புதன், 2 செப்டம்பர், 2026

தமிழக முஸ்லீம் பாகம் 1

 அன்பான சகோதரர்களே!

எனது முந்தைய பதிவில், சட்டசபையில் பேசிய தவெக சமஉ வி.எம்.எஸ். முஸ்தபாவின் அபத்தமான உரையை ஒட்டி ஒரு விரிவான கட்டுரைத் தொடரை வெளியிடுவதாக குறிப்பிட்டிருந்தேன்.
அதன் அடிப்படையில், கடந்த காலங்களில் இஸ்லாமிய சமுதாயம் சந்தித்த கசப்பான சம்பவங்களை வரலாற்று நிகழ்வுகளின் அடிப்படையில் பதிவு செய்ய விரும்புகிறேன். நான் எந்த அரசியல் கட்சியை சார்ந்தவனும் அல்ல; எந்தக் கட்சியிலும் உறுப்பினராகவும் இல்லை என்பதால் இயன்றவரை பக்க சார்பின்றி இன்ஷாஅல்லாஹ் எழுத எண்ணி இருக்கிறேன்.
இந்தக் கட்டுரைத் தொடரில் காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க., போன்ற பிரதான கட்சிகள் முஸ்லிம்களுக்கு என்னென்ன கொடுமைகள் இழைத்தன. அதற்கு நாம் எப்படி எதிர்வினையாற்றினோம். பிற்காலத்தில் அவர்களின் போக்கில் ஏற்பட்ட மாற்றங்கள். அதைத் தொடர்ந்து நமது நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றம்,
மேலும் ‘தீவிரவாதம்- தீவிரவாதிகள்’ போன்ற வார்த்தைகள் முஸ்லிம்களை நோக்கி அரசியல் கட்சியினரால் தமிழ்நாட்டில் எப்போது எதனால் பயன்படுத்தப்பட்டது? போன்ற கேள்விகளுக்கும் இன்ஷா அல்லாஹ் இந்தத் தொடரில் பதில் கிடைக்கும்.
இந்தக் கட்டுரைத் தொடரை முழுமையாக படித்தால் மட்டுமே இந்த விஷயத்தில் அரசியல் கட்சிகள் மீதான நமது பார்வை தெளிவாக விளங்கும். ஒரு பகுதியை மட்டும் படித்தால், ஒரு சாராருக்குச் சாதகமாகவும், மற்றொரு சாராருக்குப் பாதகமாகவும் தோன்றும். எனவே தொடர்ந்து முழுமையாக படித்துவிட்டு கருத்துகள் பதிவிட்டால் அது ஆரோக்கியமாக இருக்கும்.
அநாகரீகமான, கேலி கிண்டல் செய்யும் பின்னூட்டங்களைத் தவிர்க்கவும். அதனால் எந்தப் பயனும் இருக்காது. கருத்துச் செறிவான பின்னூட்டங்கள் பலருக்கும் பயன் அளிக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்தக் கட்டுரைக்குக் காரணமாகவும், தூண்டுகோளாகவும் இருப்பது வி.எம்.எஸ். முஸ்தபாவின் சட்டமன்ற உரை என்பதால், முதலில் அவரை குறித்த விமர்சன பார்வையையும், சில கேள்விகளையும் முன்வைத்து தொடங்குகிறேன்.
தலைப்பு:
“முஸ்தபாவின் முனை மழுங்கிப் போன ஆயுதம்!”
சென்ற 25/08/2026 அன்று சட்டசபை மானியக் கோரிக்கை விவாதத்தின் போது, மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மதார் பதுருதீன் எனும் வி.எம்.எஸ். முஸ்தபா உரையாற்றினார்.
27 ஆண்டுகளுக்கு முந்தைய திமுக ஆட்சியில் தமிழக சட்டசபையில் நடந்த ஒரு விவாத நிகழ்வில் பல கட்சிகளின் உறுப்பினர்களால் பேசப்பட்ட உரைத் தொகுப்பை ஆதாரமாகக் கொண்டு பேச முற்பட்டவர், உணர்ச்சிப் பிழம்பான ஒரு நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறார்.
அவர் மேற்கோள்காட்டிய 23/03/1999 சட்டசபை அவைக் குறிப்பில், ‘முஸ்லிம் தீவிரவாதிகள்’ என்று 5 முறை கூறப்பட்டிருந்ததாம்!
"நான் பாதிக்கப்பட்டேன்…!” “நான் நசுக்கப்பட்டேன்…!” என்று உணர்ச்சிப் பொங்க குதித்ததைப் பார்த்தோம்.
அவர் ஆதாரமாகக் காட்டிய அவைக் குறிப்பு பக்கம் 182 முதல் 203 வரை உள்ள 22 பக்கங்களில் 5 முறை அல்ல, ஏறத்தாழ 30 முறை ‘தீவிரவாதிகள்’ என்ற வார்த்தைப் பதிவு செய்யப்பட்டுள்ளது. (அந்த அவைக் குறிப்பின் முழு விபரமும் பின்னால் குறிப்பிடுகிறேன்.)
22 பக்க உரையையும் அவர் முழுமையாக படித்துப் பார்த்து அதன் சாராம்சத்தைப் புரிந்து, உள்ளது உள்ளபடி அவர் பேசாமல், நுனிப்புல் மேய்ந்திருக்கிறார்.
அவரது கட்சி அவருக்குக் கொடுத்த அசைன்மென்ட்டை தலைமேல் ஏற்று, திமுக மீதான கண்மூடித்தனமான வெறுப்பையும், காழ்ப்புணர்ச்சியையும் மட்டுமே உமிழ்ந்து இருக்கிறார்.
கடுகளவு நேர்மையோ, நியாயமோ இல்லாமல் விஜய் மீதான விசுவாசத்தை மட்டுமே வெளிப்படுத்த முனைந்துள்ளார்.
சட்டசபையில் எதையாவது பேசி பரபரப்பை ஏற்படுத்த வேண்டும். திமுகவை டேமேஜ் செய்ய வேண்டும். முதல்வர் ஜோசப் விஜயை வரம்பு மீறி வானளாவ புகழ்ந்து பேசி அவரை குளிர்விக்க வேண்டும் அதன் மூலம் (அடுத்த புரமோசனுக்காக) முதல்வரின் குட் புக்கில் இடம் பெற வேண்டும் என்பதற்காகவே அவர் பேசி இருக்கிறார் என்பதும் தெளிவாக புரிகிறது.
அவர் நேர்மையானவராக இருந்திருந்தால், சபாநாயகர் அவருக்கு அளித்த நேரத்தைப் பயன்படுத்தி, 23/03/1999 அவைக் குறிப்பு முழுவதையும் கூட படித்திருக்க முடியும். அல்லது குறைந்தபட்சம் அவரது உரைக்கு ஆதாரமாக காட்டிய தரவின் முழு விபரங்களின் சாராம்சத்தையாவது பேசி இருக்க வேண்டும்.
அல்லது சட்டசபை வளாகத்தில் பத்திரிகையாளர்களிடமாவது அதை முழுமையாக விளக்கி, யாரெல்லாம் முஸ்லிம் கைதிகளை தீவிரவாதிகள் என்று குறிப்பிட்டார்கள் என்பதைச் சொல்லி இருக்க வேண்டும். ஆனால் அவரது நோக்கம் அதுவல்ல என்பது தெளிவாக வெளிப்பட்டது.
அப்படி செய்திருந்தால் திமுகவை மட்டும் இலக்கு வைத்து குற்றவாளி ஆக்க முடியாது. பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகளையும் மக்கள் மத்தியில் குற்றவாளியாக்க நேரிடும் என்பதால் லாவகமாக அதைத் தவிர்த்திருக்கிறார். இது அவரது நேர்மையற்ற சந்தர்ப்பவாத மற்றும் பக்கவாத அரசியலுக்கான ஆதாரம்.
(தொடர்ச்சி அடுத்த பதிவில் இன்ஷா அல்லாஹ்)

https://www.facebook.com/permalink.php?story_fbid=pfbid02SNETiRTvA3nGTCnv23dQCmQALrV8Aod81NbdRPE3fi24k1n8tZuwuTCiMysGMqFLl&id=100009858432834

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக