தலைப்பு:
“சட்டசபையில் முஸ்லிம் சிறைவாசிகளுக்கு ‘தீவிரவாதி’ பட்டம் சூட்டியவர்கள் யார்?
அவர் மேற்கோள்காட்டிய 1999 மார்ச் 23 அன்று நடந்த சட்டசபை விவாதம் என்பது, அதற்கு சில நாட்களுக்கு முன்பு பிப்ரவரி மாதம் தமிழக சிறைகளில், கோவை குண்டுவெடிப்பில் கைதான சிறைவாசிகளுக்கும், சிறைக் காவலர்களுக்கும் இடையே நடந்த மோதலினால் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் குறித்த விவாதம்.
சிறையில், போதைப்பொருட்கள், மதுபானங்கள், பயங்கர ஆயுதங்கள் பதுக்கப்பட்டு உள்ளது. தீவிரவாதிகளால் சிறை அதிகாரிகள் உயிருக்கு ஆபத்து என்றெல்லாம் அன்றைக்கு பத்திரிக்கைகள் வழக்கம் போல வதந்திகளை வாந்தி எடுத்தன.
அதன் விளைவாக, அன்றைய சட்டமன்ற உறுப்பினர்களான வேலூர் சி.ஞானசேகரன் (த.மா.கா), திருப்பூர் கே.சுப்பராயன் (சி.பி.எம்), ஐ. கணேசன் (பா.ம.க.), சி.வேலாயுதம் (பா.ஜ.க.), பேராசிரியர் தீரன், டாக்டர் க. கிருஷ்ணசாமி, சு. திருநாவுக்கரசு, ஆகியோர் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். அந்த விவாதத்தின் போது, சிறையில் கலகம் செய்தவர்களை குறிப்பிடும்போது, ‘தீவிரவாதிகள்’ என்ற வார்த்தையை முதன்முதலாக த.மா.கா. உறுப்பினர் சி.ஞானசேகரன் தான் 4 முறை குறிப்பிடுகிறார்.
அடுத்து பேசிய கே. சுப்பராயன், அல் உம்மா சிறைவாசிகளை நேரடியாக தீவிரவாதிகள் என்று குறிப்பிடவில்லை. 'முஸ்லிம் தீவிரவாதம்' என்று இத்தகைய சம்பவங்களை சுருக்கி விடக்கூடாது. இது உருவாவதற்கு காரணமே ‘இந்து தீவிரவாதம்’ தான் என்கிறார். மேலும், “இந்தியாவில் பயங்கரவாதம் ஜனசங்கம் தோன்றியதிலிருந்து இருக்கிறது” என்று கூறி, இந்துத்துவ இயக்கங்களை சாடுகிறார்.
அவரைத் தொடர்ந்து பேசிய பா.ம.க. உறுப்பினர் ஐ. கணேசன், பகிரங்கமாகவே குற்றம்சாட்டி ‘தீவிரவாதிகள்’ என்ற வார்த்தையை 6 தடவை பயன்படுத்துகிறார்.
இந்த விவாதத்தின் போது, முதல்வர் கலைஞர், சு.திருநாவுக்கரசு, டாக்டர். கிருஷ்ணசாமி, பேராசிரியர் தீரன் ஆகியோர் மட்டுமே சிறைவாசிகளை தீவிரவாதிகள் என்று நேரடியாக குறிப்பிடவில்லை.
இந்த விவாதத்தின் போது அவையில் இருந்த உறுப்பினர்களான ஜே. எம். ஹாரூன், நாகை தொகுதி எம்.ஜி.கே. நிஜாமுதீன் மற்றும் புவனகிரி தொகுதி ஏ.வி. அப்துன் நாசர் ஆகியோர் பேசுவதற்கு முற்பட்டபோது, அவர்கள் கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் கொடுக்கவில்லை என்று கூறி சபாநாயகர் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் அனுமதி மறுத்து விடுகிறார். அவர்கள் என்ன பேச முற்பட்டார்கள் என்று அவைக் குறிப்பில் இல்லை.
