மதுரை மக்கள் அவரை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கும் வரை, அவர் யாரென்றே அறியப்படாத வி.எம்.எஸ். முஸ்தபா, தனது அரசியல் பயணத்தைத் த.மு.மு.க. விலிருந்து தொடங்கியதாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு சட்டசபையில் பேசத் தொடங்கினார்.
தமுமுக திருவல்லிக்கேணி கிளையில் அவர் பயணித்த ஆரம்ப காலத்தில் அவர் சமுதாய உணர்வு உள்ளவராகத் தான் இருந்திருப்பார் என்று அவர் மீது நாம் நல்லெண்ணம் கொள்வோம்.
அதன் பிறகு அவர் தேர்ந்தெடுத்துச் சென்ற பிற அரசியல் கட்சியில் சேர்ந்து கொண்டு சமுதாயத்திற்காக என்ன செய்தார் என்ற கேள்வியைப் பலரும் பொது வெளியில் எழுப்புவதையும் பார்க்க முடிகிறது.
திமுகவுக்கு எதிராக நூற்றுக்கணக்கான போராட்டங்களை, கண்டன கூட்டங்களை நாம் நடத்தி இருக்கிறோம்! எத்தனையோ கைதுகளை நாம் சந்தித்து இருக்கிறோம். அந்த சமயத்தில் இவரது பங்களிப்பு என்ன என்ற கேள்வியும் பரவலாக உள்ளது.
இவருக்கு எம்.எல்.ஏ. என்ற வானாளாவிய அதிகாரப் பதவியை வாரி வழங்கிய வள்ளல், இவரது ஆதர்ஷ நாயகன் வெற்றி வேந்தர் விஜய், திமுக மற்றும் அதிமுக அரசால் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்ட போது, என்ன எதிர்வினையாற்றினார் என்பதையாவது இந்த சமுதாயத்திற்கு தெளிவுபடுத்த வேண்டும்.
நாம் அறிந்தவரை தனது நடிப்புத் தொழில் நலனுக்காக நவ துவாரங்களையும் பொத்திக் கொண்டு அந்த இரண்டு கட்சிகளின் ஆட்சியிலும் சரணடைந்து தான் கிடந்தார்.
சட்டசபையில் தீவிரவாதியாக சித்தரிப்பதைக் காட்டிலும் வெகுஜன மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வலிமையான ஊடகம் சினிமா என்பது உலகறிந்த உண்மை.
அந்த சினிமா மூலம் சாமானிய முஸ்லிம்களை சிலிப்பர் செல்லாக, தமிழ் நாட்டில் குண்டுவைக்கும் தீவிரவாதிகளாக சித்தரித்த நடிகர் விஜய், இன்றளவும் முஸ்லிம் சமுதாயத்திடம் ஒரு மன்னிப்பு கூட கேட்கவில்லையே! விஜய்யிடம் மன்னிப்புக்கான கோரிக்கையாவது இவர் வைத்தாரா?
‘பீஸ்ட்’ படத்தின் கதைக்களம் முஸ்லிம்களுக்கு எதிரானது என்பதால் விஜயை விமர்சித்த இவர், தவெக வில் ஐக்கியமானது எதன் அடிப்படையில்?
முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்த விஜய் தனது செயலுக்கு மனம் வருந்தி முஸ்லிம் சமுதாயத்திடம் மன்னிப்பு கேட்டுவிட்டார் என்பதாலா?
அல்லது அதற்குப் பரிகாரமாக, முஸ்லிம்கள் மீது விழுந்துள்ள தீவிரவாத பார்வையைத் தகர்க்கும் வகையில், முஸ்லிம்களின் வயிற்றில் பால் வார்க்கும் வண்ணம், நமது சமுதாய நலன் சார்ந்த பிரச்சனைகளை கதைக் களமாக முன்வைத்து ஒரு சிறந்த படத்தைத் தந்து விட்டார் என்பதாலா?
தேர்தலில் போட்டியிடப் போகிறோமே! முஸ்லிம் வாக்குகளைப் பெற வேண்டுமே! என்ற அச்சமோ தயக்கமோ கொஞ்சம் கூட இல்லாமல், ஆணவமும் அலட்சியமும் தலைக்கு ஏறி, இறுதியாக வெளிவந்த ஜனநாயகன் படத்திலும் கூட முஸ்லிம்களை தீவிரவாதியாக சித்தரித்தாரே! அதற்காகவாவது விஜய்யிடம் விளக்கம் கேட்டிருப்பாரா?
முஸ்லிம்களின் உணர்வுகளை குறி பார்த்து சீறிப் பாய்ந்த விஜய்யின் ‘துப்பாக்கி’க்கு எதிராக எல்லா முஸ்லிம் அமைப்புகளும் ஒன்று திரண்டதே! அப்போது இந்த முஸ்தபாவும் விஜய்யை எதிர்த்திருப்பாரே? அந்த எதிர்ப்பு எப்படி ஆதரவாக மாறியது? சமுதாய நலனை விட அரசியல் சுய லாப கணக்குத்தானே?
“உனது படங்களில் எனது சமுதாயத்தை நீ எப்படி வேண்டுமானாலும் கேவலப்படுத்திக்கொள்! தீவிரவாதியாகவோ, தேச துரோகியாகவோ சித்தரித்துக்கொள்! ஆனால் எனக்கு யாருமே தர முடியாத எம்.எல்.ஏ. என்னும் சொர்க்கப் பதவியை (?) நீ வழங்கி இருக்கிறாய் அல்லவா! அதற்கு ஈடு இணை உண்டா? அதற்காகவே, தீயசக்தி என்று நீ வர்ணிக்கும் தி.மு.க.வை மட்டும் குறிவைத்து, 28 ஆண்டுகளுக்கு முன் எங்களை தீவிரவாதிகள் என பேசியதை இப்போது மடைமாற்றி முஸ்லிம்களை நம் பக்கம் திருப்பிவிடுகிறேன்.”
என்ற ரீதியிலான அவரது சட்டசபை பேச்சும் நடவடிக்கையும் நயவஞ்சகத்தின் அடையாளம் இல்லையா?.
(இன்ஷாஅல்லாஹ் அடுத்த தொடரில்…”முஸ்லிம் சிறைவாசிகளுக்கு 'தீவிரவாதி' பட்டம் சூட்டியவர்கள் யார்?”)
https://www.facebook.com/permalink.php?story_fbid=pfbid02FuTkHdoByYGH1VL54eQ9oHeuQzUVMjYVoj8QeZrh2Sh8Ke7uXmE1vBsgPU4wwtvHl&id=100009858432834
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக