இஸ்லாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இஸ்லாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 19 மார்ச், 2023

ரமலான் மாதத்தை ஆரம்பிக்கவும், முடிக்கவும் மிக அடிப்படையானதும், அவசியமானதும் எது?

  அல்லாஹ்வுடைய மார்க்கமான இஸ்லாம் முக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய ஓர் அழகிய வாழ்வியல் வழிகாட்டியாக திகழ்ந்துக் கொண்டிருக்கிறது. வாழ்வின் ஒவ்வொரு விஷயங்களையும் எப்படி அணுகவேண்டும் என்று நமக்கு கற்றுக் கொடுத்துள்ள இஸ்லாம், தினசரி நேரக் கணக்குகளை சூரியனை அடிப்படையாக வைத்தும், மாதக் கணக்குகளை சந்திரனை அடிப்படையாக வைத்தும் தீர்மானிப்பதை நமக்கு சொல்லித் தருகிறது. 

இதில் சூரியக் கணக்கு என்பது ஒரு நாளின் ஐவேளைத் தொழுகை நேரங்களை வரையறுப்பதற்கு நேரங்காட்டியாகவும், சந்திரக் கணக்கு என்பது நோன்பின் நாட்கள், ஹஜ்ஜுடைய நாட்கள், இத்தாவின் நாட்கள் மற்றும் சில இபாதத்துகளின் நாட்களைக் கணக்கிட்டுக் கொள்வதற்கு காலங்காட்டியாகவும் பயன்படுத்த இஸ்லாம் கற்றுக் கொடுத்துள்ளது.

அதனடிப்படையில்.. ரமலானை ஆரம்பிப்பதற்கும்,  ரமலான் மாதம் முடிந்து ஷவ்வாலின் முதல் நாள் ஆரம்பித்துவிட்டது என்பதை (அதாவது நோன்புப் பெருநாளை) அறிந்துக் கொள்வதற்கும் பிறைப் பார்ப்பது மிக அவசியம். ஏனெனில், 'ஒவ்வொரு பகுதியிலும் பிறைக் காணப்பட வேண்டும்; பிறை தென்பட்டால் அடுத்த மாதம் ஆரம்பமாகிவிட்டது; தென்படாவிட்டால் அம்மாதத்தின் நாட்களை முப்பது என்று நிறைவு செய்துக்கொள்ள வேண்டும்' என்பது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நமக்கு கட்டளையிட்டுள்ள மிகத் தெளிவான சட்டமாகும்.

ஞாயிறு, 10 ஜூன், 2018

வெளி நாடுகளில் ரமலான் நோன்பை ஆரம்பித்துவிட்டு இடையில் தாயகம் வந்தால்..

வெளி நாடுகளில் வசிப்பவர்கள் அங்கே பிறைப் பார்த்த அடிப்படையில் ரமலான் நோன்பை ஆரம்பித்துவிட்டு, ரமலான் முடிவதற்குள் தாயகம் திரும்பி வந்தால் நோன்பின் எண்ணிக்கை 31 ஆகிவிடுகிறது. இவர்கள் எவ்வாறு நோன்பு வைக்க வேண்டும்?

ஒருநாள் முன்னதாக பிறையைக் கண்டதால் ரமலான் நோன்பை ஆரம்பித்தவர்கள் ஒரு நோன்பு கூடுதலாக நோற்றுவிட்டு தாயகம் வரும்போது, அங்குள்ள நாள் கணக்கின்படி நோன்பை தொடர வேண்டும். அதாவது, தாயகத்துக்கு வந்துவிட்டால் ஏற்கனவே இருந்த பகுதியையோ, வெளி நாட்டையோ பின்பற்ற இயலாது.

ஏனெனில் குறிப்பிடப்பட்ட நேரம் மற்றும் நாட்களைக் கணக்கிட்டு நிறைவேற்றப்படும் அமல்களான தொழுகை, நோன்பு போன்ற காரியங்களை நாம் எந்த ஊரில் இருக்கிறோமோ அந்த ஊரின் நேரக் கணக்கின்படியும், பிறைக் கண்ட நாளின் அடிப்படையிலும்தான் நாம் அமைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு நாட்டில் இருப்பவர் வேறொரு நாட்டின் நேரக் கணக்கைப் பின்பற்ற முடியாது. அதுபோன்று ஒரே நாட்டுக்குள் உள்ள தொலைதூர ஊர்களுக்கு மத்தியிலும் அதிக வித்தியாசமான நேரக் கணக்கு அமைந்திருக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அப்படியானால், தங்கள் பகுதியில் முந்திய நாள் பிறைக் கண்டு ரமலானின் முதல் நோன்பை ஆரம்பித்தவர்கள், மறுநாள் ரமலானின் முதல் பிறையைக் கண்டு நோன்பை ஆரம்பித்த வேறொரு பகுதிக்கோ அல்லது நாட்டுக்கோ வந்து அங்கே தங்களின் நோன்பைத் தொடர்ந்த பிறகு, ரமலானின் இறுதியில் 30 நோன்பையும் அவர்கள் நிறைவேற்றிவிட்ட நிலையில் அந்தப் பகுதியில் பிறைக் காணாவிட்டால் அவர்கள் என்ன செய்ய வேண்டும்?


ஞாயிறு, 20 மே, 2018

"ஜஸாக்கல்லாஹு ஹைரா" என்று கூறுபவருக்கு...

"ஜஸாக்கல்லாஹு ஹைரா" என்று கூறுபவருக்கு எவ்வாறு மறுமொழி கூறவேண்டும்?

ஒருவர் நமக்கு ஏதேனும் ஒரு உதவி செய்தால் அவருக்கு நன்றி செலுத்தும் முகமாக ஒரு சிறிய பிரார்த்தனையை இஸ்லாம் நமக்கு கற்றுத் தருகிறது. ஒருவரை நாம் சந்திக்கும்போது முகமன் கூறுவதற்காக சொல்லக்கூடிய ஸலாம் என்பது எவ்வாறு ஒரு பிரார்த்தனையாக அமைகிறதோ அதேபோல, நமக்கு உதவி செய்தவருக்கு நாம் கூறும் வாசகமும் அவருக்கு ஒரு துஆவாக அமைந்துவிடுகிறது. அந்த பிரார்த்தனையின் மூலம் நாம் அவரின் உதவிக்கு நன்றி செலுத்தியவராகிவிடுகிறோம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

حدثنا الحسين بن الحسن المروزي بمكة و إبراهيم بن سعد الجوهري قالا حدثنا الاحوص بن جواب عن سعير بن الخمس عن سليمان التيمي عن أبي عثمان النهدي عن أسمة بن زيد قال : قال رسول الله صلى الله عليه و سلم من صنع إليه معروف فقال لفاعله جزاك الله خيرا فقد أبلغ في الثناء

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவருக்கு (மற்றொருவரால்) நல்லுபகாரம் செய்யப்பட்டால் அவர் தனக்கு (நல்லுபகாரம்) செய்தவருக்கு "ஜஸாக்கல்லாஹு ஹைரா" (அல்லாஹ் உமக்கு நற்கூலி வழங்குவானாக!) என்று கூறினால், அவர் (உதவி செய்தவருக்கு) மிகச்சிறந்த நன்றியைச் செலுத்திவிட்டார்.

அறிவிப்பவர்: உஸாமா இப்னு ஸைத் (ரலி)
நூல்: திர்மிதீ (2035)

 

உதவி செய்தவர்களுக்கு இவ்வாறு "ஜஸாக்கல்லாஹு ஹைரா" (அல்லாஹ் உமக்கு நற்கூலி வழங்குவானாக!) என்று நாம் கூறியவுடன் அதற்கு மறுமொழியாக,

- "பாரக்கல்லாஹு ஃபீக்கும்" (بارك الله فيكم)
- "வஇய்யாக" (وإياك)
- "வஜஸாக்கும்" (وجزاكم)
- "ஜமீஆ" (جميعا)
-  "வஜஸாக்குமுல்லாஹு பில்மிஸ்லி" (وجزاكم الله بالمثل)
- "அஹ்ஸனல்லாஹு இலைக்" (أحسن الله إليك)
- "ஜஸாக்கும் இய்யாஹு" (جزاكم اياه)

என்று பலவிதமான பதில்களைக் கூறும் வழக்கம் மக்களுக்கு மத்தியில் இன்று நடைமுறையில் காணப்படுகிறது. ஆனால் "ஜஸாக்கல்லாஹு ஹைரா" என்று கூறியவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் எவ்வாறு பதில் கூறியுள்ளார்களோ அதைத் தவிர வேறு வார்த்தைகளைப் பயன்படுத்தி நாம் பதில் கூறுவது நிச்சயமான முறையில் "பித்அத்" ஆகும்.

"ஜஸாக்கல்லாஹு ஹைரா" என்று கூறியவருக்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பதற்கு சில நபிமொழிகள் ஆதாரங்களாக எடுத்து வைக்கப்படுகின்றன. அவற்றில் பல அறிவிப்புகள் பலஹீனமானவையாக உள்ளன. ஆனாலும் கீழுள்ள ஒரு அறிவிப்பு மட்டும் ஸஹீஹானதாக உள்ளது.

சனி, 2 செப்டம்பர், 2017

குர்பானி தோலை யாருக்கு கொடுக்கவேண்டும்?

கேள்வி: குர்பானி தோலை யாருக்கு கொடுக்கவேண்டும்?

பதில்: இஸ்லாத்தின் பெருநாட்களான நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாட்களும் இரண்டு விதமான தர்மங்களை அடிப்படையாகக் கொண்டவையாக அமைந்துள்ளன. அதாவது நோன்புப் பெருநாள் தினத்தில் "ஸதகத்துல் ஃபித்ரு" என்னும் தர்மம் கடமையாக்கப்பட்டு இருப்பதுபோல், ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் "உள்ஹியா" என்று சொல்லப்படும் "குர்பானி" கொடுப்பது கடமையாக்கப்பட்டுள்ளது.

குர்பானியின் முழுமையான சட்டதிட்டங்களை இங்கே க்ளிக் செய்து படிக்கவும்.

குர்பானி சம்பந்தமாக சமூக வலைதளங்களில் நம்மிடம் கேட்கப்படும் மற்ற சில சந்தேகங்களுக்கான தெளிவுகளை கேள்வி பதில்கள் பகுதியில் கொடுத்து வருகிறோம். அதன் வரிசையில் குர்பானி தோலை யாருக்கு கொடுக்கவேண்டும்? என்ற கேள்விக்கான பதிலை இங்கே காண்போம்.


குர்பானி கொடுக்கப்படும் பிராணியின் தோலை மத்ரஸாக்கள், இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் கட்சிகளுக்கோ, தொண்டு நிறுவனங்களுக்கோ ஜமாஅத் நிர்வாகிகளிடமோ மக்கள் கொடுத்து வருகின்றனர். இவற்றில் எவையெல்லாம் மார்க்க அடிப்படையில் அனுமதிக்கப்பட்டது என்பதை குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் நாம் முடிவு செய்யவேண்டும்.

செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

ஹஜ்ஜுக்கு சென்றிருக்கும்போது கணவன் மரணித்துவிட்டால்...

கேள்வி: ஹஜ்ஜுக்கு சென்றிருக்கும் பெண்மணியின் கணவன் மரணித்துவிட்டால் இத்தாவை எப்படி கடைபிடிக்க வேண்டும்? ஹஜ் கிரியைகளை அந்த பெண்மணி எவ்வாறு நிறைவேற்றுவது?


பதில்:

"இத்தா" என்ற பெயரில் மார்க்கத்திற்கு மாற்றமான நடைமுறைகளும் மூடநம்பிக்கைகளும் மக்களிடம் வேரூன்றிப் போயிருப்பதால்தான் இப்படியான சந்தேகங்களும் வருகின்றன. கணவனை இழந்த பெண்கள் தங்கள் மறுமணத்தைத் தள்ளிப்போட்டு (காத்திருக்கும்) குறிப்பிட்ட காலகட்டம்தான் "இத்தா" என்பதாகும். அதனால் ஒரு பெண்மணி ஹஜ் கடமையை நிறைவேற்ற சென்றிருக்கும்போது கணவன் மௌத்தாகிவிட்டால் தன் ஹஜ் கிரியைகளைத் தொடர மார்க்கத்தில் எந்த தடையுமில்லை.

அதேபோல, எல்லாப் பெண்களுக்கும் எவையெல்லாம் இத்தாவின் சட்டங்களாக சொல்லப்படுள்ளதோ அந்த சட்டங்கள்தான் ஹஜ்ஜில் உள்ள பெண்மணிக்கும் பொருந்தும். அதாவது, இத்தாவுக்காக வரையறுக்கப்பட்ட அந்த நான்கு மாதங்கள் பத்து நாட்களுக்குள் சில விஷயங்களை மட்டும் இஸ்லாம் தடை செய்கிறது.

சனி, 5 ஆகஸ்ட், 2017

அல்குர்ஆன் 2:102 - வது வசனம் ஓர் பார்வை


வ்ஹீத்வாதிகள் என்று தம்மை அறிமுகப்படுத்திக் கொள்வோரிடையே தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் ஏனைய ஜமாஅத்திற்குமிடையில் சூனியம் என்ற ஒன்று, மிகப்பெரிய இடைவெளியை ஏற்படுத்தும் பங்கை வகிக்கிறது.

'சூனியம் என்ற ஒன்று இருக்கிறது; அது  இருப்பதால்தான் அல்லாஹ் சூனியம் பற்றி  சொல்லிக்காட்டுகிறான்; ஆகவே சூனியம் இல்லை என்று தவ்ஹீத் ஜமாஅத் சொல்வது அல்லாஹ் அங்கீகரித்த ஒன்றை மறுப்பதாகும்; சூனியக்காரன் வைத்த சூனியம் அல்லாஹ் நாடாமல் பலிக்காது; ஆனால் அல்லாஹ் நாடினால் பலிக்கும்' என்பது அவர்களின் வாதம்.

'சூனியம் என்பது இருக்கிறது; ஆனால் சூனியம் என்பதற்கு நீங்கள் வைக்கும் விளக்கமும் அதன் மீதுள்ள உங்கள் நம்பிக்கையும் தவறு; அதை செயல்படுத்த அல்லாஹ் நாடமாட்டான்; அல்லாஹ் நாடுவான் என்று நீங்கள் சொல்வது தவறு' என்று இஸ்லாமிய அடிப்படைகளின் மூலம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உறுதிபட சொல்கிறது.

வெள்ளி, 22 ஜனவரி, 2016

சூனியத்தை நம்புவது இணைவைத்தலே

சூனியத்தை நம்புவது இணைவைத்தலே.


சூனியத்தால் பாதிப்பு ஏற்படும் என நம்புவது 
இணைவைத்தலே!

சூனியத்தால் பாதிப்பு ஏற்படும் என்று நம்புவது அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் குற்றமாக அமைந்துள்ளது.

அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கக் கூடாது என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம்.

இரண்டு கடவுள்களில் அல்லாஹ்வும் ஒருவன் என்றோ, மூன்று கடவுள்களில் அல்லாஹ்வும் ஒருவன் என்றோ நம்புவது தான் இணை கற்பித்தல் என்று சிலர் நினைக்கின்றனர். இதுவும் இணைகற்பித்தல் தான் என்றாலும் இணைகற்பித்தல் இதை விட விரிவான அர்த்தம் கொண்டதாகும்.

அல்லாஹ்வுக்கு ஏராளமாக பண்புகள் உள்ளன. அந்தப் பண்புகளில் ஏதாவது ஒரு பண்பு அல்லாஹ்வுக்கு இருப்பது போல் ஒரு மனிதனுக்கு உள்ளது என்று ஒருவன் நம்பினால் அந்தப் பண்பு விஷயத்தில் அல்லாஹ்வைப் போல் அந்த மனிதனைக் கருதியவர்களாக ஆகிவிடுவான். அதாவது அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தவனாகி விடுவான்.
இதைப் பின்வரும் வசனங்களில் இருந்து நாம் அறிந்து கொள்ள இயலும்.

அவன் நமக்கு உதாரணம் கூறுகிறான். அவனை (நாம்) படைத்திருப்பதை மறந்து விட்டான். "எலும்புகள் மக்கிய நிலையில் அதை உயிர்ப்பிப்பவன் யார்?'' என்று கேட்கிறான்.
திருக்குர்ஆன் 36:78

அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்.
திருக்குர்ஆன் 42:11

அவனுக்கு நிகராக யாருமில்லை.
திருக்குர்ஆன் 112:4

அல்லாஹ்வைப் போல் கேட்பவன் இல்லை. அவனைப் போல் பார்ப்பவன் இல்லை. அவனைப் போல் செயல்படுபவன் இல்லை என்பது இதன் கருத்தாகும்.
அல்லாஹ் ஒரு மனிதனின் காலை முறிக்க நினைக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். பெரிய அரிவாளை எடுத்து வந்து அந்த மனிதனின் காலை அல்லாஹ் வெட்ட மாட்டான். அந்த மனிதனைத் தொடாமலே எந்தக் கருவியையும் பயன்படுத்தாமலே முறிந்து போ என்பான். அது முறிந்து விடும்.
ஆனால் ஒரு மனிதன் இன்னொரு மனிதனின் காலை முறிக்க நினைத்தால் அரிவாளையோ, உருட்டுக்கட்டையையோ எடுத்து வந்து காலைத் தாக்கியே முறிக்க முடியும்.

அல்லாஹ் ஒருவனை மன நோயாளியாக ஆக்க நினைத்தால் மன நோயாளியாக ஆகு என்பான். உடனே அந்த மனிதன் மன நோயாளியாக ஆகிவிடுவான். ஆனால் ஒரு மனிதன் இன்னொரு மனிதனை மன நோயாளியாக ஆக்க நினைத்தால் அதற்குரிய மாத்திரைகளை அல்லது மருந்தை அவனுக்குள் செலுத்தி, அல்லது மூளை சிதையும் அளவுக்கு தலையில் தாக்கியே மன நோயாளியாக ஆக்க முடியும்.
இந்த விஷயத்தில் அல்லாஹ்வுக்கும், மனிதனுக்கும் உள்ள வித்தியாசம் பளிச்சென்று தெரிகிறது.

அவன் எதைச் செய்ய நாடுகிறானோ ஆகு என்பான்; உடனே ஆகிவிடும் என்று அல்லாஹ் திருக்குர்ஆனில் 2:117, 3:47, 3:59, 6:73, 16:40, 19:35, 36:82, 40:68, ஆகிய வசனங்களில் தெளிவுபடக் கூறுகிறான்.

ஆகு என்று சொல்லி ஆக்கும் வல்லமை அல்லாஹ்வுக்கு மட்டுமே உண்டு. ஆனால் சூனியத்தால் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்று நம்புவோர் சூனியக்காரனை எந்த இடத்தில் வைக்கிறார்கள்?
சூனியக்காரன் உருட்டுக்கட்டையால் காலை முறிப்பான் என்று நம்புவதில்லை. அல்லாஹ்வைப் போல் ஆகு என்று கட்டளையிட்டு பாதிப்பை ஏற்படுத்துவான் என்று தான் நம்புகிறார்கள்.

சூனியக்காரன் எந்த மருந்தையும் செலுத்தாமல் ஆகு எனக் கூறி ஒருவனைப் பைத்தியமாக ஆக்க வல்லவன் என்று நம்புகிறார்கள்.

ஒரு மனிதன் இன்னொரு மனிதனைக் கவலைப்படுத்த, காயப்படுத்த உலகில் எந்த வழிமுறைகள் உள்ளனவோ அவற்றில் எதையும் பயன்படுத்தாமல் மந்திர சக்தியின் மூலமாக ஒருவன் மற்றவனுக்குப் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்று நம்புகின்றனர்.

உதாரணமாக ஒரு மனிதன் இன்னொரு மனிதனைக் கத்தியால் குத்தலாம். அல்லது இருவருமே கத்தியால் குத்திக் கொள்ளலாம். இதனால் ஒருவருக்கோ அல்லது இருவருக்குமோ பாதிப்பு ஏற்படும்.
இது போன்று ஒருவருக்கொருவர் பாதிப்புகளை ஏற்படுத்தலாம்..

ஒருவர் இன்னொருவரைத் திட்டுகின்றார்; அல்லது அவதூறு சொல்கின்றார் என்றால், யாரைத் திட்டுகின்றாரோ அல்லது அவதூறு சொல்கின்றாரோ அவரைக் கவலையடையச் செய்யலாம்.

இது போன்ற வழிகளில் ஒரு மனிதன் இன்னொரு மனிதன் மீது பாதிப்பை ஏற்படுத்தலாம். இதைச் செய்வதற்காக தனியாக கற்றுத்தேறும் அவசியம் இல்லை. யாருக்கு எதிராக யாரும் இதைச் செய்ய முடியும்.

உலகத்தில் மனிதர்கள் சக மனிதர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்துவதற்கு அல்லாஹ் எந்த வழிமுறையை ஏற்படுத்தியுள்ளானோ அந்த வழிமுறைகள் தவிர மற்ற அனைத்து வழிமுறைகளும் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவை.

பாதிப்பு ஏற்படுத்தப்பட வேண்டிய நபரைத் தொடாமல், அருகில் வராமல், அவரைப் பார்க்காமல் எங்கோ ஓரிடத்தில் இருந்து கொண்டு அவருக்குப் பாதிப்பை ஏற்படுத்துவார் என்று நம்புகின்றனர்.

யாருக்குப் பாதிப்பை ஏற்படுத்த வேண்டுமோ அவரின் சட்டை, வியர்வை, காலடி மண், தலைமுடி இது போன்றவற்றை வைத்துக் கொண்டு அதனை பொம்மை போல் செய்து பாதிப்பு ஏற்படுத்த வேண்டியவரின் பெயரை அந்தப் பொம்மைக்கு வைத்து அந்த பொம்மையின் வயிற்றில் குத்தினால் அவரது வயிற்றுக்கு பாதிப்பு ஏற்படும். அந்தப் பொம்மையின் கண்ணைக் குத்தினால் இவரின் கண்ணுக்கு பாதிப்பு ஏற்படும். இது தான் சூனியம் என்று மக்கள் நம்புகின்றனர். உடலுக்கு மட்டுமின்றி மனதிலும் பாதிப்பை ஏற்படுத்த சூனியக்காரனால் இயலும் என்று நம்புகின்றனர்.

ஒருவருக்குப் பாதிப்பை ஏற்படுத்த எந்த வழிமுறைகளை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளானோ அவற்றில் எந்த ஒன்றையும் சூனியக்காரன் செய்ய மாட்டான்.
சூனியத்தால் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்று நம்பக் கூடியவர்கள் சூனியக்காரன் அல்லாஹ்வைப் போல் செயல்படும் திறன் படைத்தவன் என்று தான் நம்புகிறார்கள்.

சூனியக்காரன் தனது சுயமான ஆற்றலால் இப்படிச் செய்யவில்லை. அல்லாஹ் அவனுக்கு அந்த ஆற்றலைக் கொடுத்துள்ளதால் தான் அப்படிச் செய்ய முடிகிறது. இது எப்படி இணைவைத்தலாகும்? என்று விதண்டாவாதம் செய்கின்றனர்.

நாங்களும் தவ்ஹீத்வாதிகள் தான் என்று சொல்லிக் கொள்ளும் கூட்டத்தினரும் இதே பதிலைச் சொல்லி இணைவைப்பை நியாயப்படுத்தப் பார்க்கின்றனர்.
இந்த வாதத்தைப் பார்க்கும் போது இவர்கள் ஏகத்துவத்தின் அரிச்சுவடியைக் கூட படிக்கவில்லை என்பது தெளிவாகிறது.

எல்லா படைப்பினங்களின் செயல்பாடுகளும் அல்லாஹ் கொடுத்த அடிப்படையில் நடப்பவைதான்.
நாம் பேசுகிறோம்; பார்க்கிறோம்; கேட்கிறோம்; உண்ணுகிறோம்; பருகுகிறோம்; ஓடுகிறோம்; ஆடுகிறோம்; இல்லறத்தில் ஈடுபடுகிறோம் என்றால் அவை அனைத்துமே நாமாக உருவாக்கிக் கொண்டதல்ல. அல்லாஹ் கொடுத்த அடிப்படையில் தான் இவற்றை நாம் செய்ய முடிகிறது.

ஆனால் அல்லாஹ் மனிதனுக்கு ஏராளமான ஆற்றலைக் கொடுத்து இருந்தாலும் ஒருக்காலும் தனக்கு இருப்பது போன்ற ஆற்றலை யாருக்கும் கொடுக்க மாட்டான். எனக்கு இணை இல்லை என்று அல்லாஹ் சொல்வதில் இது அடங்கியுள்ளது.

"சந்ததியை ஏற்படுத்திக் கொள்ளாத அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஆட்சியில் அவனுக்குப் பங்காளி இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்லை'' என்று (முஹம்மதே!) கூறுவீராக! அவனை அதிகம் பெருமைப்படுத்துவீராக!
திருக்குர்ஆன் 17:111

அவனுக்கே வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் உள்ளது. அவன் பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அதிகாரத்தில் அவனுக்கு எந்தப் பங்காளியும் இல்லை. அவன் ஒவ்வொரு பொருளையும் படைத்தான். அதைத் திட்டமிட்டு அமைத்தான்.
திருக்குர்ஆன் 25:2

தனக்கே உரித்தான எந்தத் தன்மையையும் யாருக்கும் அல்லாஹ் கொடுக்க மாட்டான் என்பதை அழகான உதாரணத்தின் மூலம் அல்லாஹ் மேலும் விளக்குவதைப் பாருங்கள்!

உங்களில் ஒருவரை விட மற்றவரை செல்வத்தில் அல்லாஹ் சிறப்பித்திருக்கிறான். (செல்வத்தால்) சிறப்பிக்கப்பட்டோர் தமது செல்வத்தைத் தமது அடிமைகளிடம் கொடுத்து, தங்களுக்குச் சமமாக அவர்களை ஆக்குவதில்லை. அல்லாஹ்வின் அருட்கொடையையா இவர்கள் நிராகரிக்கிறார்கள்?
திருக்குர்ஆன் 16:71

அல்லாஹ் மனிதர்களுக்கு எந்த அளவு ஆற்றலை அளிப்பான் என்று இங்கே அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். அதாவது தனக்கே உரித்தான எந்தத் தன்மையையும் அல்லாஹ் யாருக்கும் கொடுக்கவே மாட்டான் என்பதுதான் அந்த அடிப்படை.
இந்த அடிப்படையை விளங்கிக் கொண்ட யாரும் தன்னைப் போன்று செயல்படும் ஆற்றலை அல்லாஹ் சூனியக்காரனுக்கு வழங்குவான் என்று சொல்லவே மாட்டார்.

இந்த மனிதன் குழந்தையைக் கொடுப்பான்; ஆனால் அவனாகக் கொடுப்பதில்லை. அல்லாஹ் கொடுத்த ஆற்றல் மூலம் இதைச் செய்கிறான் என்று சொல்லி விட்டால் அது இணைவைத்தல் இல்லை என்று ஆகிவிடுமா? என்பதை இவர்கள் சிந்திக்க வேண்டும்.
ஒருவன் சூரியனை வணங்குகிறான். சூரியனுக்கு சுயமான ஆற்றல் இல்லை. ஆனால் அல்லாஹ் சூரியனுக்கு அந்த ஆற்றலை வழங்கியுள்ளான் என்று சேர்த்துக் கொண்டால் அது இணை வைத்தல் இல்லை என்று ஆகிவிடுமா?

மக்காவில் வாழ்ந்த காஃபிர்களும் அல்லாஹ்வை நம்பினார்கள். அத்துடன் வேறு சிலரையும் வணங்கி வந்தனர்.

இவ்வாறு மற்றவர்களை வணங்கும் போது அவர்களெல்லாம் கடவுள்கள் என்ற நம்பிக்கையோ, அவர்களுக்கு அனைத்து ஆற்றலும் உண்டு என்ற நம்பிக்கையோ அவர்களிடம் இருக்கவில்லை.
எனவே இது இணைகற்பித்தலில் சேராது என்று வாதிட்டு அவர்களும் இதே நியாயத்தைத் தான் சொன்னார்கள். அல்லாஹ் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

மேலும் சூனியக்காரனுக்கு எந்த ஆற்றலும் இல்லை என்று திருக்குர் ஆன் தெளிவாகச் சொல்கிறது.
அவர்கள் செய்திருப்பது சூனியக்காரனின் சூழ்ச்சி. (போட்டிக்கு) வரும் போது சூனியக்காரன் வெற்றி பெற மாட்டான்''
(அல்குர்ஆன் 20 : 69)

"நீங்கள் கொண்டு வந்திருப்பது சூனியமாகும். அல்லாஹ் அதை ஒழிப்பான். குழப்பவாதிகளின் செயலை அல்லாஹ் மேலோங்கச் செய்வதில்லை''
(அல்குர்ஆன் 10 : 81. 82)

மழையைப் பொழிவிக்கும் அதிகாரம்

அல்லாஹ்விற்குரியது. இந்த ஆற்றல் நட்சத்திரத்திற்கு இருப்பதாக நம்பும் நட்சத்திர ஜோசியத்தை சூனியக்கலை என்றும், அவ்வாறு நம்புபவர்கள் காஃபிர்கள் என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : யார் நட்சத்திர ஜோசியத்தைக் கற்றுக் கொள்கிறாரோ அவர் அதன் மூலம் சூனியத்தின் ஒரு பகுதியைத் தவிர வேறெதையும் கற்றுக் கொள்ள மாட்டார். (கற்பதை) அதிகப்படுத்துபவன் (சூனியத்தை கற்பதை) அதிகப்படுத்திக் கொள்கிறான்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : நஸாயீ (2000)

ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹுதைபியா எனுமிடத்தில் எங்களுக்கு சுப்ஹுத் தொழுகை தொழுவித்தார்கள். அன்றிரவு மழை பெய்திருந்தது. தொழுது முடித்ததும் மக்களை நோக்கி நேராகத் திரும்பி, "உங்கள் இறைவன் என்ன கூறினான் என்பதை நீங்கள் அறிவீர்களா?'' என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்'' என்று கூறினர். அப்போது "என்னை நம்பக் கூடியவர்களும் (என்னை) மறுக்கக் கூடியவர்களுமாக என் அடியார்கள் (இரு பிரிவினராக) உள்ளனர். "அல்லாஹ்வின் தயவாலும் அவன் கருணையாலும்தான் நமக்கு மழை பொழிந்தது' எனக் கூறியவர்கள் என்னை நம்பி இராசிபலனை மறுத்தவர்களாவர். இன்ன இன்ன ராசிபலனால் (எங்களுக்கு மழை பொழிந்தது) எனக் கூறியவர்கள் என்னை மறுத்து, ராசிபலனை நம்பியவர்களாவர்' என இறைவன் கூறினான்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : புகாரி 1038

இராசிபலன் என்பது சூனியக்கலை ஆகும். அது ஒரு ஏமாற்று வித்தையாகும். அதனால் நன்மையோ தீமையோ ஏற்படும் என்று நம்புவது இணைவைத்தலாகும் என்பதை மேற்கண்ட நபிமொழிகளிலிருந்து நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : விதியை மறுப்பவன், நிரந்தரமாக மது அருந்துபவன், சூனியத்தை உண்மை என்று நம்புபவன், (பெற்றோருக்கு) மாறு செய்பவன் ஆகியோர் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள்.
அறிவிப்பவர் : அபுத்தர்தா (ரலி) நூல் : அஹ்மது (26212)

எனவே சூனியத்தினால் பாதிப்பு ஏற்படும் என்று நம்புவது இணைவைப்புக் கொள்கையாகும். இது போன்ற இணைவைப்புக் கொள்கையிலிருந்து அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக.


https://www.facebook.com/thakbeermulakkam/videos/1742268776002203/

புதன், 6 மே, 2015

வஹி மட்டுமே மார்க்கம்

சஹாபாக்கள் கண்ணியமிக்கவர்கள் தவறு செய்ய நினைக்காதவர்கள் ஆனால் எவ்வளவு தான் நம்பிக்கையான சஹாபியாக  இருந்தாலும் அவரும் மனிதர் தான் அவரை அறியாமல் பிழை செய்ய கூடியவர்கள் தான் தவறுக்கு அப்பாற்பட்ட மலக்குமார்கள் இல்லை என்பதை நிரூபிக்க பல ஹதீஸ்களை ஆதாரம்  காட்ட இயலும்  அந்த வகையில் மிகச்சிறந்த ஹதீஸ்


1697. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"இறந்தவருக்காக அவருடைய குடும்பத்தார் அழுவதன் காரணமாக இறந்தவர் மண்ணறையில் (கப்று) வேதனை செய்யப்படுகிறார்" என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் என ஆயிஷா (ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: இப்னு உமர் தவறாக விளங்கிக் கொண்டார். (நபி (ஸல்) அவர்கள் அப்படிச் சொல்லவில்லை.) "இறந்தவர் தன் (வாழ்நாளில் புரிந்த) சிறிய, பெரிய பாவங்களின் காரணத்தால் வேதனை செய்யப்படுகிறார். அவருடைய குடும்பத்தாரோ, இப்போது அவருக்காக அழுதுகொண்டிருக்கின்றனர்" என்றுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இ(ப்னு உமர் அறிவித்திருப்ப)து எப்படியிருக்கிறதென்றால், (குறைஷித் தலைவர்களான) இணைவைப்பாளர்கள் பத்ருப்போரில் கொல்லப்பட்டு எறியப்பட்டிருந்த பாழுங்கிணற்றுக்கு அருகில் நின்றுகொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏதோ பேசினார்கள். (அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் "உயிரற்ற சடலங்களிடமா பேசுகிறீர்கள்?" என்று உமர் (ரலி) அவர்கள் கேட்க,) "நான் கூறுவதை அவர்கள் செவியுறுகிறார்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்ததாக இப்னு உமர் தவறாகவே விளங்கிக் கொண்டார்.

"நான் அவர்களுக்குச் சொல்லிவந்ததெல்லாம் உண்மை என்று இப்போது அவர்கள் அறிகிறார்கள்" என்றுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ("இப்போது நான் கூறுவதை அவர்கள் செவியுறுகிறார்கள்" என்று சொல்லவில்லை).
பிறகு, (இறந்தவர்கள் நாம் பேசுவதைச் செவியுறுவதில்லை என்ற தமது கருத்திற்குச் சான்றாக) ஆயிஷா (ரலி) அவர்கள் (பின்வரும்) வசனங்களை ஓதினார்கள்:
(நபியே!) இறந்தவர்களை உங்களால் கேட்கச் செய்ய முடியாது (27:80).
(நபியே!) மண்ணறைகளில் (கப்று) இருப்பவர்களை உங்களால் செவியுறச்செய்ய முடியாது (35:22).

"நரகத்தில் அவர்கள் தங்களின் இருப்பிடங்களில் ஒதுங்கும்போது (இந்நிலை ஏற்படும்)" என ஆயிஷா (ரலி) அவர்கள் (விளக்கம்) கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.(முஸ்லீம் 1697)


1698. அம்ரா பின்த் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"உயிரோடிருப்பவர் அழுவதன் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார்" என அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாக ஆயிஷா (ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், "அல்லாஹ். அபூஅப்திர் ரஹ்மானை மன்னிப்பானாக! அவர் நிச்சயமாக பொய்யுரைக்கவில்லை; எனினும், அவர் மறந்திருக்கலாம். அல்லது தவறாக விளங்கியிருக்கலாம்; (நடந்தது இதுதான்:) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு யூதப் பெண்ணின் பிரேதத்தைக் கடந்துசென்றார்கள். அவளுக்காகச் சிலர் அழுதுகொண்டிருந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இவர்கள் இவளுக்காக அழுகின்றனர். இவளோ தனது சவக்குழியில் வேதனை செய்யப்படுகிறாள்" என்றுதான் கூறினார்கள்" என்று பதிலளித்தார்கள்.(முஸ்லீம் 1698)

குரானுக்கு  முரண் என்று ஹதீஸை ஒதுக்க கூடாது என்று சொல்லும்  ஆய்வாளர்கள் ஆயிஷா ரலி அவர்களின்  ஆய்வை என்ன சொல்ல போகிறார்கள் ??