ஒரு கட்டத்தில் புவனகிரி நாசர் குறுக்கே புகுந்து, "முஸ்லிம் தீவிரவாதிகள்” என்று குறிப்பிடுவதைத் தவிர்த்து, “தீவிரவாதிகள்” என்று மட்டும் குறிப்பிடும்படி கோரிக்கை வைக்கிறார். (இந்த இடத்தில், ‘முஸ்லிம் தீவிரவாதி’ என்று மதத்தை இணைப்பதைத் தான் நாசரும் ஆட்சேபிட்கிறார். ‘தீவிரவாதிகள்’ என்ற பொதுவான வார்த்தைப் பயன்பாட்டை அவர் எதிர்க்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.)
பா.ஜ.க. உறுப்பினர் சி.வேலாயுதம் தனது உரையில், மதத்தின் பெயரால் அதன் பின்னணியில் தவறுகள் நடக்கக்கூடாது. மதத் தலைவர்கள் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறார்களா? என்பதைக் கண்டறியவேண்டும் என்கிறார்.
அவருக்கு உடனடியாக பதில் கொடுத்த முதல்வர் கலைஞர், "மதத்தின் பின்னணி எதிலும் இருக்கக்கூடாது என்பது உறுப்பினர் வேலாயுதத்தின் வாதம்.” அப்படியெனில், "பாபர் மசூதி எந்த பின்னணியில் இடிக்கப்பட்டது?” என்று கேட்டு அவரை வாயடைக்கச் செய்கிறார்.
மேலும் அவர், "ஒருசிலர்தான் தொழுகை நடத்திய இடம் என்று சொல்கின்றார்கள். உண்மையிலேயே அது ஒரு பாழடைந்த, பாபர் கட்டிய ஒரு கட்டடம். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு முன்னாலேயே அங்கு இராமர் விக்கிரகம் வைக்கப்பட்டிருந்தது." என்கிறார்.
அதற்குப் பதிலளித்த,மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி, "பாபர் எழுப்பிய அந்த மண்டபம் பாழடைந்து கிடக்கிறது. அங்கே புதர்களும் மண்டிக் கிடக்கின்றன, பாம்புகளும் தேள்களும் ஊர்கின்றன. அதனால் மக்களுக்கு அபாயம் என்ற கருத்திலா அந்த இடம் இடிக்கப்பட்டது. இல்லை. இது முஸ்லிம்களுடைய புனித இடமாகக் கருதப்படுகிறது. இசுலாமியர்களுடைய பேரரசராக விளங்கிய பாபரால் கட்டப்பட்டது என்பதற்காக, அந்தக் காரணத்திற்காக இடிக்கப்பட்டதேயல்லாமல் அது பாழடைந்த கட்டடம் என்பதற்காக இடிக்கப்படவில்லை. பாழடைந்த கட்டடம் என்பதற்காக இடிக்கப்பட்டால், இப்போதுள்ள பாரதிய ஜனதாவின் ஆட்சி அதைப் புதிய கட்டடமாகக் கட்டித் தரலாமே? ஏன் இன்னும் அதற்கான முயற்சி தொடங்கப்படவில்லை?" என்று கேட்கிறார்.
சி.பி.எம். உறுப்பினர் கே. சுப்பராயன், இது ஒரு சமூகப் பிரச்சனை, இதற்கு அரசியல் ரீதியான தீர்வு வேண்டும் என்று கேட்கிறார்.
அவருக்குப் பதிலளித்த முதல்வர் கலைஞர், “அந்தத் தீர்வை உங்கள் கட்சி சார்பாக எனக்கு எழுதி அனுப்புங்கள். நான் யோசிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு, “இந்த தீர்வை கூட மாநில அரசு எடுக்க முடியாது. அது அயோத்தியிலிருந்து ஆரம்பம் ஆக வேண்டும்” என்று கூறி, இடிக்கப்பட்ட பாபரி மஸ்ஜிதை மீண்டும் கட்டி கொடுப்பதன் மூலம் தான் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்பதை அவையில் சூசகமாக முன்வைக்கிறார்.
