிவான். நபிமார்களில் சிலரை விட சிலரைச் சிறப்பித்திருக்கிறோம்.தாவூதுக்கு ஸபூர் (எனும் வேதத்தைக்) கொடுத்தோம்.
அல்குர்ஆன் 17 55
நபிமார்களுக்கு மத்தியில் ஏற்றத்தாழ்வு உண்டு என்கிற கருத்து இதில் வெளிப்படுகிறது.
பின்வரும் வசனம் இன்னும் தெளிவாக இக்கருத்தை வெளிப்படுத்துகிறது.
உமது இறைவனின் தீர்ப்புக்காகப் பொறுத்திருப்பீராக! மீனுடையவர்(யூனுஸ்) போல் நீர் ஆகிவிடாதீர்! அவர் துக்கம் நிறைந்தவராக (இறைவனை) அழைத்தார். அவரது இறைவனிடமிருந்து அவருக்கு அருள் கிடைத்திருக்காவிட்டால் அவர் இழிந்தவராக வெட்டவெளியில் எறியப்பட்டிருப்பார். ஆயினும் அவரை அவரது இறைவன் தேர்வு செய்தான். அவரை நல்லவராக்கினான்.
அல்குர்ஆன் 68 48,49,50.
இப்படி அனைத்து இறைத்தூதர்களும் சமமான அந்தஸ்தில் இல்லை என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
ஆனால் இவ்விவகாரம் தொடர்பாக பின்வரும் நபிமொழிகளை பார்க்கும்போது இதற்கு முரணான கருத்து தொனிப்பதை கவனிக்கலாம்.
"அல்லாஹ்வின் தூதர்களுக்கிடையில் ("ஒருவர் மற்றவரை விடச் சிறப்பானவர்' என்று) ஏற்றத் தாழ்வு பாராட்டாதீர்கள்.
அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி), நூல் : புகாரி 3414
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைத்தூதர்களில் சிலர் சிலரைவிட உயர்ந்தவர்கள் என்று சொல்லாதீர்கள்.
அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி), நூல் : புகாரி 6916
நபிமார்கள் அனைவரும் சமமான அந்தஸ்த்தில் இல்லை, அவர்களுக்கிடையில் ஏற்றத்தாழ்வு உண்டு என திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது.
அதற்கு மாற்றமாக நபிமார்களுக்கிடையில் ஏற்றத்தாழ்வு கற்பிக்கக் கூடாது என்று இந்நபிமொழிகள் சொல்கின்றன.
இதனடிப்படையில் பார்க்கும்போது அல்லாஹ் எந்த நபிமார்களுக்கு தனிச்சிறப்பை வழங்கியிருக்கிறானோ அவற்றை குறிப்பிடக் கூடாது என்பது போன்ற கருத்து இதனுள் அடங்கியுள்ளது.
ஸுலைமான் நபிக்கு வழங்கப்பட்ட ஆட்சி அதிகாரம், உலகில் எந்த நபிக்கும் வழங்கப்படவில்லை என 21:81, 21:82, 27:16-18, 27:40, 34:12, 38:35ஆகிய வசனங்கள் கூறுகின்றன.
அதுபோல் இப்ராஹீம் நபியின் குடும்பத்தாருக்கு வழங்கியது போன்ற பாக்கியங்களை வேறு எவருக்கும் அல்லாஹ் வழங்கவில்லை என்று2:124, 2:125, 4:125, 11:73, 16:120 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.
மறுமையில் மகாமு மஹ்மூத் எனும் புகழத்தக்க மதிப்பை அல்லாஹ் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வழங்குவான் என 17:79 வசனம் கூறுகிறது.
ஹவ்லுல் கவ்ஸர் எனும் நீர்த்தடாகம் நபியவர்கள் பொறுப்பில் விடப்படும் என 108:1 வசனம் கூறுகிறது.
மறுமையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே முதலில் பரிந்துரை செய்வார்கள் என்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன. (பார்க்க:புகாரி: 99, 335, 438, 3340)
இப்படி பல்வேறு இறைத்தூதர்களுக்கு தனிச்சிறப்புகளை இறைவன் வழங்கியிருக்கிறான். இவற்றைக் குறிப்பிட்டு சொல்வதும் கூட தவறு என்ற மறைமுகக் கருத்து மேற்கண்ட நபிமொழியில் உள்ளது.
ஏனெனில் ஒருவருக்கான சிறப்பை எடுத்துச் சொல்லும்போது அது இன்னொருவருக்கு இல்லை என்கிற கருத்தையும் சேர்த்தே சொல்கிறோம். இந்த வகையில் ஏற்றத்தாழ்வு கற்பிப்பதைப் போன்று தெரிகின்றது.
இறைத்தூதர்களுக்கிடையில் ஏற்றத்தாழ்வு கற்பிக்கக் கூடாது என்று கூறும்  நபிமொழிகளும், ஏற்றத்தாழ்வுகள் உண்டு என்று பல திருக்குர்ஆன் வசனங்களும் கருத்து தெரிவித்து ஒன்றுக் கொன்று முரண்பட்டு நிற்பதைப் போல வெளிப்பார்வைக்குத் தெரிகிறது.
இந்த முரண்பாடு தோன்றுவதற்கு நாம் மேலே குறிப்பிட்ட சூழலை கவனத்தில் கொள்ளாதது ஒரு காரணமாகும். ஏனெனில் நபிமார்களுக்கு மத்தியில் ஏற்றத்தாழ்வு கற்பிக்கக் கூடாது என்பது குறிப்பிட்ட ஓர் சூழலில் சொல்லப்பட்டது. அது எந்தச் சூழல் என்பது தெரியவரும் போது எது ஏற்றத்தாழ்வு கற்பிப்பதாகும்? எம்மாதிரியான ஏற்றத்தாழ்வு கூடாது என்பதை விளங்கி விடலாம்.
இதோ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்தச் சூழலில் இதை கூறினார்கள் என்பதைப் பாருங்கள்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
யூதர் ஒருவர் (சந்தையில்) தம் சரக்கை எடுத்துக் காட்டியபோது மிகக் குறைந்த விலை அவருக்குக் கொடுக்கப்பட்டது. அதை அவர் விரும்பவில்லை. உடனே அவர், "(நான் இந்த விலையை வாங்கிக் கொள்ள) மாட்டேன்; மனிதர்கள் அனைவரையும் விட (சிறந்தவராக)மூசாவைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவன் மீது சத்தியமாக!'' என்று கூறினார். இதை அன்சாரிகளில் ஒருவர் கேட்டுவிட்டார். உடனே எழுந்து அந்த யூதரின் முகத்தில் அறைந்து, "நபி (ஸல்) அவர்கள் நமக்கிடையே வாழ்ந்து கொண்டிருக்க, "மனிதர்கள் அனைவரையும் விட மூசாவைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவன் மீது சத்தியமாக!' என்றா நீ கூறுகிறாய்?'' என்று கேட்டார்.
உடனே அந்த யூதர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, "அபுல் காசிம் அவர்களே! (என் உயிர், உடைமை, மானத்தைப் பாதுகாப்பதாக) எனக்கு நீங்கள் பொறுப்பேற்று ஒப்பந்தம் செய்து தந்திருக்கிறீர்கள். என் முகத்தில் அறைந்தவரின் நிலை என்ன?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் அந்த முஸ்லிமை நோக்கி, "நீ ஏன் இவரது முகத்தில் அறைந்தாய்?'' என்று கேட்டார்கள். அவர் விஷயத்தை நபி (ஸல்) அவர்களிடம் சொன்னார். உடனே, நபி (ஸல்)அவர்களுடைய முகத்தில் கோபக்குறி தென்படுகின்ற அளவிற்கு அவர்கள் கோபமடைந்தார்கள். பிறகு, "அல்லாஹ்வின் நேசர்களுக்கிடையே("ஒருவர் மற்றவரை விடச் சிறப்பானவர்' என்று) ஏற்றத் தாழ்வு பாராட்டாதீர்கள்.
அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி), நூல் : புகாரி 3414
ஒரு இறைத்தூதரை மட்டம் தட்டி இன்னொரு இறைத்தூதரை உயர்த்தும் போக்கு இந்த சம்பவத்தில் வெளிப்படுகிறது.
யூதர் நபிகள் நாயகத்தை மட்டம் தட்டி மூஸாவை உயர்த்துகிறார். முஸ்லிமோ அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நபிகள் நாயகத்தை உயர்த்திப் பிடிக்கிறார்.
அதனால்தான் யூதருக்கும் முஸ்லிமுக்கும் வாக்குவாதம் உண்டாகிறது.
அதுமட்டுமின்றி அல்லாஹ், ரசூல் சொன்ன சிறப்புகளை எடுத்துப் பேசாமல் தங்கள் மனோ இச்சையை அடிப்படையாகக் கொண்டு தத்தமது இறைத்தூதர்களை இருவரும் சிறப்பித்து சொல்கிறார்கள் என்பதும் இதில் புரிகிறது.
இது நபிகளாரின் கவனத்திற்கு வரும்போதே இறைத்தூதர்களுக்கிடையில் ஏற்றத்தாழ்வு கற்பிக்காதீர் என்று நபிகள் நாயகம் சொல்கிறார்கள்.
நபிகள் நாயகம் சொன்ன செய்தியை இந்தச் சூழலோடு இணைத்து புரியும் போது ஒரு இறைத்தூதரை மட்டம் தட்டி, அவரை அற்பமாகக் கருதி இன்னொரு இறைத்தூதரை உயர்த்துவதே கண்டிக்கத்தக்கது என்பது தெளிவாகப் பளிச்சிடுகிறது.
மட்டம் தட்டும் நோக்கமின்றி, நாமாக எதையும் சொல்லாமல் இறைவன் யார் யாருக்கு என்னென்ன சிறப்புத் தகுதிகளை வழங்கினானோ அவற்றை அப்படியே குறிப்பிடுவது ஏற்றத்தாழ்வு கற்பிப்பதாக ஆகாது என்பதையும் இது விளக்கி விடுகிறது.
எனவே எந்த இரு ஆதாரங்கள் முரண்படுவதைப் போன்று தோன்றினாலும் அங்கே மாறுபட்ட சூழல் இருக்கின்றதா என்பதிலும் ஒரு கண் வைக்கவேண்டும். இதைக் கவனிக்கும் போது மேலோட்டமாகத் தோன்றிய முரண்பாட்டை எளிதாக அகற்றி விடலாம்.
நேரடிப் பொருளும் இலக்கியப் பொருளும் - ஐந்தாம் காரணம்
குர்ஆன், ஹதீஸ் என இரு சான்றுகளுக்கிடையில் போலி முரண்பாடு தோன்ற மற்றுமொரு காரணம் இலக்கியப் பொருள் அறியாததாகும்.
ஒரு சான்று நேரடிப் பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்கும்.
மற்றொரு சான்று இலக்கியப் பொருளில் கையாளப்பட்டிருக்கும்.
இதை பகுத்துணராமல் இரண்டையுமே நேரடிப் பொருளில் புரிந்து கொள்ளும் போது முரண்பாடு தலைதூக்கவே செய்யும்.
என்னது இலக்கியம் தெரியாவிட்டால் முரண்பாடு வருமா? இஸ்லாத்திற்கும் இலக்கியத்திற்கும் அப்படி என்ன சம்பந்தம்? என்று யோசிக்கிறீர்களா?
முதலில் நாம் கூறும் இலக்கியம் என்னவென்று புரிந்து கொள்ளுங்கள்.
கவிஞர்கள், புலவர்கள் இலக்கியம் என்கிற பேரில் யாருக்கும் புரியாத பாஷையில் பிதற்றிக் கொண்டிருப்பார்களே??
நாடக - சினிமா நடிகர்கள் தூய தமிழில் பத்து பக்க அளவில் வசனங்களை மூச்சு விடாமல் ஒப்புவித்துக் கொண்டிருப்பார்களே??
கடவுள் இல்லையென்று நான் சொல்லவில்லை, இருந்தால் நன்றாயிருக்கும் என்கிறேன் என்கிற பாணியில் கலைஞர் போன்றவர்கள் கூட அவ்வப்போது உளறுவார்களே?
சர்வ நிச்சயம் இந்த இலக்கியத்தைப் பற்றி நாம் பேசவில்லை. குர்ஆன், ஹதீசும் இதைச் சொல்லவில்லை.
நாம் கூறும் இலக்கியம் எது வென்றால்,
எந்த ஒரு வார்த்தையும் சில நேரங்களில் அதன் நேரடிப் பொருளிலும் மற்ற சில நேரங்களில் அதன் மறைமுகப் பொருளிலும் பயன்படுத்தப்படும். இந்த வழக்கு எல்லா மொழியிலும் உண்டு.
விலங்குகள் சரணாலயத்தில் சிங்கத்தைப் பார்த்தேன்
தலைவர் ஒரு சிங்கம்
இதில் விலங்குகள் சரணாலயத்தில் உள்ள சிங்கம் என்பது நேரடிப் பொருள். அது நான்கு கால் சிங்கத்தையே குறிக்கிறது.
தலைவர் ஒரு சிங்கம் என்பதில் உள்ள சிங்கம் மறைமுகப் பொருள். இது நான்கு கால் சிங்கத்தை குறிக்கவில்லை. மாறாக தலைவர் சிங்கத்தைபோன்று வீரமுள்ளவர் என்ற பொருளில் சொல்லப்பட்டுள்ளது.
இங்கே சிங்கம் என்பது மறைமுகப் பொருளில் வீரன் எனும் அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இப்படி ஒரு வார்த்தையை அதன் நேரடிப் பொருளில் அல்லாமல் மறைமுகப் பொருளில் பயன்படுத்தப்படுவதே இலக்கியப் பொருள் என்கிறோம்.
இவை பெரும்பாலும் வர்ணனைகளின் போதே அதிகளவில் இடம்பெறும்.
பெண்ணை நிலா மற்றும் மான் போன்றவைகளுக்கு ஒப்பிடுவதும் இந்த வகையைச் சார்ந்ததே.
அதிகம் பேசுபவனை வாய் நீளம் என்றும் எதற்கெடுத்தாலும் அடிப்பவனை கை நீளம் என்று வர்ணிப்பதும் இலக்கியப் பொருள் கொள்ளும்வகையில் உள்ளதே.
இப்படி குர்ஆனிலும் ஹதீஸிலும் கூட நிறைய உதாரணங்கள் இலக்கியப் பொருள்களில் கையாளப்பட்டுள்ளது.
இலக்கியப் பொருள் பற்றி இந்த அளவு புரிந்து கொள்வது போதும்.
இனி விஷயத்திற்கு வருவோம்.
ஒரு சான்று நேரடிப் பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்கும்.
மற்றொரு சான்று இலக்கியப் பொருளில் கையாளப்பட்டிருக்கும்.
இலக்கியப் பொருளில் பயன்படுத்தப்பட்டிருப்பதையும் நேரடிப் பொருளில் புரியும் போது முரண்பாடு தோன்றுகிறது.
உதாரணத்திற்கு பின்வரும் குர்ஆன், ஹதீஸ் சான்றுகளை கவனியுங்கள்.
மறுமை நாளின் திடுக்கம் எப்போது நிகழும்?
 மனிதர்களே! உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அந்த நேரத்தின் திடுக்கம் கடுமையான விஷயமாகும். நீங்கள் அதைக் காணும் நாளில் பாலூட்டும் ஒவ்வொருத்தியும், தான் பாலூட்டியதை (குழந்தையை) மறந்து விடுவாள். ஒவ்வொரு கர்ப்பிணியும், தன் கருவில் சுமந்ததை ஈன்று விடுவாள். போதை வயப்பட்டோராக மனிதர்களைக் காண்பீர்! அவர்கள் போதை வயப்பட்டோர் அல்லர். மாறாக அல்லாஹ்வின் வேதனை கடுமையானது.
அல்குர்ஆன் 22 1,2
மறுமை நாளின் திடுக்கத்தில் பாலூட்டும் தாய் தன் குழந்தையை மறந்து விடுவாள், கர்ப்பிணிப் பெண் கருவை ஈன்று விடுவாள் என்று பல நிகழ்வுகள் இவ்வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது.
உலகம் அழிந்து மறுமை ஏற்படும் நேரத்தில் இது நிகழும் என்று இவ்வசனத்தை வைத்து புரிந்து கொள்கிறோம். இதில் எந்தப் பிரச்சனையும் இல்லை.
ஆனால் இது தொடர்பான ஹதீஸைப் படித்தால் இதற்கு முரணான நேரம் - அதாவது மனிதர்கள் அனைவரும் கப்ரிலிருந்து எழுப்பப்பட்டு,நரகிற்கு செல்வதற்கு முன் - இம்மாதிரியான திடுக்கிடும் நிகழ்வுகள் ஏற்படும் என்பது போன்று சொல்லப்பட்டுள்ளது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(மறுமை நாளில்) அல்லாஹ் (ஆதி மனிதரை நோக்கி) "ஆதமே!' என்று அழைப்பான். அதற்கு அவர்கள் "(இறைவா!) இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன். (கட்டளையிடு.) நலம் அனைத்தும் உன் கரங்களில்தான்'' என்று கூறுவார்கள்.
அப்போது அல்லாஹ் "(உங்கள் சந்ததிகளில்) நரகத்திற்குச் செல்லவிருப்பவர்களை (மற்றவர்களிலிருந்து) தனியாகப் பிரித்திடுங்கள்''என்று கூறுவான். ஆதம் (அலை) அவர்கள் "எத்தனை நரகவாசிகளை?'' என்று கேட்பார்கள். அதற்கு அவன் "ஓவ்வோர் ஆயிரம் பேரிலிருந்தும் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்பது பேரை (தனியாகப் பிரித்திடுங்கள்)'' என்று பதிலளிப்பான். (அப்போதுள்ள பயங்கர சூழ்நிலையின் காரணத்தால்) பாலகன்கூட நரைத்து (மூப்படைந்து) விடுகின்ற, கர்ப்பம் கொண்ட ஒவ்வொரு பெண்ணும் கர்ப்பத்தை (பீதியின்காரணத்தால் அரைகுறையாக)ப் பிரசவித்து விடுகின்ற நேரம் இதுதான். மக்களை (அச்சத்தால்) போதையுற்றவர்களாக நீங்கள் காண்பீர்கள். ஆனால், அவர்கள் (உண்மையிலேயே மதுவால்) போதையுற்றிருக்க மாட்டார்கள். மாறாக, அல்லாஹ்வின் வேதனை கடுமையானதாகும்.
அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல் : புகாரி 6530
நரகிற்குச் செல்லவிருப்பவர்களைத் தனியாகப் பிரித்திடுங்கள் என்று ஆதம் நபிக்கு அல்லாஹ் சொல்வான் என்று இதில் சொல்லப்படுகிறது.
அப்படியெனில் உலகில் வாழ்ந்து மரணித்த எல்லா மக்களும் எழுப்பப்பட்டு தீர்ப்பு அளிக்கப்படும் போதே இது நடைபெறும் என்று விளங்குகிறது. ஏனெனில் அப்போதுதான் ஆதம் நபியிலிருந்து நரகில் செல்லவிருக்கிற அனைத்து மக்களும் ஒன்று திரட்டப்பட்டிருப்பார்கள்.
அந்த நேரத்தின் போது தான் கர்ப்பிணிப் பெண் பிரசவித்து விடுவாள் என்றும் இந்த ஹதீஸில் சொல்லப்படுகிறது.
கப்ரிலிருந்து எழுப்பப்பட்ட பிறகுள்ள நிலையில் எப்படி ஒரு பெண் கர்ப்பிணியாக இருப்பாள், பாலூட்டும் நிலையில் கையில் குழந்தையுடன் எப்படி இருப்பாள்? கர்ப்பமாக இருந்து குழந்தையைப் பெற்றெடுப்பது, பாலூட்டுவது போன்ற நிலைகள் கப்ரிலிருந்து எழுப்பப்பட்ட பிறகு இல்லை.
நிலை இவ்வாறிருக்க, மேற்கண்ட செய்தி மக்களனைவரும் கப்ரிலிருந்து எழுப்பப்பட்ட பிறகு கர்ப்பிணி கருவை பெற்றெடுப்பதும், பாலூட்டும் தாய் தன் பிள்ளையை மறந்து விடுவதுமான நிகழ்வுகள் நிகழும் என்று தெரிவிக்கின்றது.
இத்தகைய முரணான கருத்து தோன்றுவதற்கு அச்சாரமாக விளங்கியது எது?
இலக்கியப் பொருளில் சொல்லப்பட்டதை நேரடிப் பொருளில் புரிந்து கொண்டதுதான்.
அந்தக் குர்ஆன் வசனம் மக்கள் கப்ரிலிருந்து எழுப்பப்பட்ட பிறகு நடக்கவிருக்கிற நிகழ்வுகளைத் தான் குறிப்பிடுகிறது. அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஏனெனில் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் அதற்கு இவ்வாறு விளக்கம் அளித்துள்ள ஆதாரப்பூர்வமான செய்தியை மேலே நாம் கண்டோம். (புகாரி 6530)
ஆனால் கப்ரிலிருந்து உலக மக்கள் அனைவரும் எழுப்பப்பட்ட பிறகு கர்ப்பிணி பிரசவித்து விடுவாள், பாலூட்டுபவள் மறந்து விடுவாள் என்று நபி கூறுவதை நேரடிப் பொருளில் புரிந்து கொள்ளாமல் அப்போது ஏற்படும் திடுக்கம் இந்த அளவு பயங்கரமானதாக இருக்கும் என்று மறைமுகப் பொருளில் புரிந்து கொள்ள வேண்டும்.
இதை அவ்வசனத்தின் இறுதியில் உள்ள வாசகம் தெளிவாக விளக்குகின்றது.
போதை வயப்பட்டோராக மனிதர்களைக் காண்பீர்! அவர்கள் போதை வயப்பட்டோர் அல்லர். மாறாக அல்லாஹ்வின் வேதனைகடுமையானது.
அல்குர்ஆன் 22 1,2
போதை வயப்பட்டவராக மக்கள் இருப்பார்கள் என்றும் ஆனால் அவர்கள் உண்மையான போதையில் இருக்கமாட்டார்கள் என்றும் வசனத்தின் இறுதி தெரிவிக்கின்றது.
போதை வயப்பட்டோர் என்பது நேரடிப் பொருள் அல்ல, இலக்கிய பொருள் தான் என்பது இதில் உறுதியாகிறது.
அது போலவே வேதனையின் கடுமை எந்த அளவு உச்சத்தைத் தொடும் என்பதைவிளக்கும் போது,
கர்ப்பிணி இருந்தால் அவள் குழந்தையைப் பெற்றெடுத்து விடுவாள்.
பாலூட்டும் தாயாக இருந்தால் அவள் கூட தன் குழந்தையை மறந்து விடுவாள்.
அந்த அளவு அல்லாஹ்வின் வேதனை மிகுதியானதாய் இருக்கும்.
இவ்வாறு இலக்கியப் பொருளில் சொல்லப்பட்டதாக விளங்கிக் கொள்ளலாம்.
நாம் கூட இவ்வாறு பல தருணங்களில் பேசவே செய்கிறோம்.
இவன் படுத்துன பாட்டில் உயிரே போய் விட்டது என்போம்.
என்னப்பா உயிருடன் தான் இருக்கிறாய் ஆனால் உயிரே போய் விட்டது என்கிறாயே என்று யாரும் கேட்டதில்லை, கேட்கவும் மாட்டார்கள்.
உயிர் போகும் அளவு இவன் என்னை துன்புறுத்தி விட்டான் என்பது தான் இந்த வார்த்தையின் பொருள்.
இதே பாணியில் தான் மேற்கண்ட  வசனமும் அதற்கு விளக்கமான ஹதீசும் அமைந்துள்ளது.
இதற்கு இலக்கியப் பொருள் கொள்ளா விட்டால் கப்ரிலிருந்து எழும் போது எப்படி ஒரு பெண் கர்ப்பமாக இருப்பாள்?
அந்த நேரத்தில் எப்படி பாலூட்டுபவளாக அதுவும் கையில் குழந்தையை வைத்துக் கொண்டு இருப்பாள்? என்பன போன்ற கேள்விகள் எழும்.
இலக்கியப் பொருளில் பயன்படுத்தப்பட்டதை சரியாக இனம் கண்டு கொண்டால் வீண் கேள்விகள் எழுவதையும் போலி முரண்பாடுகள் உருவாகுவதையும் முற்றாகத் தவிர்த்து விடலாம்.
ஆய்வாளரின் தவறான புரிதல் - ஆறாம் காரணம்
இறுதியாக இன்னும் ஒரு காரணத்தை அலசி விடுவோம்.
இரு சான்றுகளுக்கிடையில் போலி முரண்பாடு உருவெடுக்க சான்றுகளை மையப்படுத்திய பல காரணங்களை அடுக்கினோம். பல நேரங்களில் சான்றுகள் சரியாக இருப்பினும் ஆய்வாளரின் தவறான புரிதல் கூட முரண்பாடு தோன்றக் காரணமாக அமைந்து விடும்.
குர்ஆன், ஹதீஸை ஆய்வு செய்யும் ஆய்வாளர், தான் ஆய்வு செய்யும் விவகாரம் தொடர்பாக எல்லா ஆதாரங்களையும் ஒருங்கே, திரட்டியிருக்க மாட்டார். சில முக்கிய தரவுகளை திரட்டத் தவறியிருப்பார்.
தான் திரட்டிய முழுமை பெறாத தகவல்களை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு செய்யும் பட்சத்தில் பிற சான்றுகளுடன் முரண்பாடான கருத்து தோன்ற அரிதான வாய்ப்புண்டு.
ஒரு சில நேரத்தில் ஆய்வாளர் அனைத்துத் தகவல்களையும் திரட்டியிருப்பார். எனினும் மனிதன் என்ற அடிப்படையில் சில சான்றுகளை தவறாகப் புரிந்து கொள்வதாலும், குர்ஆனுக்கு முரண் போன்ற தோற்றம் ஏற்படும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே இது போன்ற தவறான புரிதலின் காரணத்தினால் குர்ஆனுக்கு முரண்பாடாக கருதிய சம்பவங்கள் உண்டு.
அப்போது நபியவர்கள் அதை குர்ஆனுக்கு முரண் அல்ல என்பதை தக்கவாறு விளக்கி இருக்கிறார்கள்.
அதற்கான ஆதாரங்கள் உங்கள் பார்வைக்கு:-
 (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம், "அல்லாஹ் நாடினால் அந்த மரத்தின் கீழ் வாக்குப்பிரமாணம் அளித்தவர்களில் யாரும் நரகத்திற்குள் நுழைய மாட்டார்கள்'' என்று கூறினார்கள். அதற்கு ஹஃப்ஸா (ரலி) அவர்கள்"அல்லாஹ்வின் தூதரே! அப்படியல்ல'' என்று கூறினார்கள்.
உடனே நபி (ஸல்) அவர்கள், ஹஃப்ஸா (ரலி) அவர்களைக் கண்டித்தார்கள். அப்போது ஹஃப்ஸா (ரலி) அவர்கள், "உங்களில் யாரும் அ(ந்தநரகத்)தைக் கடக்காமல் இருக்க முடியாது'' (19:71) எனும் வசனத்தை ஓதிக்காட்டினார்கள். நபி (ஸல்) அவர்கள், "பின்னர் (நம்மை) அஞ்சி நடந்தோரை நாம் காப்பாற்றுவோம். அநீதி இழைத்தோரை மண்டியிட்டோராக அதிலேயே விட்டுவிடுவோம்'' (19:72) என்றும் அல்லாஹ் கூறியுள்ளான் என்றார்கள்.
அறிவிப்பவர் : உம்மு முபஷ்ஷிர் (ரலி), நூல் : முஸ்லிம் 4909
பைஅத்துர் ரிள்வானில் பங்கேற்ற நபித்தோழர்கள் இறைவன் நாடினால் நரகிற்குச் செல்ல மாட்டார்கள் என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சொல்லும் போது ஹஃப்ஸா (ரலி) அவர்கள் இது குர்ஆனுக்கு முரண் எனக் குறுக்கிடுகிறார்கள்.
"உங்களில் யாரும் அ(ந்த நரகத்)தைக் கடக்காமல் இருக்க முடியாது'' (19:71) எனும் வசனத்தை ஓதிக் காட்டி இந்த வசனத்திற்கு முரணாக தங்கள் கருத்து உள்ளது என்கிறார்கள்.
உடனே நபியவர்கள் ஹஃப்ஸா (ரலி) அவர்களின் புரிதல் தவறானது என்பதை அதற்கு அடுத்த குர்ஆன் வசனத்தைக் கொண்டு விளக்கிவிடுகிறார்கள்.
"பின்னர் (நம்மை) அஞ்சி நடந்தோரை நாம் காப்பாற்றுவோம். அநீதி இழைத்தோரை மண்டியிட்டோராக அதிலேயே விட்டுவிடுவோம்'' (19:72)என்று அல்லாஹ் சொல்லியிருக்கிறான்.
பைஅத்துர் ரிள்வானில் பங்கேற்றவர்கள் அல்லாஹ்வை அஞ்சி நடந்தவர்களின் பட்டியலில் இணைந்து இறைவனால் காப்பாற்றப்படலாம் எனவே நான் சொன்னது முரணான கருத்தல்ல என்பதை தெளிவாக்குகிறார்கள்.
இங்கே ஹஃப்ஸா (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் சொன்னதை குர்ஆனுக்கு முரண் என்று கருதியது அவர்களின் தவறான புரிதலின் காரணத்தினாலேயே என்பதை அறியலாம்.
இதே போன்ற நிகழ்வு ஆயிஷா (ரலி) அவர்களுக்கும் நிகழ்ந்துள்ளது. இதற்குப் பின்வரும் ஹதீஸ் சான்றாகும்.
நபி (ஸல்) அவர்கள் "எவர் (மறுமை நாளில்) துருவித்துருவி விசாரிக்கப்படுவாரோ அவர் வேதனை செய்யப்படுவார்'' என்று கூறினார்கள்.நான் "அல்லாஹ் (தன் வேதத்தில்) "வலக் கரத்தில் தமது வினைப் பதிவுச் சீட்டு வழங்கப்பட்டவரிடம் எளிய முறையில் கணக்கு வாங்கப்படும்' (84:8) என்றல்லவா கூறுகின்றான்?'' எனக் கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் "இது (கேள்வி கணக்கு தொடர்பானது அன்று; மாறாக, மனிதர்களின் நன்மை, தீமைப் பட்டியலை அவர்களுக்கு முன்னால்) சமர்ப்பிக்கப்படுதலாகும்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : புகாரி 6536
மறுமையில் துருவித் துருவி விசாரிக்கப்படுபவர் வேதனை பெறுவார் என்று நபிகளார் கூறியதும் இக்கருத்தை குர்ஆனுக்கு முரணாக அன்னை அவர்கள் கருதுகிறார்கள். காரணம் வலது கையில் பதிவேடு வழங்கப்பட்டவரும் விசாரிக்கப்படவே செய்வார். ஆனால் அவர் வேதனை பெறமாட்டார் என்று 84 8 வசனம் குறிப்பிடுகின்றது.
இதற்கு முரணாக நபியவர்களின் கருத்தை ஆயிஷா (ரலி) கருதுகிறார்.
உடனே நபியவர்கள் அது விசாரணை அல்ல, பதிவேடு வழங்கப்படும் நிகழ்வு தான். தாம் சொல்வது விசாரணையின் போது யார் துருவி துருவி கேட்கப்படுவானோ அவனைப் பற்றியது என்று விளக்கம் அளிக்கிறார்கள்.
இப்படி சில சான்றுகளைச் சரியாகக் கவனிக்காமல், அல்லது முழுமையான தகவல்களைத் திரட்டாமல் தவறாகப் புரிந்து கொள்வதும் குர்ஆனுக்கு முரணாக உள்ளது போன்ற போலித் தோற்றத்தை ஏற்படுத்தி விடும். இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
அதே நேரம் குர்ஆனுக்கு முரண் என்ற வாதத்திற்குப் பின்னால் தவறான புரிதல் மட்டும்தான் உள்ளது என்கிற வாதம் ஏற்புடையதல்ல.
ஒரு சில சான்றுகள் தெளிவாக, எந்த விளக்கமும் அளிக்க முடியாத படி குர்ஆனுக்கு முரண்படவே செய்கிறது.
அவைகளை நாம் இதுவரை குறிப்பிட்ட வழிமுறைகள் மற்றும் விரிவஞ்சி இத்தொடரில் நாம் குறிப்பிடாத இன்னும் பல வழிமுறைகளைக்கையாண்டும் எவ்வித இணக்கமான கருத்தும் காண முடிவதில்லை. அப்படியான சூழல் ஒரு ஆய்வாளருக்கு நேரும் போது குறிப்பிட்ட அந்தசெய்தியை நபிகள் நாயகம் கூறியிருக்க மாட்டார்கள் என்று முடிவெடுப்பதே சரியான வழிமுறையாகும்.
நமக்கு முன் வாழ்ந்த ஆய்வாளர்கள், நல்லறிஞர் பெருமக்கள் இந்த வழிமுறையையே கடைப்பிடித்துள்ளார்கள்.
இது பற்றி விரிவாக அறிந்து கொள்ள பின்வரும் லிங்கில் பார்க்கவும்.