இறுதியாக அனைத்துக்கும் பதில் அளித்த சம்பந்தப்பட்ட சட்டத்துறை அமைச்சர் ஆலடி அருணா, பத்திரிகைகளில் வந்தவை மிகைப்படுத்தப்பட்டவை என்று கூறி, சிறைகளில் நடந்த உண்மை நிகழ்வுகளை புள்ளிவிபரங்களுடன் பட்டியலிடுகிறார்.
அப்போது, “அல் உம்மாவை சேர்ந்தவர்கள் 262 பேர்,
ஜிஹாத் கமிட்டியினர் 6 பேர், தமுமுக வை சேர்ந்தவர்கள் 8 பேர், பிற இயக்கத்தினர் 27 பேர். ஆகமொத்தம் 303 ‘முஸ்லிம் தீவிரவாதிகள்’ சிறைக்கைதிகளாக உள்ளனர்” என்று கூறுகிறார். (புவனகிரி நாசரின் ஆட்சேபனையைக் கூட அவர் கண்டு கொள்ளவில்லை)
ஆலடி அருணா தனது பதிலுரையில், மூன்று முறை ‘முஸ்லிம் தீவிரவாதிகள்’ என்றும் 14 முறை ‘தீவிரவாதிகள்’ என்றும் பயன்படுத்தி இருக்கிறார்.
ஆக இந்த விவாதத்திலிருந்து முஸ்லிம் சிறைவாசிகள் தீவிரவாதிகளாகத் தான் பெரும்பாலும் பார்க்கப்பட்டார்கள் என்பது ‘உள்ளங்கை நெல்லி’யாக தெரிகிறது.
சமஉ முஸ்தபா முன்வைத்த ஆதாரத்தின்படி, திமுக மட்டுமல்ல, த.மா.கா, பா.ம.க. உறுப்பினர்களும் முஸ்லிம் சிறைவாசிகளை தீவிரவாதிகள் என்றே குறிப்பிட்டு பேசி இருக்கிறார்கள்.
இப்போது நாம் முஸ்தபாவிடம், அவர் எதை ஆதாரமாகக் கொண்டு சட்டசபையில் குதித்தாரோ, அதிலிருந்து தான் நாம் கேள்வியை முன்வைக்கிறோம்.
சட்ட அமைச்சர் ஆலடி அருணா, த.மா.கா. சி.ஞானசேகரன், பா.ம.க. ஐ. கணேசன் ஆகியோர் முஸ்லிம் சிறை வாசிகளை ‘தீவிரவாதிகள்’ என்று அழைத்திருக்கும்போது, மற்ற கட்சிகளை கண்டுகொள்ளாமல், திமுக மீது மட்டும் பாய்ந்து பிராண்டியது நேர்மையான செயலா?
நான் முந்தைய தொடரில் குறிப்பிட்டதைப் போல இது அப்பட்டமான சந்தர்ப்பவாதம். திமுகவுக்கு எதிராக முஸ்லிம்களைத் திசைத் திருப்பும் ஈனச் செயல்.
( சமஉ முஸ்தபா பேசியதற்கான நமது எதிர் விமர்சனம் இத்துடன் முடிகிறது. அடுத்து காங்கிரஸ்,அ.தி.மு.க. தி.மு.க.வை நோக்கிய நமது விமர்சன பார்வை தொடரும் இன்ஷாஅல்லாஹ்)
குறிப்பு: 1999 மார்ச் 23 சட்டசபை விவாத அவைக் குறிப்பை முழுமையாக படிக்க விரும்பவோர், கமெண்ட் பாக்ஸில் உள்ள Link ஐ கிளிக் செய்து, Record - Date ஐ தேர்வு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது என்னைத் தொடர்பு கொண்டாலும் PDF File ஐ நான் வாட்சப்பில் அனுப்பி வைக்கிறேன்.
https://www.facebook.com/permalink.php?story_fbid=pfbid0XfScSz5CvygP2weHaTQQKe3ryAtP6ENUhCVjtHo7QAaora52aZmjVBDuwumfyZH7l&id=100009858432834